மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியார் பகுதியில் வசிப்பவர் பிரியங்கா குப்தா. இவர் வீட்டின் மின் கட்டணம் வ்வளவு என விசாரித்தபோது, மின்சார வாரியம் ரூ. 3,419 கோடி எனத் தெரிவித்திருக்கிறது. அப்போது அருகிலிருந்த பிரியாங்கா குப்தாவின் மாமனார் மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, பிரியங்கா குப்தாவின் கணவர் சஞ்சீவ் கன்கனே மின் கட்டணம் தொடர்பாக விசாரித்தபோதுதான் கட்டணக் குழப்பம் தொடர்பான முழுத் தகவலும் தெரியவந்திருக்கிறது. இந்தக் கட்டண விவரம் தொடர்பாக மத்தியப் பிரதேச மத்திய ஷேத்ரா வித்யுத் வித்ரன் நிறுவனத்தின் சரிபார்ப்பு நடந்தது.

அதில், அந்த 3,419 என்ற எண்ணிக்கையில் நுகரப்பட்ட யூனிட்டுகளுக்கு பதிலாக ஊழியர் ஒருவர் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டதால், அதிக தொகையுடன் பில் வந்திருக்கிறது. எனவே, இது ஊழியரின் தவறு. பின்பு திருத்தப்பட்ட சரியான தொகையிட்ட மின்கட்டண பில் ரூ.1,300 வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேச எரிசக்தித்துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் செய்தியாளர்களிடம், "தவறு சரிசெய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
