<p><strong>ஜூ</strong>லை 22ஆம் தேதி காலை 10 மணியிலிருந்தே ஸ்ரீஹரிகோட்டாவில் மக்களின் கண்கள் வான் நோக்கி உயர ஆரம்பித்துவிட்டன. ‘சந்திராயன்-2’ விண்ணில் பறப்பதை பார்க்கப்போகும் உற்சாகம்.</p><p>கூடியிருந்த 7,500 பேர்களின் எதிர்பார்ப்புகள், கட்டுப்பாட்டு அறையில் பரபரப்புடன் இருந்த விஞ்ஞானிகள் என அனைவருக்கும் புன்னகை தீப்பிழம்பைக் கக்கியபடி மதியம் 2:43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2.</p>.<p>ஜூலை 15-ம் தேதியே விண்ணைச் சந்தித்திருக்க வேண்டிய சந்திரயான்-2, தொழில்நுட்பக் கோளாறால் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. அன்றைக்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளோடு சேர்ந்து, மக்களுக்கும் ஏமாற்றம்தான். பிரச்னைகளைச் சரிசெய்து, ஜூலை 22ஆம் தேதி சாதித்துவிட்டது இஸ்ரோ.</p>.<p>விண்ணில் ஏவப்பட்டதும் ராக்கெட்டின் செயல்பாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறை விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு முழுவதும், கிரையோஜெனிக் இன்ஜின் மீதுதான் இருந்தது. ராக்கெட்டின் மூன்றாம் கட்டமாகச் செயல்படும் அதன் செயல்பாடுதான் மிகவும் முக்கியமானது. ‘பேலோடு’ எனப்படும் சந்திரயான்-2வின் ஒட்டுமொத்தக் கருவிகளையும் அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.</p>.<p>விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்த இரண்டு பக்கவாட்டு பூஸ்டர்கள் பிரிந்து விழுந்தன. அதன் பிறகு, கிரையோஜெனிக் இன்ஜின் செயல்படத் தொடங்கியது. விண்ணில் பாய்ந்து சரியாக 16 நிமிடங்கள் 14 நொடிகள் கழித்து, சந்திரயான்-2 விண்கலம் புவியின் நீள்வட்ட சுற்றுப் பாதைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதனையடுத்து சந்திரயான்-2வை ஏவும் திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.</p>.<p>இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்ட தகவலில், “இந்தியாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாள். சந்திரயான்-2 புவி சுற்றுவட்டப் பாதையில் 6,000 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாகச் செலுத்தப் பட்டிருக்கிறது. கடந்தமுறை ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னை 24 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. அடுத்த ஒன்றரை நாளில் அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, ராக்கெட் ஏவுவதற்குத் தயாரானது. </p><p>பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள் என அனைவரும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் பங்களிப்பை அளித்ததால்தான் இது சாத்தியமானது. அதற்காக, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>.<p>மேலும், இன்றைய தினம் இஸ்ரோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சந்திரயான்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒன்று. கிரையோஜெனிக் இன்ஜின் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தியது மற்றொன்று. அதன் காரணமாகத் தேவைப்பட்ட சுற்றுப்பாதை தூரத்தைவிடவும் 6,000 கிலோமீட்டர் அதிகமாகச் சந்திரயான்-2 செலுத்தப்பட்டுள்ளது.</p><p>வழக்கமான திட்டத்தின்படி சந்திரயான்-2வின் உயரத்தை விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்க முடிவுசெய்திருந்தார்கள். ஆனால், கிரையோஜெனிக் இன்ஜின் சிறப்பாகச் செயல்பட்டு, அந்த வேலையை மிச்சப்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக, சந்திரயான்-2 நிலவில் இறங்கப்போகும் கடைசி15 நிமிடங்கள் இந்தத் திட்டத்தில் மிகச்சவாலான தருணங்களில் ஒன்றாக இருக்கும்” என்றார்.</p><p>சந்திராயன் விண்ணில் பாய்ந்த அடுத்த 15 நிமிடங்களில், மக்கள் வானத்தைப் பார்த்தபடியே, மகிழ்ச்சியான முகத்துடன் கலையத் தொடங்கினர். சந்திரயான்-2வின் வெற்றி இன்னும் முழுமையடைந்துவிடவில்லை. அதன் வெற்றிப் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. திட்டமிட்டபடி செப்டம்பர் 7ஆம் தேதி, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்தால்தான், நாம் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியும். அந்த தினத்தை நாம் மட்டுமல்ல, உலகமே எதிர்பாத்து காத்திருக்கிறது.</p><p>சந்திரயான் அதைச் சாத்தியப்படுத்தும்!</p>
