மும்பை அந்தேரியைச் சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்திவருகிறார். காந்திவலியைச் சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இந்தச் சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு, ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்துபோனார். இதையடுத்து இருவரும் தாயாரின் பராமரிப்பில் வசித்துவந்தனர்.

அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கியபோது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதில் அதுல் இரண்டு சகோதரிகளுக்கும் உதவினார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. சகோதரிகள் இரண்டு பேரும் அதுலை திருமணம் செய்ய விரும்பினர். அவர்கள் தாயாரும் இதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களின் சொந்த ஊரான சோலாப்பூர் அருகிலுள்ள அக்லுஜ் என்ற இடத்தில் இருக்கும் ஹோட்டலில் உறவினர்கள் புடைசூழ திருமணம் நடந்தேறியது. இந்தத் திருமணப் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து சமூக சேவகர் ராகுல் என்பவர், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். சட்டத்தை மீறி இரண்டு பேர் ஒரே வாலிபரைத் திருமணம் செய்தது குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநிலப் பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலி சோலாப்பூர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து மணமகனின் உறவினர் ஒருவர் கூறுகையில், ``சகோதரிகள் இரண்டு பேரும் சின்ன வயதிலிருந்தே அனைத்தையும் ஒன்றாகப் பகிர்ந்துகொண்டனர். ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தது, வேலை செய்வது உட்பட அனைத்தையும் சேர்ந்தே செய்கின்றனர். திருமணம் தங்களை பிரித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இருவரும் ஒருவரையே திருமணம் செய்துகொண்டனர்” என்றார்.
முதலில் இரண்டு சகோதரிகளில் ஒருவருக்குத்தான் அதுல் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், திருமணம் செய்தால் எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் அதுலிடம் சொன்னார். அதுலும் தனது பெற்றோரிடம் கேட்டு அதற்கு சம்மதம் தெரிவித்தார் என்கிறார்கள் உறவினர்கள்.