இஸ்லாமாபாத்தில் கடந்த வியாழனன்று 'ஆட்சி மாற்றம்’ குறித்த தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அயாஸ் அமீர் (73) கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "ராணுவ ஜெனரல்கள் சொத்து வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். எனவே, முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் ஆகியோரின் உருவப்படங்களை அகற்றிவிட்டு `சொத்து வியாபாரி’களின் படங்களை மாட்டுங்கள்" எனச் சாடினார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து அயாஸ் அமீரின் பேச்சுகளின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில், நேற்று இரவு லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் அயாஸ் அமீர் தாக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அயாஸ் அமீர், "நேற்று இரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் என்னை காரிலிருந்து வெளியே இழுத்துத் தாக்கினர். மேலும், எனது பணப்பையையும் பறித்துச் சென்றுவிட்டனர். மக்கள் திரளத் தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்" எனக் கூறியிருக்கிறார். அதைத் தொடந்து காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ``லாகூரில் மூத்த பத்திரிகையாளர் அயாஸ் அமீருக்கு எதிரான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் மீது வன்முறை மற்றும் போலி எஃப்.ஐ.ஆர்கள் போடுவதன் மூலம் பாகிஸ்தான் மிக மோசமான பாசிசத்தில் இறங்குகிறது. அரசு அனைத்து தார்மிக அதிகாரத்தையும் இழந்து வன்முறையில் ஈடுபடுகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.