<p><strong>ஜூ</strong>லை 22ஆம் தேதி காலை 10 மணியிலிருந்தே ஸ்ரீஹரிகோட்டாவில் மக்களின் கண்கள் வான் நோக்கி உயர ஆரம்பித்துவிட்டன. ‘சந்திராயன்-2’ விண்ணில் பறப்பதை பார்க்கப்போகும் உற்சாகம்.</p><p>கூடியிருந்த 7,500 பேர்களின் எதிர்பார்ப்புகள், கட்டுப்பாட்டு அறையில் பரபரப்புடன் இருந்த விஞ்ஞானிகள் என அனைவருக்கும் புன்னகை தீப்பிழம்பைக் கக்கியபடி மதியம் 2:43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2.</p>.<p>ஜூலை 15-ம் தேதியே விண்ணைச் சந்தித்திருக்க வேண்டிய சந்திரயான்-2, தொழில்நுட்பக் கோளாறால் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. அன்றைக்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளோடு சேர்ந்து, மக்களுக்கும் ஏமாற்றம்தான். பிரச்னைகளைச் சரிசெய்து, ஜூலை 22ஆம் தேதி சாதித்துவிட்டது இஸ்ரோ.</p>.<p>விண்ணில் ஏவப்பட்டதும் ராக்கெட்டின் செயல்பாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறை விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு முழுவதும், கிரையோஜெனிக் இன்ஜின் மீதுதான் இருந்தது. ராக்கெட்டின் மூன்றாம் கட்டமாகச் செயல்படும் அதன் செயல்பாடுதான் மிகவும் முக்கியமானது. ‘பேலோடு’ எனப்படும் சந்திரயான்-2வின் ஒட்டுமொத்தக் கருவிகளையும் அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.</p>.<p>விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்த இரண்டு பக்கவாட்டு பூஸ்டர்கள் பிரிந்து விழுந்தன. அதன் பிறகு, கிரையோஜெனிக் இன்ஜின் செயல்படத் தொடங்கியது. விண்ணில் பாய்ந்து சரியாக 16 நிமிடங்கள் 14 நொடிகள் கழித்து, சந்திரயான்-2 விண்கலம் புவியின் நீள்வட்ட சுற்றுப் பாதைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதனையடுத்து சந்திரயான்-2வை ஏவும் திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.</p>.<p>இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்ட தகவலில், “இந்தியாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாள். சந்திரயான்-2 புவி சுற்றுவட்டப் பாதையில் 6,000 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாகச் செலுத்தப் பட்டிருக்கிறது. கடந்தமுறை ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னை 24 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. அடுத்த ஒன்றரை நாளில் அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, ராக்கெட் ஏவுவதற்குத் தயாரானது. </p><p>பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள் என அனைவரும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் பங்களிப்பை அளித்ததால்தான் இது சாத்தியமானது. அதற்காக, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>.<p>மேலும், இன்றைய தினம் இஸ்ரோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சந்திரயான்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒன்று. கிரையோஜெனிக் இன்ஜின் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தியது மற்றொன்று. அதன் காரணமாகத் தேவைப்பட்ட சுற்றுப்பாதை தூரத்தைவிடவும் 6,000 கிலோமீட்டர் அதிகமாகச் சந்திரயான்-2 செலுத்தப்பட்டுள்ளது.</p><p>வழக்கமான திட்டத்தின்படி சந்திரயான்-2வின் உயரத்தை விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்க முடிவுசெய்திருந்தார்கள். ஆனால், கிரையோஜெனிக் இன்ஜின் சிறப்பாகச் செயல்பட்டு, அந்த வேலையை மிச்சப்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக, சந்திரயான்-2 நிலவில் இறங்கப்போகும் கடைசி15 நிமிடங்கள் இந்தத் திட்டத்தில் மிகச்சவாலான தருணங்களில் ஒன்றாக இருக்கும்” என்றார்.</p><p>சந்திராயன் விண்ணில் பாய்ந்த அடுத்த 15 நிமிடங்களில், மக்கள் வானத்தைப் பார்த்தபடியே, மகிழ்ச்சியான முகத்துடன் கலையத் தொடங்கினர். சந்திரயான்-2வின் வெற்றி இன்னும் முழுமையடைந்துவிடவில்லை. அதன் வெற்றிப் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. திட்டமிட்டபடி செப்டம்பர் 7ஆம் தேதி, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்தால்தான், நாம் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியும். அந்த தினத்தை நாம் மட்டுமல்ல, உலகமே எதிர்பாத்து காத்திருக்கிறது.</p><p>சந்திரயான் அதைச் சாத்தியப்படுத்தும்!</p>