உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கான்பூரில் இரு தனியார் ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார் 28 வயதான சஞ்சீத் யாதவ். பணத்துக்காக இவர் கடந்த மாதம் கடத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய ரூ. 30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது கடத்தல் கும்பல். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்த யாதவின் குடும்பத்தினர், கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தைத் தயார் செய்து அவர்கள் சொன்ன ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு வந்துள்ளனர். அதன் பிறகும் யாதவ் விடுவிக்கப்படவில்லை.

போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் முறையாக இந்த வழக்கை விசாரிக்காமலிருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் யாதவின் குடும்பத்தினர் கான்பூர் மூத்த எஸ்.பி-யின் அலுவலகத்துக்கு வெளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னரே இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிப் பேசியுள்ள கான்பூர் மூத்த எஸ்.பி தினேஷ் குமார், ``ஜூன் 23-ம் தேதி சஞ்சீத் யாதவ் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூன் 26-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது, 3 நாள்கள் கழித்து யாதவின் தந்தைக்குப் பணம் கேட்டு மிரட்டி ஒரு போன் வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாகச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுக் கடத்தல் காரர்களின் செயல்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்த இரு தினங்களில் யாதவின் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரின் நண்பர்கள் மற்றும் முன்பு யாதவுடன் பணியாற்றியவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணைக்குப் பிறகு 26-ம் தேதியே யாதவ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. தற்போது சிறப்புப் படை போலீஸார் இளைஞர் யாதவின் உடலை தேடி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

காவலர்களின் அலட்சியத்தால்தான் தன் சகோதரர் கொல்லப்பட்டுள்ளார் என யாதவின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர், “என் சகோதரர் காணாமல்போன பிறகு எங்கள் பகுதியின் பொறுப்பாளரான அபர்ணா ஐ.ஏ.எஸ்ஸை அணுகி நாங்கள் கொடுத்த பணப் பையில் ஜிபிஎஸ் வைத்துக் கண்காணிக்கும்படி கேட்டோம். எல்லா ஏற்பாடுகளும் முறையாக நடப்பதாக அவர் எங்களுக்கு உறுதியளித்தார். காவலர்கள் சொல்லி நாங்கள் கடத்தல் காரர்களுக்குப் பணத்தைக் கொடுத்தோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால், என் சகோதரர் விடுவிக்கப்படவில்லை. நாங்கள் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தாலும் அது திரும்பக் கிடைக்கும் எனக் காவலர்கள் கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால், என் சகோதரரை மீட்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் சொன்னோம். பணப் பையைக் கொடுக்கும்போது சம்பவ இடத்தில் நிறைய போலீஸ்காரர்கள் மறைந்திருந்தனர். ஆனால், யாரும் கடத்தல்காரர்களைப் பிடிக்கவில்லை. இப்போது என் தம்பி இறந்ததுதான் மிச்சம், அவனது உடலையாவது தேடித் தர வேண்டும்” எனக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

யாதவ், கடத்தல் வழக்கில் அலட்சியமாகச் செயல்பட்டதால் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இதே போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆனால், அதை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கண்டுகொள்வதில்லை என உ.பி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.