மதுரை: `கொரோனா தடுப்பூசியால் தூய்மைப் பணியாளர் மரணமா?!’ - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மரணமடைந்ததாக குடும்பத்தினரால் புகார் எழுப்பப்படும் தூய்மைப் பணியாளரின் உடலை, மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று முறையிட்டதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சின்னம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோகரன், புதூர் பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார். சமீபத்தில் இவர் அருப்புக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வலிப்பு வந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.

முன்களத் தூய்மைப் பணியாளரான மனோகரன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் மரணம் நிகழ்ந்தது என குடும்பத்தினரால் புகார் கூறப்பட்டது. இந்தநிலையில், மரணமடைந்த மனோகரன் மனைவி அம்பிகா தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று முறையீடு செய்தார்.

``கடந்த 21-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 30-ம் தேதி அருப்புக்கோட்டையில் உயிரிழந்திருக்கிறார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் மரணமடைந்திருப்பதாக அவர் குடும்பத்தினர் புகார் எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, அவர் உடலை வாங்க மறுத்திருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால், உயிரிழந்ததாகச் சொல்லப்படும் நிலையில் தூய்மைப் பணியாளரின் உடலை மருத்துவ நிபுணர்குழு அமைத்து, மறு உடற்கூராய்வு செய்யவும், இறப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்றும் முறையிட்டார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, `இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்ய' உத்தரவிட்டிருக்கும் நிலையில், இது பற்றி வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம். ``இந்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணை மூலம் கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள் களையப்படும்'' என்கின்றனர்.