தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு 2,15,48,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,088 கோடி ரூபாய் செலவில் சிறப்புத் தொகுப்பு வழங்குகிறது தமிழக அரசு. மளிகைப் பொருள்கள், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட இந்தத் தொகுப்பைப் பெற்றுக்கொண்ட வாசகர்களின் வரவேற்பு, விமர்சனங்கள், யோசனைகளைப் பகிரச் சொல்லி, அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சில இங்கே...
Guru Prasath
மஞ்சள் பையில் முதல்வரின் முகம், பெயர் தவிர்த்து தமிழக அரசு என அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது, வரவேற்கத்தக்கது.
R Pushpa Pushparamasamy
பொங்கல் தொகுப்புப் பொருள்கள் நல்லா இருக்கு. விலை மதிப்பு 650 ரூபாய் இருக்கும். இதுக்கு பதிலா, ரொக்கம் 1,000 ரூபாயா கொடுத்திருந்தா மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பாங்க.
Sathia Moorthi
அரசின் தற்போதைய நிதி நிலைமையில் அரசாங்கம் எல்லோருக்கும் இலவசம் கொடுக்க வேண்டிய அவசிய மில்லை. குடும்பத் தலைவர் இல்லாத, வசதி குறைந்த குடும்பங்களுக்கு என்று தேர்வு செய்து கொடுக்கலாம்.
G Karpagam
அரிசி மட்டும் சுமார். முந்திரி, திராட்சை எடை கம்மி. மிளகு இல்லை. மற்றபடி எல்லாம் நன்றாக இருந்தன.
Lakshmi Vasan
பொங்கல் தொகுப்பு ஓரளவு நன்றாகவே உள்ளது. ரேஷன் பொருள்களில் எடைக்குறைவு தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டதையும் குறிப்பிட வேண்டும்.
Sri Chandra
பொங்கல் தொகுப்பு எல்லாமே தரமாதான் இருக்கு, எந்தப் பொருளும் வீண் இல்லை. இந்த வருஷம் அதை வைத்துதான் பொங்கல் செய்யப்போறோம்.
Rejina Reji
பொருள்கள் அனைத்தும் தரமானதாக இருந்தன. பணம் கொடுத்திருந்தால் ஒரே நாளில் செலவாகி இருக்கும். தொகுப்பாகக் கொடுத்தது சிறப்பு.
Jayanthi Narayanan
பெரிய பெரிய கடைகளில் காசு கொடுத்து வாங்கும்போதும் சில பொருள்கள் தரமில்லாமல் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் ஒரேயடி யாகக் குற்றம் சொல்லாமல் தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம்.
Srividhya Prasath
பணமாகக் கொடுத்திருந்தால் ‘குடும்பத் தலைவர்கள்’ மூலம் டாஸ்மாக்குக்குச் சென்றிருக்கும்.
இடைத்தரகர்கள் இல்லாத நேரடி அத்தியாவசியப் பொருள்களின் கொள்முதல், அனைத்து மத, இன மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என... வரவேற்கலாம்.

Revathi Bobby
பொங்கல் தொகுப்பில் ரவா, கோதுமை மாவு இருந்தது. அதற்கு மாற்றாக நம் பாரம்பர்ய உணவான தினை, கறுப்புக் கவுனி, சிவப்பு அரிசி கொடுத்திருக்கலாம்.
Yasmine Fathima
7, 8 முறை அலைந்ததுதான் மிச்சம்... இன்னும் பொருள்கள் கிடைத்தபாடில்லை. தற்போது பையும் கிடையாதாம். இன்னும் சிலருக்கு 17, 18 பொருள்களே கிடைக்கின்றனவாம். 500 டோக்கன் கொடுத்துவிட்டு 100 டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பொருள்கள் வழங்கப்படுகின்றன. வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுத்ததற்கு பதில் பொங்கல் பொருள்களையே கொடுத் திருக்கலாமே?!
பொ.பாலாஜிகணேஷ் எழுத்தாளர்
வெல்லம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மற்ற பொருள்களின் தரமும் சுமார்தான். இப்படி தரமில்லாத பொருள்களைக் கொள்முதல் செய்து மக்களிடம் கெட்ட பெயர் வாங்குவதைவிட அதைக் கொடுக்காமல் இருப்பதே மேல். இதுவும் அரசியல்தான். மக்கள் இதுவரை அரசிடம் எதிர்பார்த்தா பொங்கல் கொண்டாடினார்கள்?
Pradeepa Dhayalan
எங்கள் ஏரியாவில் பை இல்லை. நாங்கள் கொண்டு போன பையில் போட்டார்கள். சீரகம், மிளகு, சிறுபருப்பு கவர் பிரிந்து இருந்தன; அனைத்தும் கலந்துவிட்டன. கோதுமை கவரும் ஓட்டை.
Deepaebinaser Ebinaser
அரசாங்கம் இதற்காக இவ்வளவு பணத்தைச் செலவு செய்யும்போது, கொள்முதல் முதல் விநியோகம் வரை அதன் தரத்தையும் கண்காணித்தால், தரமான பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கும்.