`மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

`முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம், ஒரு மாதத்துக்குள் மனுக்கள் மீது தீர்வு காணப்படும்’ எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூன்றாவது முறையாகச் சுதந்திர தின கொடியேற்றிள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்து பேசிய அவர், ``தியாகத்துக்கும், அமைதிக்கும் அடையாளமாகத் திகழும் தேசியக் கொடியை கோட்டை கொத்தளத்தில் ஏற்றியதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். நாம் அனைவரும் எந்த வித பேதமும் இன்றி இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
`நீர்’ தான் நாட்டின் முக்கிய ஆதாரம். அதை உணர்ந்த ஜெயலலிதா 2003-ம் ஆண்டு அனைத்து மக்களிடமும் மழை நீர் சேகரிப்பு முறையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். எனவே பொதுமக்கள், இப்போதும் மழை நீர் சேகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, தன் ஆட்சிக் காலத்தில் தமிழகப் பள்ளிகளில் இருந்த மும்மொழிக் கொள்கையை நீக்கி தமிழ் மற்றும் ஆங்கிலத்தைக் கொண்டு வந்தார். அவர்களின் வழியில் செயல்படும் தற்போதைய அரசும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. அரசு மக்கள் நலனைப் பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும்.
இதுவரை 15,000-ஆக இருந்த தியாகிகள் ஓய்வூதியம் இனி 16,000 - ஆக உயர்த்தி வழங்கப்படும். 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழகம் உருவாக்கப்பட்டது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டு தோறும் நவம்பர் 1-ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ என வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடமிருந்து வந்த கோரிக்கையைப் பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக வேலூரைத் தலைமையாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப் பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும் பிரிக்கப்படும். மேலும் வேலூரில் உள்ள கே.பி குப்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும். வருங்காலத்தில் சாதிக்க வேண்டியதை மக்களின் ஆதரவோடு சாதித்தே தீருவோம்” எனப் பேசினார்.