இங்கிலாந்தில் ஹோட்டல் சமையல்காரர் ஒருவர், தன்னுடைய முதலாளியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை வித்தியாசமான முறையில் பழிவாங்கியிருக்கிறார்.

டாம் வில்லியம்ஸ் (25) என்பவர், ராயல் வில்லியம் IV ஹோட்டலில் (Royal William IV pub) சமையல்காரராக வேலைசெய்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதியன்று, விடுமுறை ஊதியம் தொடர்பாக ஹோட்டல் முதலாளியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக டாம் வில்லியம்ஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
அதோடு ஹோட்டல் முதலாளியைப் பழிவாங்கும் விதமாக, தான் வேலைசெய்த அந்த ஹோட்டலின் சமையலறையில் 20 கரப்பான் பூச்சிகளை விட்டார். அதைத் தொடர்ந்து சுகாதாரம், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஊழியர்கள் உடனடியாக, சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், பூச்சிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை அழைத்தனர்.

இதில் கரப்பான் பூச்சிகளைச் சுத்தம் செய்வதற்காக மட்டுமே சுமார் 22,000 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 22,25,410 லட்சம் செலவாகியிருக்கிறது. பிறகு, ஹோட்டல் உரிமையாளர் இந்தச் சம்பவத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றார்.

ஹோட்டல் உரிமையாளரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், ``அந்த நபர், பாம்புகள், டரான்டுலா சிலந்திக்கு உணவாகப் பயன்படும் 20 கரப்பான் பூச்சிகளை (non-native species of cockroach) ஹோட்டலில் விட்டார்" எனக் கூறினார். அதைத்தொடர்ந்து, நவம்பர் 21-ல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு டாம் வில்லியம்ஸ் ஆஜராக வேண்டும் எனக் கூறிய பிறகும், அவர் ஆஜராகவில்லை. அதன் பின்னர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபருக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.