பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தயாராக உள்ளதாக UIDAI இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், குறிப்பாக தொற்றுநோய், உணவுப் பாதுகாப்பு இல்லாதது குறித்து நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது பற்றி வலியுறுத்தியிருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிகாரிகள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகள், பாலியல் தொழிலாளர்களை எவ்வாறு அணுகலாம், மற்றும் அவர்களது அடையாளத்தை வெளியிடாமல் அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வாதங்களை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கொரோனா காலகட்டத்தில் மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பட்டியலில், பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களின் தொழில் குறித்த தகவல்களை, மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் ரகசியமாக வைத்திருப்பது முக்கியம் என்று கூறி இருந்தனர்.
தொடர்ந்து NACO (National AIDS Control Organisation) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும், பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை தெரிவிக்காமல் மாநில அரசுகள் தொடர்ந்து ரேஷன் உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

வழக்கு ஆலோசனையின்போது, `தமிழ்நாடு 87,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களில் 86,000 க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளது' என்று குறிப்பிட்ட நீதிபதி தொடர்ந்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மாநில சுகாதார அதிகாரியிடமிருந்தோ, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பிடமிருந்தோ சான்றிதழ் பெறும்பட்சத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தயாராக உள்ளதாக UIDAI (Unique Identification Authority of India) அறிவித்துள்ளது.