ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைக் குழந்தைகள் உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் மைய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளிக்கான சிரப்களை ஆய்வுசெய்திருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துகள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸிடம் செய்தியாளர்கள் அந்த நான்கு இருமல் மற்றும் சளிக்கான சிரப்கள் பற்றிக் கேள்வி எழுப்புகையில், "குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புகளுக்கும், 66 குழந்தைகளின் மரணத்துக்கும் இது காரணமாக இருக்கலாம். அது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் இது குறித்து இந்தியாவின் மைய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்திவருகிறது" என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட அந்த நான்கு மருந்துகள் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup ஆகியவை.

காம்பியாவில் 28 குழந்தைகள் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூலை 19 அன்று விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 9-ம் தேதி, காம்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவமனைகளில் பாரசிட்டமால் சிரப்பின் பயன்பாட்டை நிறுத்துமாறு கூறியிருந்தது.
``நோயாளிகளுக்கு இந்த மருந்துகளால் தீங்கு ஏற்படாமல் இருக்க, இவற்றைப் புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும்" என்று டெட்ரோஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தகவல் பதிவிட்டிருக்கிறது.