
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக்
வணக்கம் சுட்டி நண்பர்களே...
‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கி வருவதுதான் இந்த இணைப்பிதழ். இது, தருமபுரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்து பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

சேலம் மற்றும் சென்னை பற்றிய இணைப்பிதழைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழி வகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.
‘சேலம் 150’, ‘சென்னை டே 2018’ ஆகியவற்றைத் தொடர்ந்து, ‘தருமபுரி 200 - இன்ஃபோ புக்’ உங்கள் கைகளில்.
அருமையான தருமபுரி சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

தமிழக வரலாற்றில் தருமபுரி!
1. தர்மம் செய்த புரி!
ஆயுளை நீட்டிக்கும் நெல்லிக்கனி கிடைத்தபோது, அதைத் தான் சாப்பிடாமல் ஒளவையாருக்குக் கொடுத்த அதியமான் என்கிற மன்னன் வாழ்ந்த ஊர்தான் தருமபுரி. ஔவையார் எழுதிய பாடல்களில் அதியமான் நெடுமான் அஞ்சி தான் கதாநாயகன். அவர் தனக்கு நெல்லிக்கனி கொடுத்ததைப் பற்றியும், மக்களுக்கு அள்ளிக் கொடுத்ததைப் பற்றியும் பாடினார் ஔவையார். அப்போது தகடூர். இப்போது தருமபுரி.
2. எவிடன்ஸ் ஏராளம்!
தருமபுரி பற்றியும், தருமபுரி தகடூராக இருந்தபோது அதை ஆண்ட மன்னர்கள் பற்றியும் ஏராளமான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டி பாடல்கள் உள்ளன.
3. தருமபுரி - தொல்பொருள் ஆய்வுகளின் சொர்க்கபுரி!
தருமபுரி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் பழைமையான கலாசாரம்கொண்ட பகுதிகளில் ஒன்று. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தருமபுரி பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக நிறைய தொல்லியல் சான்றுகள் கிடைத்துவருகின்றன.
4. கல் திட்டைகள், கல் வட்டங்கள்
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. அது, இறந்தவர்களின் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பல பொருள்களை வைத்து, அடக்கம்செய்தல். மேலும் அந்த இடத்தில் பெரிய கற்களைக்கொண்டு அமைத்தவைதான் கல் திட்டைகள், கல் வட்டங்கள் முதலியன. இத்தகைய கல் திட்டைகள் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏகல்கட்டு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5. பல்லவர்களின் ஆட்சி
கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தருமபுரி மாவட்டம் பல்லவர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. அதேசமயம் அருகில் இருந்த சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளை கங்கா பல்லவர்கள் ஆட்சிசெய்துவந்தார்கள்.

6. பாரமஹால் பகுதி
பாரமஹால் பகுதி என்பது, தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகள். திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மற்றும் ஊத்தங்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இந்த பாரமஹால் பகுதி முழுவதும் 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கங்கா பல்லவர்களின் கீழ் வந்துவிட்டது.
7. ராஷ்டிரக்கூடர்களின் ஆதிக்கம்
9 ஆம் நூற்றாண்டு தொடங்கியபோது, இந்த மாவட்டத்தில் ராஷ்டிரக்கூடர்களின் கை ஓங்கியது. இவர்கள், தருமபுரியின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிசெய்தனர்.
8. சோழர்களின் ஆட்சி
ராஷ்டிரக்கூடர்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போது, சோழர்களின் ராஜ்ஜியம் விரிவடையத் தொடங்கியது. அவர்கள் இந்த மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அதிகாரத்துக்கு வந்தனர். கி.பி 894 ஆம் ஆண்டு கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றினார் ஆதித்ய சோழன். கி.பி 10-ஆம் நூற்றாண்டில் (கி.பி 949-950), சோழர்கள் ராஷ்டிரக்கூட மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தை இழந்தனர்.
9. சோழப் பேரரசு
ராஷ்டிரக்கூட மன்னரான மூன்றாம் கிருஷ்ணர் இறந்த பிறகு, அந்த அரசு முழுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பிறகு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய சேலம் மாவட்டத்தின் முழுப் பகுதியும் சோழர் ஆட்சியின்கீழ் வந்தது. கங்கவாடி, சோழப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
10. ஹோய்சாளர்களின் ஆட்சி
12 ஆம் நூற்றாண்டில் தருமபுரி பகுதியில் ஹோய்சாளர்கள் அதிகாரம் பெற்றனர். சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. கங்கவாடிப் பகுதி, ஹோய்சாளர்கள் வசம் வந்துவிட்டது. இது மட்டுமின்றி, கோலார், கோட்டையூர் மற்றும் கொங்குநாட்டின் சில பகுதிகளையும் ஹோய்சாளர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.
11. ஹோய்சாளர்களுக்கு வந்த சோதனை!
13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களும் ஹோய்சாளர்களும் அதியமான் பகுதியை ஆள்வதற்காகச் சண்டைபோட்டுக்கொண்டனர். யாதவர்கள், ஹோய்சாளர்களின் தலைநகரான துவாரசமுத்திரத்தைத் தாக்கினார்கள். அதனால், அவர்கள் இந்தப் பகுதியில் பின்வாங்கி, தலைநகரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினார்கள்.

