மத்தியப்பிரதேசம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சாவித்திரி என்பவர் விவகாரமான ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், யூடியூப்பில் காட்டப்படும் ஆபாச விளம்பரங்களால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் இதன் காரணமாக, தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு கூகுள் நிறுவனம் 75 லட்சம் ரூபாய் தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. எஸ்.கே கவுல் தலைமையிலான அமர்வு, விளம்பரங்கள் பிடிக்கவில்லையென்றால் அவற்றைப் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளது. மேலும், சுய விளம்பரங்களுக்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் வருத்தமடைந்த அந்த நபர், "அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. நானே வேலையில்லாமல் இருக்கிறேன். எனவே அபராதம் விதிக்காமல் என்னை மன்னித்து விடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், ஒன்றுமில்லாத வழக்கினால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தது தவறு. எனவே மன்னிக்க முடியாது. இருப்பினும் அபராதத் தொகையைக் குறைத்து 25,000 ரூபாய் அபராதமாகச் செலுத்தும் படி ஆனந்த் கிஷோர் சாவித்திரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.