கிராமங்களின் பெயர் காரணம் மற்றும் சிறப்புகள் குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் வகையில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சிறப்பு நிகழ்வை நடத்தியது. இந்தக் காரணங்களைக் கேட்டு மாணவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகில் உள்ள காஞ்சிரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஷேக் முஜிபூர் ரகுமான் தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் முகம்மது முகைதீன் வரவேற்றார். இந்நிகழ்வில் பங்கேற்ற ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு அப்பகுதி ஊர்களின் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்குகையில் “காஞ்சிரம் அல்லது காஞ்சிரை எனும் மரத்தின் பெயரால் இவ்வூருக்கு காஞ்சிரங்குடி எனப் பெயர் வந்துள்ளது. எட்டி எனப்படும் இம்மரம் கசப்புத் தன்மை உள்ள விஷ மரமாகும். ஆனால், இது சித்த வைத்தியத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் இப்பகுதியில் அதிகமாக இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். கி.பி.1756-ல் செல்லமுத்து தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி திருப்புல்லாணி வெள்ளையன்சேர்வை சத்திரத்துக்கு இவ்வூரைத் தானமாக வழங்கியுள்ளார்.
சிவப்பு நிற ஆம்பல் மலர் செங்கழுநீர் எனப்படும். இவ்வூராட்சியில் இம்மலரின் பெயரால் அமைந்துள்ள செங்கழுநீர் ஓடை எனும் ஊரின் பெயர் தற்போது செங்கல் நீரோடை என வழங்கப்படுகிறது. அதேபோல் அலைவாய்க்கரைவாடி எனும் ஊர்ப்பெயரில் அலைவாய் என்பது கடலையும் வாடி என்பது மீன் உலர்த்தும் இடத்தையும் குறிக்கிறது. கடற்கரை அருகில் அமைந்துள்ள வாடி என்பது இதன் பொருள்” என ஊர்களுக்கான பெயர்களின் காரணங்களை விரிவாக எடுத்துரைத்தார். இதைக்கேட்டு மாணவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் உதவி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஆசிரியர்கள் தோமினிக் லூர்து ராஜ், விஜலா, ஜாஸ்மின் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.