
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

Mango Ale, Mango Leather: Twin Opportunities for Mango!
Mango Ale என்பது பீர்-தான். ஆனால், ABV எனப்படும் Alcohol By Volume குறைவாக இருக்கும் பீர். சுவையும் கசப்பு அல்ல, இனிப்பு. இன்று உலகம் முழுக்க Low ABV பானங்களுக்கு மதிப்பும் வரவேற்பும் கூடிவருகிறது. ‘Responsible Drinking-ஐ’ பலரும் Lifestyle-ஆக மாற்றிவருகிறார்கள். அதற்கு ஏற்றபடி, Mango Ale பீரில் 3 - 5% சதவிகிதம் மட்டுமே ஆல்கஹால் உண்டு. இதனால் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் அழுகல், மதியிழத்தல் போன்ற உடல் பிரச்னைகளும் பெரும்பாலும் ஏற்படுவதில்லை. மேலும், மேற்கத்திய நாடுகளில் Low ABV பீர்களை ஆன்லைனில் விற்கவும் சமீபத்தில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பொருளாதாரக் கண்கொண்டு பார்த்தால், 2026-ம் ஆண்டில் Low ABV பானங்களின் உலகச் சந்தை மதிப்பு 42,000 கோடி ரூபாயாக உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே, கிருஷ்ணகிரியில் Mango Ale தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றைக் கொண்டுவருவது நல்ல நடவடிக்கையாக இருக்கும். சமீபத்தில் கேரளத்தில்கூட அன்னாசி, முந்திரி, ஆப்பிள் ஆகிய பழங்களிலிருந்து மதுபானம் தயாரிக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள் இடதுசாரிகள்!
கிருஷ்ணகிரியில் 4 லட்சம் டன் மாம்பழம் ஓர் ஆண்டுக்கு நமக்குக் கிடைக்கிறது. இதில் 10% மாம்பழத்தை நாம் Mango Ale தயாரிப்புக்கு ஒதுக்க முடியும். அதாவது, 40,000 டன். இந்த 40,000 டன் மாம்பழத்திலிருந்து 10,000 டன் Pulp-ஐ நாம் எடுக்க முடியும். 1 கிலோ Pulp-லிருந்து 10 Mango Ale Bottle (330 ml)-களைத் தயாரிக்கலாம். அப்படியென்றால் 10,000 டன் Pulp-க்கு 10 கோடி Mango Ale Bottle-களை நாம் உருவாக்க முடியும். சந்தையில் 330 மில்லிலிட்டர் Mango Ale பாட்டிலின் விலை சராசரியாக 200 ரூபாய். ஆகவே, 10 கோடி பாட்டில்களிலிருந்து 2,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தை நாம் அடைய முடியும். It’s a ‘Mango Masterstroke’, If we correctly execute!


Mango Leather என்பது Vegan Leather வகையறாவில் வரும் மதிப்புக்கூட்டுப் பொருள். ‘Vegan’ இன்று உணவு சம்பந்தப்பட்ட வார்த்தை மட்டுமில்லை. அது ஒரு Movement! உலகம் முழுக்க வீகன் சில்க், வீகன் டெய்ரி, வீகன் ஹனி என வீகன் பொருள்கள் பெட்ரோல், டீசல் விலையைப்போல நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கான சந்தை மதிப்பும் பெட்ரோல், டீசல் வரித்தொகை வசூலைப்போல பல லட்சம் கோடிகளில் உயர்ந்து நிற்கிறது. இந்த Innovation and Market Value ஆகிய இரண்டு அம்சங்களும் சரியாக அமைந்த மதிப்புக்கூட்டுப் பொருள்தான் மேங்கோ வீகன் லெதர்! இது நெதர்லாந்து போன்ற நாடுகளில் வளர்ந்துவரும் Sun Rise Industry-களில் ஒன்றாக இருக்கிறது. மாம்பழம் தவிர்த்து, அன்னாசி போன்ற மற்ற வகை பழங்களிலிருந்தும்கூட அந்த நாடுகள் வீகன் லெதர் தயாரிக்கின்றன. ஆனால், மாம்பழத்திலிருந்து உருவாக்கப்படும் லெதர்களுக்கு அதன் கடினத்தன்மையால் Vegan Fashion சந்தையில் தனி மதிப்பு கிடைக்கிறது.
கிருஷ்ணகிரியின் 4 லட்சம் டன் மாம்பழ விளைச்சலிலிருந்து 100,000 டன் மாம்பழத்தை நம்மால் Mango Leather தயாரிப்புக்கு ஒதுக்க முடியும். இந்த 100,000 டன் மாம்பழத்திலிருந்து மொத்தமாக 40 லட்சம் சதுர மீட்டர் அளவுள்ள வீகன் லெதரை நாம் தயாரிக்க முடியும். இந்த 40 லட்சம் சதுர மீட்டர் லெதரை நாம் ஷூ, பெல்ட், பேக்ஸ், வேலட் என எந்தவகை லெதர் பொருளாகவும் தயாரித்து, சந்தைக்குக் கொண்டுவந்து விற்கலாம். நான் முதல் பொருளான ஷூவை மட்டும் இங்கே உதாரணமாக்குகிறேன். 1 சதுர மீட்டர் லெதரில் 3 ஜோடி ஷூக்களைத் தயாரிக்க முடியும். அப்படியென்றால் 40 லட்சம் சதுர மீட்டர் லெதரிலிருந்து 1 கோடியே 20 லட்சம் ஜோடி ஷூக்களைத் தயாரிக்க முடியும். சந்தையில் ஒரு வீகன் லெதர் ஷூவின் விலை 5,000 ரூபாய். இந்த விலையை வைத்துக் கணக்கிட்டால், ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் அளவு வருமானத்தை நாம் கிருஷ்ணகிரியில் உருவாக்க முடியும்.
முக்கியமாக, கிருஷ்ணகிரியில் உருவாகும் ஷூ, வேலட் உள்ளிட்ட மேங்கோ வீகன் லெதர் பொருள்களை Louis Vuitton, Hidesign, Gucci, Steve Madden போன்ற Luxury Brand-களின் தரத்துடன் நாம் விநியோகிக்க வேண்டும். We have to understand the market trend and act accordingly!


