கேரள மாநிலம் மலப்புறம் பெரிந்தல்மண்ண பகுதியில் மதரசா ஆண்டுவிழா மற்றும் புதிய கட்டடம் திறப்புவிழா நடைபெற்றது. அதில், அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா மேடையில் மதத் தலைவர்கள் குழுமியிருந்தனர். அப்போது மாணவன் ஒருவனது பெயர் அழைக்கப்பட்டது. அந்த மாணவன் மேடைக்கு வந்து பரிசை வாங்கிச் சென்றான். அடுத்ததாக, பத்தாம் வகுப்பு மாணவி மாஸிதா பீவி மைக்கில் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரும் மேடைக்கு வந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சமஸ்தா என்ற இஸ்லாமிய அமைப்பின் துணைத்தலைவர் அப்துல்லா முஸ்லியார், ``பத்தாம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்தது யார்? இனி பெண்களை மேடைக்கு அழைக்கக் கூடாது. சமஸ்தாவின் தீர்மானம் தெரியுமா? பெண்களின் பாதுகாவலர்களை பரிசு வாங்க மேடைக்கு வரச் சொல்லுங்கள்" எனக்கூறி, பரிசுவாங்க வந்த மாணவியைத் திருப்பி அனுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. இது பெண் இனத்தை அவமதிக்கும் செயல் என எதிர்ப்புக் கிளம்பியது.

இதுபற்றி சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரளா உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், "பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வியில் நன்றாக முன்னேற்றம் கண்டுவருகின்றனர். பெண் குழந்தைகள் தீப்பந்தமாக எரியும் காலம் இது" என்றார். மேலும் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டவர்கள் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "பெண்களும், பெண் குழந்தைகளும் பெரிய அளவிலான செயல்களைச் செய்துவருகின்றனர். அவர்கள் செயல்பாட்டுக்கான அங்கீகாரத்தை அவர்கள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் சார்பில் வேறு யாரும் வாங்குவது சரியல்ல" என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், "பெண் குழந்தையை மேடைக்கு அழைத்து அவமானப்படுத்தியுள்ளார்கள். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அரசியல் தலைவர்களை நினைத்து வெக்கப்படுகிறேன். ஆண், பெண் சமத்துவமின்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கேரள சமூகத்தின் அமைதி மிகவும் வேதனைக்குரியது. பெண்களை வீட்டின் நான்கு சுவருக்குள் முடக்கும் மதத்தலைவர்களின் முயற்சிதான் இதன் பின்னணியில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு குரான் வசனத்திலோ, அரசியல் சட்டத்திலோ ஆதரவு இல்லை, அவற்றை மீறும் செயல் நடந்துள்ளது. பொதுமேடையில் நடந்த இந்த சம்பவத்தை குற்றகரமானதாகப் பார்க்கிறேன். மிகவும் துரதிஷ்டகரமான நிகழ்வு நடந்துள்ளது. இதற்கு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இஸ்லாமோபோபியா பரவ இதுபோன்றவர்கள்தான் காரணம். தேசிய தலைவர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

பொது மேடையில் மாணவி அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.