உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றின் வீரியம் தற்போது ஓமைக்ரான் வைரஸாக உருமாறி மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தற்போது உலகில் உள்ள பல நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக இந்திய அரசு ரிஸ்க் நாடுகளின் பட்டியலை இரண்டு முறை வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலிலிருந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஒரு சில நாடுகளிலிருந்து சர்வதேச விமான சேவைக்கும் இந்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமான சரக்கு சேவைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தகவலளித்துள்ளது. இந்திய அரசு அனுமதிக்கும் நாடுகளிலிருந்து மட்டும் விமானச் சேவை நடைபெறும் என்று சிவில் விமானப் போக்குவரத்து தெரிவித்துள்ளது.
