சமூகம்
Published:Updated:

“ஹீரோவாக நடிக்கப்போகிறேன்!”

ஹரி நாடார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹரி நாடார்

மிரட்டும் ஹரி நாடார்

தோளில் புரளும் நீண்ட தலைமுடி, கழுத்து மற்றும் கைகளில் கிலோகணக்கில் தொங்கும் தங்க நகைகள், ஆடம்பர கார் பவனி என பந்தாவாக வலம் வருபவர் ஹரி நாடார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், ‘பனங்காட்டுப் படை’ கட்சி சார்பில் போட்டியிட்டு சுமார் 4,000 வாக்குகள் பெற்று, ‘நாம் தமிழர்’ கட்சியைப் பின்னுக்குத் தள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நடமாடும் நகைக்கடைபோல், ஏன் இப்படியொரு வித்தியாசமான தோற்றம்?’’

“திருநெல்வேலி மாவட்டத் தில் மேல இலந்தைக்குளம் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். ‘நிறைய தங்க நகைகள் அணிந்துகொள்ள வேண்டும்; நீளமாக தலைமுடி வளர்க்க வேண்டும்’ என்பதெல்லாம் என் சிறு வயது ஆசைகள். ஆனால், தங்க நகைகள் அணியும் அளவுக்கு அப்போது வசதியில்லை. அதனால் தலைமுடியை மட்டும் நீளமாக வளர்த்திருந்தேன். இப்போது வசதி வாய்ப்புகள் பெருகிவிட்ட பிறகு நகைகளையும் அணிந்துகொள்கிறேன்.’’

"நகைகள் எத்தனை கிலோ தேறும்... மொத்த மதிப்பு என்ன?’’

ஸ்ரீரெட்டியுடன் ஹரி நாடார்
ஸ்ரீரெட்டியுடன் ஹரி நாடார்

“மொத்தம் என்னிடம் ஏழரை கிலோ நகைகள் இருக்கின்றன. உடம்பில் அணிந்திருக்கும் நகைகள் மட்டும் மூன்று கிலோ தேறும். இன்றைய மதிப்புக்கு இந்த நகைகளின் மொத்த மதிப்பு என்னவென நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்!’’

“இவ்வளவு பெரிய வருமானத்துக்கு என்ன தொழில் செய்கிறீர்கள்?’’

“இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், இங்கே முதலீடு தேவைப்படும் தொழிலதிபர்களுக்கும் இடையே பாலமாக இருந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்துவருகிறேன். இதுதவிர, அரசு அனுமதியுடன் முறையான வகையில் வட்டித் தொழிலும் செய்துவருகிறேன்.’’

“கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, வெளிமாநிலத்தவரை ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தவறான தொழில்களை நீங்கள் செய்துவருவதாகச் சொல்கிறார்களே?’’

“அரசியல்ரீதியாக என்னைப் பழிவாங்க இதுபோன்ற திட்டமிட்ட பொய்களை சிலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர். நான் யாரையும் ஏமாற்றியிருந்தால், சம்பந்தப் பட்டவர்கள் என்மீது புகார் கொடுத்திருக்கலாமே!

நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டதும் தெருத் தெருவாகப் பிரசாரம் சென்றதும் உலகுக்கே தெரிந்த விஷயம். என்னைப் பார்க்க முடியாது என்று சொல்பவர்கள்கூட அப்போது பார்த்திருக்கலாமே. யாரும் சந்திக்க முடியாத இடத்தில் நான் இல்லை. என் சமூகத்தில் உள்ள அரசியல் கட்சியினரேகூட என் வளர்ச்சி பிடிக்காமல், என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்ற வகையில், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகின்றனர்.’’

“அரசியலில் உங்கள் புகழைக் கெடுக்க நினைப்பவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?’’

“ஹீரோவாக நடிக்கப்போகிறேன்!”

“சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று நாடார் சமுதாயம் சார்ந்த கட்சிகளே நிறைய இருக்கின்றன. இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் சமுதாய வாக்குகளால்தான் வெற்றி பெறுகின்றனர். ஆனால், பதவிகளை அடைந்த பிறகு, சமுதாயப் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுப்பதில்லை. இதையெல்லாம் நாங்கள் மக்களிடம் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் என்மீது அவதூறு பரப்பலாம் அல்லவா!’’

“உங்கள்மீது வழக்குகள் எவையும் இல்லை என்கிறீர்களா?’’

“வழக்குகள் இருக்கின்றனதான். சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக நான் செயல்பட்டதாகக் கூறி ஓர் அரசியல் வழக்கு, எங்கள் கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டபோது பஸ்ஸை எரித்ததாக ஒரு பொய் வழக்கு, ஸ்டெர்லைட் மற்றும் காவிரிப் போராட்ட வழக்குகள் என, மொத்தம் 10 வழக்குகள் என்மீது இருக்கின்றன.’’

“நடிகை ஸ்ரீரெட்டியுடன் டிக்டாக் வீடியோக்களில் கலக்குகிறீர்களே... எப்படிப் பழக்கம்?’’

“திரைப்படங்களுக்கும் நான் ஃபைனான்ஸ் செய்துவருகிறேன். அந்த வகையில்தான் ஸ்ரீரெட்டி என்னை வந்து சந்தித்தார். இதுதான் ஸ்ரீரெட்டிக்கும் எனக்குமான உறவு. ஒரு நிகழ்ச்சியின்போது ஸ்ரீரெட்டி, செல்போனில் படம்பிடித்தார். நானும்கூட செல்ஃபிதான் எடுக்கிறார் என நினைத்தேன். ஆனால், அந்த டிக்டாக் வீடியோ வைரலான பிறகுதான் எனக்கே விஷயம் தெரிந்தது.’’

“சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கிறதா?’’

“என்னுடைய தோற்றத்தைப் பார்த்து, படத்தில் நடிக்கச் சொல்லி சிலர் என்னை அணுகினர். எனக்கேற்ற கதை உருவாக்கத்திலும் இயக்குநர்கள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருத்தமான கதைகள் கிடைத்தால் ஹீரோவாக நடிப்பேன்!’’