மிதக்கும் நிலையில் `எவர் கிவன்’ கப்பல் - முடிவுக்கு வருகிறது சூயஸ் கால்வாய் சிக்கல்!

எவர் கிவன் கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் நேற்றைய தினம் (ஞாயிறு) மட்டும், சுமார் 18 மீட்டர் ஆழத்திற்கு கரைகள் தோண்டப்பட்டு 27,000 கியூபிக் மீட்டர் அளவிலான மணல் வெளியேற்றப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23-ம் தேதி, செவ்வாய் கிழமை ``எவர் கிவன்" என்ற ராட்சத சரக்குக் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ70,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து, அந்தப் பகுதியின் கடல் வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. கடந்த ஆறு நாட்களாக மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்தக் கப்பல் மீட்கப்பட்டு, மிதக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்தபோது, ``எவர் கிவன் கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் நேற்றைய தினம் (ஞாயிறு) மட்டும், சுமார் 18 மீட்டர் ஆழத்திற்கு கரைகள் தோண்டப்பட்டு 27,000 கியூபிக் மீட்டர் அளவிலான மணல் வெளியேற்றப்பட்டுள்ளது.” என்றனர்.
சுமார் 400 மீட்டர் (1313 அடி) நீளமும், 59 மீ அகலமும் உடைய இந்தக் கப்பல் தைவானைச் சேர்ந்த எவர்கீரின் என்ற கடல்சார் (Evergreen Marine corp) நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ராட்சத கப்பல் அல்ட்ரா லார்ஜ் கன்டெய்னர் ஷிப் (Ultra large container ship-ULCS) வகையைச் சேர்ந்தது.
எவர் கிவன் கப்பல், சீனாவிலிருந்து 20,000 சரக்கு கன்டெய்னர்களுடன் மலேசியா வழியாக நெதர்லாந்தின் ராட்டர்டாமுக்கு (Rotterdam) செல்வதாக பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும், சூயஸ் கால்வாயில் நுழைந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, பாதையை அடைத்தபடி சிக்கிக் கொண்டது. இதனால் சூயஸ் கால்வாய், பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி முற்றிலுமாக அடைபட்டது.
ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஆசியாவையும் ஆப்ரிக்காவையும் பிரிக்கும் செங்கடல் பகுதியையும் இணைக்கும் விதமாக,1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது இந்த சூயஸ் கால்வாய். உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் இந்த கால்வாயில், சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தால், ஆசியா-ஐரோப்பிய நாடுகளிடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகமும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.

தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, எவர் கிவன் கப்பல் மிதக்கும் தருவாய்க்கு வந்துள்ளதாக, கப்பல் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ``இன்ச் கேப்” என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டிருப்பது உலக மக்கள் அனைவருக்கும் சற்று ஆறுதல் அளித்திருக்கிறது.