
சேமிப்பு ஸ்பெஷல்
நம்மில் பலருக்கு சேமிப்புக்கும் முதலீடுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஓர் உதாரணம் பார்க்கலாமா?

கமலாவதி, வள்ளி, சுவேதா, நித்யா என, பணிபுரியும் நான்கு தோழிகள். இவர்கள் அனைவரும் மாதம் தலா 1,000 ரூபாயைச் சம்பளத்திலிருந்து எடுத்து தங்களுக்குத் தெரிந்த முறைகளில் சேமிக்கிறார்கள். கமலாவதி மாதம் ஐந்தாம் தேதி தவறாமல் உண்டியலில் ரூ.1,000 போட்டுவிடுகிறார். வள்ளி அவரின் வங்கிச் சேமிப்புக் கணக்கிலும், சுவேதா வங்கித் தொடர் சேமிப்பு (ஆர்டி) திட்டத் திலும், நித்யா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் பணத்தைப் போட்டு வருகிறார்கள். ஐந்தாண்டு முடிவில் கமலாவதி உண்டியலை உடைக்கும்போது அவருக்கு மொத்தமாக ரூ.60,000 கிடைத்தது. அதுவே மற்ற தோழிகளுக்கு அதிக தொகை கிடைத்திருந்தது. மிக அதிகமாக நித்யாவுக்கு ரூ.82,485 சேர்ந்திருந்தது. வள்ளிக்கு ரூ.65,660, சுவேதாவுக்கு ரூ. 72,010 கிடைத்தது.
பொதுவாக, நீங்கள் உண்டியலில் பணத்தைப் போட்டுவருவது சேமிப்பு. அதை வங்கிச் சேமிப்புக் கணக்கு, ஆர்டி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் இடப்படுவது முதலீடு.

இந்த முதலீட்டில் வங்கிச் சேமிப்பு மற்றும் ஆர்டியில் மூலதனத்துக்கு ரிஸ்க் எதுவும் இல்லை என்பதால் அவற்றில் வருமானமும் குறைவு. அதுவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறதுதான். ஆனால், இந்த ரிஸ்க் நீண்ட காலத்துக்குப் பரவலாக்கப்படுவதோடு, அதன் மூலம் அதிக வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டினைச் சிறந்த முதலீடு என்று குறிப்பிடலாம்.
முதலீடு என்பது அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் நிறைய மாறிவிட்டது. இன்னமும் நாம் பழைய காலம்போல் முதலீடு செய்ய முடியாது. அந்தக் கால ஆட்கள் தங்கம், அதை விட்டால் நிலம் என்று முதலீடு செய்து வந்தார்கள். இன்றைக்கு நீண்ட காலத்தில் அதிக லாபம் தரும் நிதிச் சொத்துகள் (பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவை) அதிகம் வந்துவிட்டன.
சரியான முதலீட்டுச் சூத்திரம் என்பது இதுதான்:
உங்கள் குடும்ப பட்ஜெட்டில் முதலீட்டுக்கான தொகையை எப்படி ஒதுக்குகிறீர்கள்?
வருமானம் - செலவு = முதலீடு
பெரும்பாலோர் பின்பற்றும் முதலீட்டுச் சூத்திரம் இதுதான்...
செலவுகள் எல்லாம் போக மீதியை முதலீடு செய்கிறீர்களா? சில மாதங்களில் செலவுகள் கையை மீறிப் போகும்போது முதலீட்டுக்கும் தொகை இல்லாமல் போய்விடும்.
எந்தச் சிக்கலும் இல்லாமல் முதலீட்டை மேற்கொள்ள ‘முதலீட்டு குரு’ வாரன் பஃபெட் சொன்ன எளிய முதலீட்டுச் சூத்திரம்:
வருமானம் - முதலீடு = செலவு
அதாவது, உங்களின் வருமானத்திலிருந்து முதலீட்டுக்கான தொகையை எடுத்து வைத்துவிட்டு மீதம் உள்ள தொகையில் உங்கள் செலவுகளைச் சுருக்கிப்பாருங்கள். அப்புறம் என்ன, வாழ்க்கையில் ‘உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா’தான்!
சி.சரவணன்