‘Puree’: A simple & valuable plan for Tamarind!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்துக்கு அடுத்த நிலையிலுள்ள வளம், புளி!
புளிக்கு தருமபுரியைத்தான் பலரும் உதாரணம் காட்டுவார்கள். நானேகூட தருமபுரி அத்தியாயத்தில் தவறுதலாக அப்படி ஒரு உதாரணம் சொன்னேன். ஆனால், புளிக்கும் தமிழ்நாட்டில் தலைநகர் கிருஷ்ணகிரிதான். உரிகம், மத்தூர், பேரிகை, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, ராயக்கோட்டை எனப் பல பகுதிகளில், ஆண்டுக்கு 10,000 டன் அளவுக்குப் புளி விளைகிறது. இதுபோக இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய புளிச்சந்தையான பழையபேட்டை புளிச்சந்தையும் கிருஷ்ணகிரியில்தான் இருக்கிறது. முதல் இடத்தில் இருப்பது ஜார்க்கண்டின் ராஞ்சி புளிச்சந்தை.


பழையபேட்டை புளிச்சந்தை மிகப்பெரியது. புளி சீஸன் வரும் காலங்களில் கூடும். பெரும்பாலும் ஞாயிறு மற்றும் வியாழனில் சந்தையைத் திறப்பார்கள். இந்த நாள்களில் மூட்டை மூட்டையாகப் புளியைக் கொண்டுவந்து குவிப்பார்கள் விவசாயிகள். அதைப் பெறுவதற்கு ஆந்திரா, பெங்களூர் மற்றும் வடமாநிலங்களிலிருந்தும்கூட வியாபாரிகள் வந்து அதிகாலை முதலே காத்திருப்பார்கள். கோயம்பேடு சந்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அதுபோலவேதான் காட்சிகள் இருக்கும். ஆனால், அவர்கள் புளியை வியாபாரிகளுக்குக் கொடுக்கும் விலைதான் கண்ணீர் வரவைக்கும். ஒரு கிலோ புளியை 20 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கும் கொடுப்பார்கள். விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் 10, 15 ரூபாய்க்கும்கூட கொடுப்பார்கள். நான் விசாரித்த ஒரு விவசாயி, “மாம்பழத்துக்கு நிறைய Processing Unit இருக்கு. ஆனா, புளிக்கு ஒண்ணுமே இல்லை. வண்டி வாடகைக்கே கடன் சொல்லும் நிலைமை இருக்கு எங்களுக்கு…” என்று வருத்தப்பட்டார்.
புளி, மற்ற விவசாயப் பொருள்களைப் போன்றது அல்ல. ஏனென்றால், புளிக்கு இயல்பாகவே Shelf Life அதிகம். பொங்கலுக்கு உருண்டை பிடித்து வைத்தால், தீபாவளிக்கு எடுத்து ரசம் வைக்கலாம். அவ்வளவு நாள் தாங்கும். ஆகவே, புளிக்கு Shelf Life-ஐ பிரதானமாக எடுத்து எந்த மதிப்புக்கூட்டுப் பொருளையும் நம்மால் சொல்ல முடியாது. புளிக்கான மருத்துவப் பயன்பாடுகளும்கூட இன்னும் பிரபலமாகவில்லை. மாத்திரை, டானிக் போல எது செய்தாலும் வாய்ப்புகள் அறவே இல்லாத சந்தையில், வந்தவுடனே காணாமல்போகவே வாய்ப்பு அதிகம். ஆகவே, இருப்பதிலேயே ஓரளவுக்குப் பாதுகாப்பான தொழில்முனைவு சாத்தியமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தை மதிப்பும்கொண்ட ‘Tamarind Puree’ தயாரிக்கும் தொழிற்சாலையை நாம் கிருஷ்ணகிரியில் தொடங்க நான் பரிந்துரைக்கிறேன்.

கிருஷ்ணகிரியின் மொத்த புளி விளைச்சல் ஆண்டுக்கு 10,000 டன். இதில் 5,000 டன் புளியை Puree தயாரிப்புத் தொழிற்சாலைக்கு நாம் ஒதுக்க முடியும். இந்த 5,000 டன் புளியிலிருந்து 10,000 டன் அளவு Tamarind Puree-யை நாம் தயாரிக்க முடியும். ஒரு கிலோ Puree-யின் சந்தை விலை 500 ரூபாய். ஆவின் பால் பொருள்களைப்போல தரமான பேக்கேஜாகக் கொண்டுவந்தால், இன்னும் அதிக விலைக்குக்கூட கொடுக்க முடியும். Tamarind Puree-க்கு ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் நல்ல வியாபாரச் சந்தை இருக்கிறது. அங்கே தினசரி உணவுகளில் Puree-ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆக, ஏற்றுமதியும் ஒரு வாய்ப்பு நமக்கு. இப்போது அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் 500 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானத்தை நாம் கிருஷ்ணகிரியில் உருவாக்க முடியும். இது நேரடி விற்பனை மூலம் புளி விவசாயிகள் அடைகிற 75 கோடி ரூபாயைவிட, ஆறு மடங்கு அதிக வருமானம். தமிழ்நாடு விவசாயத்துறை, சூழலைப் புரிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
(இன்னும் காண்போம்)