கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கொடிய சூழலில், சமூகத்தில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் திருநர்களின் நிலை மிகவும் வருந்தும்படி உள்ளது. கடந்த ஆண்டு திருநர்களுக்கு மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 1,500 ரூபாய் உதவித்தொகை பெரும்பாலானவர்களுக்குச் சென்றடையவில்லை.
வங்கிப் பரிவர்த்தனை மூலம் பணமும், இலவச ரேஷன் பொருள்களும் திருநர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், நாட்டில் உள்ள 40 லட்சத்துக்கும் அதிகமான திருநர்களில் 5,711 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,229 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் கிடைத்துள்ளன.

திருநர்களுக்கான சலுகைகளைப் பெற்றுத் தர முன்வந்த, LGBTQA+ சமூகத்தின் மேம்பாட்டுக்காக சேவையாற்றி வரும் ஹம்சாஃபர் தொண்டு நிறுவனத்தின் சட்ட வல்லுநர் தினேஷ் சோபாடே, ``80% திருநர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை” எனக் கூறியுள்ளார். திருநர்களுக்கு உரிய வாழ்வாதார ஆவணங்கள் இல்லாததால் அரசிடமிருந்து கிடைக்கும் பல சலுகைகளை அவர்கள் இழக்க நேரிடுகிறது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கில்தான் ஆண், பெண் மற்றும் மற்றவர்கள் எனத் திருநர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டார்கள். இந்த ஆய்வு எத்துணை துல்லியமானதாக இருக்கும் எனக் கூற இயலாது. ஆனால், ஆய்வு முடிவுப்படி இந்தியாவில் திருநர்களின் மொத்த எண்ணிக்கை 4,87,803. தேசிய அளவிலான ஆய்வுகள் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் திருநர்களின் பிரச்னைகளை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபெரும்பாலான திருநர்கள் பள்ளிக் காலத்திலேயே பாலின ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிப் படிப்பை நிறுத்துகின்றனர். குடும்ப ஒடுக்குமுறைகளால் வீட்டைவிட்டு வெளியேறுவதால் பலரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பையும் சமூக வாழ்வையும் இழக்கின்றனர். தொடர்ந்து சமூகத்தின் பல நிலைகளில் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். சுகாதார பணியாளர்கள் முதலே இந்த ஒடுக்குமுறை தொடங்குகிறது. சுகாதாரப் பணியாளர்கள் திருநர்களைப் பாரபட்சமாக நடத்துவதால் தங்களது சுகாதாரத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாதவர்களாகவே இருக்கின்றனர். மேலும், பலதரப்பட்ட மக்களிடம் இருந்து அவர்கள் விலகிச் சென்றாலும், பல்வேறு பாலியல் சீண்டல்களும் வன்முறைகளும் திருநர்களைத் தொடர்கின்றன. முக்கியமாக, காவல் துறையினரிடமிருந்து!

கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளின்படி இந்தக் குற்றங்கள் பல்வேறு காரணங்களால் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன. திருநர்கள் குறித்த பெரும்பாலான ஆய்வுகள் பாலியல் அடிப்படையிலே இருக்கின்றன. ஆனால், பாலினம் என்பது வேறு. பாலியல் விருப்பங்கள் உடலமைப்பு அடிப்படையில் இருந்தாலும், பாலினம் என்பது சமூகக் கட்டமைப்பு. தொடர்ந்து பல ஆய்வுகள் பாலியல் அடிப்படையில் நடைபெறுவது, திருநர்கள் மற்றும் இன்டெர்செக்ஸ் மக்களுக்கு எதிரானதாக இருக்கும்.
பிறப்புச் சான்றிதழ் முதலே இன்டெர்செக்ஸ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். திருநர்கள் பிறக்கும்போது ஆணாகவோ, பெண்ணாகவோதான் பிறக்கின்றனர். ஆனால், இன்டெர்செக்ஸ் பிரிவினரை பிறப்பிலேயே அறிய முடிந்தும் பிறப்புச் சான்றிதழில் இன்டெர்செக்ஸ் என்னும் பிரிவு இல்லை. மேலும், டிரான்ஸ்-உமன், டிரான்ஸ்-மேன் மற்றும் இன்டெர்செக்ஸ் மக்கள் பிரித்துக் குறிப்பிடப்படாமல் டிரான்ஸ்ஜெண்டர் என்னும் பொதுப் பெயரில்தான் குறிப்பிடப்படுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2015-ம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளின்படி 10-ல் 6 திருநர்கள் தீவிர பாலியல் துன்புறுத்துதல் காரணமாகப் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளனர். 3,619 பேர் உடன் செய்த நேர்காணல் முடிவுப்படி 12% பேர் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களின் மாத வருமானம் 5,000-க்கும் குறைவுதான். மேலும், கணக்கெடுப்பு அறிக்கையில் பாதிக்கும் மேலானவர்கள் (52%) பாலினம் காரணமாகக் காவல் துறையினரால் வன்முறைக்கு ஆளாக்கப்படுள்ளனர். கிட்டத்தட்ட அனைவருமே (96%) பாலின ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல திருநர்கள் நடனம், யாசகம் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.
``அரசாங்கம் திருநர்களின் பிரச்னைகளை கருத்தில் கொள்வது இல்லை. இதுவரை திருநர்கள் தொடர்பான எந்தக் கணக்கெடுப்பும் ஆய்வுகளும் அரசு சார்பில் நடைபெறவில்லை" என `சகோதரி அறக்கட்டளை' நிறுவனரும் இயக்குநருமான கல்கி சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மேலும், ``எத்தனை திருநர்கள் படித்துள்ளனர், எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறித்து எந்தத் தரவுகளும் இல்லை" எனக் கூறுகிறார் அவர். 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் `டிரான்ஸ்ஜெண்டர்' என்னும் பிரிவு அனைத்து அடையாள அட்டைகளிலும் சேர்க்கப்பட்டது. NALSA தீர்வு என்னும் வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு, சட்டபூர்வமாகத் திருநர்கள் அங்கீகரிக்கப்பட வித்திட்டது. அரசு மற்றும் தனியார் நலத் திட்டங்களை பெறுவதற்கு, இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. TWEET எனப்படும் திருநர் நல அறக்கட்டளையின் நிர்வாகி ஷமன் குப்தா, ``அறக்கட்டளைக்காக வங்கிக் கணக்கு தொடங்கவே பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் அடையாள அட்டை எண், பான் எண்ணுடன் இணையவில்லை. நாங்கள் பல ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டி இருப்பதனால் வங்கிக் கணக்கு மேம்படுத்தப்பட்டாமல் இருக்கிறது" எனக் கூறுகிறார்.
கேரள கணக்கெடுப்பு முடிவுப்படி, மூன்றில் ஒரு திருநர்தான் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்கிறார். 2% பேர் மட்டுமே பான் (PAN) அட்டை வைத்துள்ளனர். கால்வாசி பேர் சரியாகப் பாலினம் குறிக்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டிருக்கவில்லை. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில், 1%க்கும் குறைவான திருநர் மட்டுமே ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை கொண்டுள்ளனர். 2.5% பேர் பாலினம் மற்றும் பெயரை புதுப்பிக்காமல் உபயோகப்படுத்தி வருகின்றனர். 2020 நவம்பரில் தேசிய அளவில் திருநர்களுக்கான இணைய முகப்பு தொடங்கப்பட்டு ஆன்லைன் அடையாள அட்டை பெறும் முறை நடைமுறைக்கு வந்த பின்னும், 85% பேரின் விண்ணப்பக் கடிதங்கள் நிலுவையில் உள்ளன. டிசம்பர் 2020 முதல் கடந்த மார்ச் வரை விண்ணப்பம் செய்துள்ள 1,915 விண்ணப்பங்களுள் 277 விண்ணப்பங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. பல்வேறு ஆவண சரிபார்ப்பு காரணங்களால் 220 விண்ணப்பங்கள் ரத்தாகின, மீத விண்ணப்பங்கள் இன்று வரை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
பல திருநர்கள் பாலின ஒடுக்குமுறை காரணமாக மோசமான வன்முறைகளுக்குப் பின் வீட்டை விட்டு ஓடி வருகின்றனர். அவர்கள் அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருப்பது இயலாத காரியம்.

திருநர்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களையும் ஆதாரங்களையும் விட மனிதர்களாக அவர்கள் மதிக்கப்பட்டு, அவர்கள் நிலையை மாற்ற புதிய வழிமுறைகளை அரசு கையாள வேண்டும். அவர்கள் மீதான வன்முறையைக் கட்டுப்படுத்தவும், வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும். அனைவருக்கும் கல்வி என உறுதியளிக்கும் அரசு திருநர்களுக்கான கல்வி மீதும் கவனம் செலுத்த வேண்டும். டிரான்ஸ்ஜெண்டர்ஸ் மற்றும் இன்டர்செக்ஸ் பாலின மக்கள் பற்றிய புரிந்துணர்வு பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். லாக்டௌனில் முடங்கி வாழ்வாதாரம் அற்றிருக்கும் இவர்களின் அவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இவையெல்லாம் அரசின் மீதான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Source:
- Shreya Raman/ Indiaspend.org
(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.
தமிழில்: ர.அந்தோணி அஜய்