லண்டன்: இங்கிலாந்து கடற்கரையில் திமிங்கலங்கள் இறந்து ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் கடற்கரையிலும், ஒடிசா மாநிலத்தின் கடற்கரையிலும் ஏராளமான திமிங்கலங்கள் இறந்த நிலையிலும், உயிருடனும் கரை ஒதுங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், 'இந்திய கடற்பகுதியில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தின் கடற்கரையில், மெகா சைஸ் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரை நகரமான ஸ்கீக்நெஸ் கரையில், 48 அடி நீளமுள்ள 3 திமிங்கலங்கள் கடந்த ஞாயிறு அன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கின.இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அவற்றை கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தினர். ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மெகா சைஸ் திமிங்கலங்களை பார்வையிட்டுச் சென்றனர்.