மதுரை: `விதிமீறி கூடுதல் நபர்கள் பயணம்... இழப்பீடு கிடையாது!’- ஷேர் ஆட்டோ வழக்கில் நீதிமன்றம்

`தமிழகத்தில், குறிப்பாக மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன?’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில்,``மதுரை மாநகர்ப் பகுதிகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆட்டோவிலும் மூன்று நபர்களை மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி இருக்கிறது. ஆனால் இந்த விதியை மீறும் நபர்கள், ஆட்டோக்களில் கிட்டத்தட்ட 10 -12 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தொடர்பாக மதுரை மாநகர்ப் பகுதியில் 2019-ம் ஆண்டு வரை 5,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் சொல்வதை நிறுத்தவில்லை. எனவே, போக்குவரத்து விதியை மீறி, அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், `மதுரை மாநகர் பகுதியில் 16,200 ஆட்டோக்கள் தற்போது ஓடுகின்றன. 2016-2019-ம் ஆண்டு வரை 1,065 ஆட்டோக்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது. தமிழகத்தில், குறிப்பாக மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன என்று கேள்வி எழுப்பினர். மேலும், தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன... அதவற்றில் விதிகளை மீறிய எத்தனை ஷேர் ஆட்டோகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.