இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சோப்ரா பிரிட்டனில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மேயராவது இது இரண்டாவது முறை.
பிரிட்டன் தலைநகர் லண்டனிலிருக்கிறது பாரோ ஆஃப் சவுத்வார்க். இந்த மாகாணத்தில் 2014-2015-ம் ஆண்டின் மேயராகவும், 2013-2014-ம் ஆண்டின் துணை மேயராகவும் பதவி வகித்தவர் சுனில். இந்த மாகாணத்தின் முதல் இந்திய வம்சாவளி மேயர் இவர்தான். இரண்டு சதவிகித இந்திய வம்சாவளியினர் மட்டுமே வசிக்கும் ஒரு தொகுதியில் இவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010-ல் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், லேபர் பார்ட்டி லண்டன் பிரிட்ஜ், வெஸ்ட் பெர்மாண்ட்ஸே ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற பெரும் பங்கு வகித்தார். பல ஆண்டுகளாக லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் வசம் இருந்த தொகுதிகளை லேபர் பார்ட்டி கைபற்றியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுனில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வசித்துவருகிறார். 1979-ம் ஆண்டில், இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த பிறகு, சோப்ரா ஒரு சிறிய கடையைத் தொடங்கினார். அது குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் இதர தயாரிப்புகளை மொத்த விலைக்கு விற்பனை செய்யும் வணிக நிறுவனமாக வளர்ந்தது. இங்கிலாந்தில் உள்ளூர் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும், இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் சமூகப் பணிகளை ஏற்பாடு செய்துவந்திருக்கிறார். மேயராவதற்கு முன்பு மூன்று முறை டெபுடி மேயராகப் பதவி வகித்துள்ளார் சுனில்.