தமிழ் இலக்கியத் தோட்டம், 2022ம் ஆண்டிற்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளருக்கான இயல் விருதை அறிவித்திருக்கிறது. இவ்விருது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவண்ணன் 1980 களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களின் தலைமுறையை சேர்ந்தவர். ’தீபம்’ என்னும் இதழில் வெளிவந்த முதல் சிறுகதையைத் தொடர்ந்து சிற்றிதழ்களிலும், வெகுஜன இதழ்களிலும் இவர் இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்.
தமிழ்ச் சிறுகதைகளையும், தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில், இவர் அந்தக் கதைகளில் காணப்பட்ட அழகியலையும் வாழ்வியலையும் இணைத்து புரிந்துகொள்ளும் விதமாக எழுதிய நூறு விமர்சனக் கட்டுரைகள் மிகப்பெரிய வாசக கவனத்தைப் பெற்றன.

ஐம்பது தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணையதளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் முன் வரிசையில் வைக்கத் தகுதியாக்கின.
கவிதை, சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என அவர் எழுதிய 99 நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. புதுச்சேரி அரசு சிறந்த நாவல் விருது, இலக்கியச் சிந்தனை சிறந்த நாவல் விருது, கதா அமைப்பு சிறந்த சிறுகதை விருது, சாகித்ய அகாதமி சிறந்த மொழிபெயர்ப்பு விருது போன்ற பல இலக்கிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவருடைய இலக்கியப் படைப்புகள் மற்றும் அவரின் தமிழ் இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி 2022ம் ஆண்டுக்கான இயல் விருதைப் பாராட்டி 2022ம் ஆண்டுக்கான இயல் விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு வழங்குகிறது.