திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையை அவரின் தந்தை ரவிக்கு வழங்க கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கோகுல்ராஜ் கொலை வழக்கின்' விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா 2015-ம் ஆண்டு தனது முகாம் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி இந்த வழக்கை கைவிடுவதாகக் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணைக்காக விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் "இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சி.பி.ஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை உள்ளிட்டவற்றைப் பார்த்துவிட்டுதான் எங்கள் தரப்பு வாதத்தைக் கூற முடியும்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, அந்த ஆவணங்களை அவர் தந்தை ரவிக்கு வழங்க நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.