`இதெல்லாம் டெலிவெரி பண்ண முடியாது!' - மீண்டும் சர்ச்சையில் ஜொமோட்டோ

வாய்ப்பைப் பயன்படுத்திய ஜொமோட்டோவும், உணவில் மதம் இல்லை , உணவே மதம் என்னும் கோட்பாட்டை முன்வைத்து ஹார்ட் இன்களையும் RTக்களையும் அள்ளியது.
பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை விளம்பரங்களுக்கு செலவு செய்வார்கள். ஜொமாட்டோவுக்கு விளம்பரம் கூட சர்ச்சையிலேயே வந்துவிடுகிறது. தற்போது ஜொமோட்டோ மீண்டும் செய்தியாகி இருப்பதற்கு , ஜொமாட்டோ டெலிவரி செய்யும் நபர்கள் தான் காரணம்.
சென்ற வாரம், ஜொமோட்டோ ஆப்பில், ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைக் கொண்டு வருவதாக நோட்டிஃபிகேஷன் வர, அதை வாங்க மாட்டேன் என உணவை கேன்சல் செய்திருக்கிறார். இந்த அரிய செயலை, பெருமையாக எண்ணி சமூக வலைதளத்தில் ஜொமாட்டோ ஐடியை டேக் செய்து அவர் வெளியிட, கடும் விமர்சனத்துக்குள்ளானர். காவல்துறையும் தாமாக முன்வந்து அந்த நபரை எச்சரித்திருக்கிறது.
வாய்ப்பை பயன்படுத்திய ஜொமாட்டோவும், உணவில் மதம் இல்லை , உணவே மதம் என்னும் கோட்பாட்டை முன்வைத்து ஹார்ட் இன்களையும் RTக்களையும் அள்ளியது. இது என்னடா புது வம்பு என நினைத்த உபர் ஈட்ஸ் என்ற இன்னொரு டெலிவரி நிறுவனம், `நாங்களும் ஜொமாட்டோவை வழிமொழிகிறோம்' என அறிக்கைவிட்டது.
ஹலால் உணவு என பிரித்து விற்கும் ஜொமோட்டோ, உணவில் மதம் இல்லை என சொல்வது வேடிக்கையானது என யோசித்து வேறு லாஜிக்குடன் வந்தது இன்னொரு கும்பல். உணவில் மதம், மதமே உணவு, உணவே மதம் சர்ச்சைகளே நீயா நானா, நமக்கு நாமே என இன்னும் விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. சரி சரி மேட்டருக்கு வருவோம். தற்போது ஜொமோட்டோவின் புதுப் பிரச்னை இதுதானாம்.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜொமாட்டோ டெலிவரி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். அங்கிருக்கும் மக்கள் மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சி உணவுகளையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதால், இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறியிருக்கிறார்கள் அவர்கள்.

இதுகுறித்து பேசிய மேற்குவங்க அமைச்சர் ராஜீவ் பானர்ஜீ, ``மத ரீதியிலான நம்பிக்கை கொண்ட ஒருவரை, அவருக்குப் பிடிக்காத உணவை நிர்பந்தித்து கொண்டு செல்ல சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுகுறித்து நாங்கள் விசாரிப்போம்'' என தெரிவித்திருக்கிறார்.
சரி, உங்கள் கருத்து என்ன? கொண்டு வருபவர் வேற்று மதம் என்பதால் வாங்க மறுப்பேன் என்கிறார் ஒருவர். கொண்டு செல்லும் உணவு என் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது, நான் கொண்டு செல்ல மாட்டேன் என்கிறார்கள் சிலர். இதில் எது சரியென நினைக்கிறீர்கள். இல்லை இரண்டுமே தவறு என்று நினைக்கிறீர்களா?. கமென்ட்டில் உரையாடுங்கள்.