
பொம்மலாட்ட நாடகத்தை அரங்கேற்றியதுடன், மேடையில் நாடகமாகப் பார்த்த பொம்மைகளைச் செய்யும் பயிற்சியையும் அடுத்த நாள் கற்றுத்தந்தார் சனோஜி.
“உலகத்தின் சிறந்த ரசிகர்கள் குழந்தைகள். அந்த ரசிகர்களிடம் நம் பாரம்பர்ய கலைகளைக் கொண்டுசெல்ல வேண்டும்’’ என்கிறார் ‘தியேட்டர் ஃ' குழுவின் வெற்றி.

ஆகஸ்ட் 17 அன்று, சென்னையில் ‘தி பப்பெட் தியேட்டர்' என்கிற பெயரில் நடத்திய பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலான குழந்தை ரசிகர்கள் பத்து வயதுக்குள் இருந்தனர். திடீரென அவர்களுக்கு முன்பு தோன்றினார் கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் சனோஜ் மமோ. ஆடிப்பாடி, குட்டிக் குட்டியாக மேஜிக் செய்தவர், அதன்பிறகு பொம்மைகளை வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஸ்மார்ட்போன்களில் தொலைந்துகொண்டிருக்கும் குழந்தைகள் இப்படியான நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது அவர்களின் ரசனை மாறும். இவற்றை வெறும் பொம்மைகளாகப் பார்க்காமல் உயிருள்ள நண்பர்களாகப் பார்ப்பார்கள். ‘க்ரியேடிவிட்டி பப்பட்ரி’ என்கிற பெயரில் உருவாக்கியிருக்கும் பொம்மைகள் இவை. வீணான பொருள்களில் தயாரிக்கப்பட்டவை. இதைப் பார்க்கும் குழந்தைகள் தாங்களும் இதுபோல உருவாக்குவார்கள். அவர்களின் கற்பனைத்திறன் வளர்வதுடன், மறுசுழற்சி பழக்கமும் உண்டாகும்'' என்கிறார் வெற்றி.
பொம்மலாட்ட கலைஞர் சனோஜி, “நான் சிறுவயதில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டிருந்தேன். படிப்பில் கவனம் செலுத்தமுடியாததால் தியேட்டர் ஆர்ட்ஸ் கலையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் எல்லோரையும் போன்று பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திவந்தேன். பிறகு, இந்த கிரியேடிவ் பப்பட்ரியை இரண்டு வருடங்களாக நடத்துகிறேன். கேரளா வெள்ளத்தின்போது அங்கே நிவாரண முகாம்களில் இருந்த குழந்தைகளுக்கு, வெள்ளத்தில் அடித்துவந்த பொருள்களிலேயே பொம்மைகள் உருவாக்கினேன்” என்கிறார்.

பொம்மலாட்ட நாடகத்தை அரங்கேற்றியதுடன், மேடையில் நாடகமாகப் பார்த்த பொம்மைகளைச் செய்யும் பயிற்சியையும் அடுத்த நாள் கற்றுத்தந்தார் சனோஜி. தாங்கள் உருவாக்கிய பொம்மைகளை வைத்து சுட்டிகளும் ஒரு நாடகத்தை நடத்தி அசத்தினார்கள்.

‘‘நேற்று நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகளில் ஒன்று, நாடகத்தில் பார்த்த பொம்மையை இரவு 11 மணி வரை செய்துபார்த்ததாகச் சொன்னார். இதுதான் எங்களுக்கான வெற்றி'' என்று புன்னகைத்தார் ‘தியேட்டர் ஃ' குழுவின் நிர்வாகி சுனந்தா.