வயல், விளைச்சலை அள்ளிக் கொடுத்தாலும் சந்தையில் விலை கிடைத்தால்தான் லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன என்பது போன்ற அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. அந்த வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், ஜனவரி மாதத்தில் அறுவடையாகும் காய்கறிப் பயிர்களுக்கான விலையை முன்கூட்டியே அறிவித்துள்ளது.

தக்காளி
தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கை, `2018-19-ம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 205.15 லட்சம் டன்கள் உற்பத்தியாகும்’ என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை தக்காளியை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்கள். தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் தக்காளி முக்கியப் பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயம்புத்தூர் சந்தைகளுக்கு நாச்சிபாளையம், முத்தம்பட்டி, செட்டிபாளையம், ஆலந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வருகிறது. அக்டோபர் மாதம் முதலே கர்நாடக மாநிலம் தும்கூரிலிருந்தும் தக்காளி வரத் தொடங்கியிருக்கிறது. இது 2019 டிசம்பர் மாத இறுதிவரை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கத்திரி
`இந்தியாவில் கத்திரி 7.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 129.87 லட்சம் டன்கள் உற்பத்தியாகும்’ என்று அறிவித்திருக்கிறது தேசிய தோட்டக்கலை வாரிய அறிக்கை. மேற்கு வங்காளம், ஒடிசா, குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கத்திரி உற்பத்தியில் முக்கியப் பங்குவகிக்கின்றன.
தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும் பங்குவகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, கோயம்புத்தூர் மொத்தச் சந்தைக்கு நாச்சிப்பாளையம், கேளம்பாளையம், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து கத்திரி வருகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவெண்டை
அதே அறிக்கையின்படி, 2018-19-ம் ஆண்டு இந்தியாவில் வெண்டை 5.11 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெண்டை அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் சந்தைக்கு திருச்சி, தலைவாசல், வைகுண்டம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து வெண்டைவரத்து அதிக அளவு இருக்கிறது.

இந்த நிலையில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
‘‘வடகிழக்குப் பருவமழை தொடங்குவதைப் பொறுத்து காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.’’
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின் போது (ஜனவரி மாதம்) தரமான தக்காளியின் பண்ணை விலை 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், தரமான கத்திரி கிலோவுக்கு 25 ரூபாய் முதல் 27 ரூபாய் வரையிலும், தரமான வெண்டையின் பண்ணை விலை 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரையிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதைப் பொறுத்து காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கும்படி பரிந்துரைக்கப்படுகின்றனர்.
தொடர்புக்கு:
1.உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி
சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு
ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்-641003.
தொலைபேசி: 0422 2431405
2.தொழில்நுட்ப விவரங்களுக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி: 0422 6611374.