இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து மதங்கள், பல்வேறு பழங்குடியினங்களின் திருமணத்தில் பல்வேறு சடங்குகளும், அதன்மீது அவரவர்களுக்குப் பல நம்பிக்கைகளும் இருக்கும். அந்த வகையில், ஆப்பிரிக்க பழங்குடியினரால் பின்பற்றப்படும் திருமணச் சடங்கு ஒன்று பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

அதாவது, இந்த ஆப்பிரிக்கப் பழங்குடியினப் பெண்கள் திருமணத்துக்கு மொட்டையடிக்கவேண்டுமாம். பாரம்பர்யமிக்கதாகக் கூறப்படும் இத்தகைய திருமணச் சடங்கு, கென்யாவின் போரானா பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது.
மணப்பெண் திருமணத்தின்போது மொட்டையடித்துக்கொள்வதால், மணமகனுக்கு மிக அடர்த்தியான நீண்ட முடி இருக்கும் என்கிறார்கள். அதேசமயம் ஆண்கள், தங்களுக்கு அடர்த்தியான முடி வளர, நெய் அல்லது வெண்ணெய் தடவி தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எத்தியோப்பியா, சோமாலியாவிலுள்ள பழங்குடியினரில் பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு அனுமதியில்லை. இதற்கும் அவர்கள், புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பெண்கள் ரத்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்.
நாம் அறிந்ததும், அறியாததும் என இந்தியாவிலேயே பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கையில், ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் இத்தகைய சடங்குகள் பலரையும் ஆச்சர்யப்படுத்துவதோடு ஏன் என்று சிந்திக்கவும் வைக்கின்றன.