12. எதிரியின் எதிரி
எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல, அதியமானின் பகுதியைப் பிடிக்க ஹோய்சாளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சண்டை நடந்தபோது, பாண்டியர்கள், ஹோய்சாளர்களின் எதிரியான யாதவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
13. முகமதியர் முகம்
13 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகமதியர்களின் ஆட்சி தென்னிந்தியாவில் பரவியது. அதியமான் பகுதியும் (தருமபுரி) அதிலிருந்து தப்பிக்கவில்லை. பாண்டியர்கள் வீழ்த்தப்பட்டு, முகமதியர்கள் தங்கள் ஆட்சியை தருமபுரிப் பகுதியில் விரிவாக்கம் செய்தனர்.
14. விஜயநகரப் பேரரசும் புக்கரும்
டெல்லியின் முகமதிய அரசுக்கு எதிராக தெற்கில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது விஜயநகரப் பேரரசு. மதுரை சுல்தானிய மன்னர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அசைன்மென்ட்டுடன்தான் தமிழகத்துக்குள் நுழைந்தது விஜயநகரப் பேரரசு. விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான புக்கர், தமிழ்நாட்டில் பல்வேறு படையெடுப்புகளை மேற்கொண்டார். அப்படி `புக்கர்’ மேற்கோண்ட ஒரு படையெடுப்பில்தான் 1365-66 ஆம் ஆண்டில் அதியமான் பகுதி விஜயநகரப் பேரரசிடம் வீழ்ந்தது.
15. திருப்புமுனை தந்த திருமலை நாயக்கர்!
கி.பி1623 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் மூலம் மதுரை நாயக்கர்களின் புகழ் உச்சமடைந்தது. பாளையக்காரர்கள், நாயக்கர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அதனால் இந்தப் பகுதி, சில ஆண்டுகள் பாளையக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
16. கோட்டை எழுந்தது
பாளையக்காரர்களில் ஒருவரான ராமச்சந்திர நாயக்கர், காவிரியின் தெற்குப் பகுதியில் உள்ள நாமக்கல் வட்டத்துடன் தலைமலைப் பகுதியையும் கூடுதலாகக் கவனித்துவந்தார். நாமக்கல் கோட்டை இவர்களாலேயே கட்டப்பட்டது.

17. நரசராஜா
கி.பி 1611ஆம்ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தைச் சேர்ந்த காந்திராவே நரசராஜா என்பவர் கெட்டி முதலியார்களிடமிருந்து கோயம்புத்தூரில் உள்ள பல பகுதிகளைக் கைப்பற்றினார். அதற்குப் பிறகு, கி.பி1654 ஆம் ஆண்டு பாரமஹாலுடன் சேர்த்து பென்னாகரம், தருமபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிசெய்தார்.
18. மராட்டியர்கள் மகுடம்
சேலம், தருமபுரி பகுதியில் மராட்டியர்கள் மிகக் குறுகியகாலம் மகுடம் சூடியிருந்தார்கள். பாரமஹால் மற்றும் தால்காட் பகுதிகள் மராட்டியர்களின் கைகளுக்கு மாறியிருந்தன. சத்திரபதி சிவாஜியால் தொடங்கப்பட்டு இருந்த மராட்டியப் பேரரசு சில காலமே ஆண்டாலும் சிறப்பான ஆட்சிபுரிந்தது.
19. சிக்கெனப் பிடித்தார் சிக்க தேவராயர்
கி.பி 1688-89 ஆம் ஆண்டில், மைசூர் அரசர் சிக்க தேவராயர் பாரமஹால் பகுதி மீது படையெடுத்து தருமபுரி, மனுக்கொண்டா, ஓமலூர், பரமத்தி, காவிரிப்பட்டணம் மற்றும் ஆத்தூர் பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். 1704 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை, தருமபுரி உள்ளிட்ட சேலத்தின் பகுதிகள் சிக்க தேவராயரின் வசம் இருந்தன.
20. ஹைதர் அலி
கி.பி 1760 ஆம் ஆண்டு பாரமஹால் பகுதி, மைசூர் அரசர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், நிலைமை கவலைக்கிடமாகவே நீண்டுகொண்டிருந்தது. 1767-ல் சென்னையில் இருந்த ஆங்கிலேய அரசு, ஹைதர் அலியைத் தாக்கி காவிரிப்பட்டணத்தைக் கைப்பற்றியது.
21. ஹீரோவாக மாறிய ஹைதர் அலி
காவிரிப்பட்டணத்தைக் கைப்பற்றிய பிறகு, கிருஷ்ணகிரியை முற்றுகையிட்டனர் ஆங்கிலேயர். மிகுந்த வீரத்துடன் போரிட்டு ஆங்கிலேயரைத் துரத்திவிட்டு, காவிரிப்பட்டணத்தை மீட்டார் ஹைதர் அலி.
22. மீண்டும் மிரட்டிய ஆங்கிலேயர்
சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள், பாரமஹால் மீது மீண்டும் படையெடுத்தனர். தெற்கு தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகள் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் ஆங்கிலேயரிடம் வந்தன.

23. மைசூர் போர்
ஆங்கிலேயரின் இந்த வெற்றி குறுகியகாலமே நீடித்தது. ஹைதர் அலி மீண்டும் தருமபுரி, தேன்கனிக்கோட்டை, ஓமலூர், சேலம் மற்றும் நாமக்கல்லைக் கைப்பற்றினர். இரண்டாம் மைசூர் போரின்போது, தருமபுரி உள்ளிட்ட சேலம் பகுதிகள் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தன.
24. தனி ஒருவனாக திப்பு சுல்தானும், வஞ்சகக் கூட்டணியும்
ஹைதர் அலிக்குப் பிறகு அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்தார். திப்பு சுல்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள், மராட்டியர்களுடன் ஹைதராபாத் நிஜாமுடனும் கூட்டுசேர்ந்துகொண்டார்கள். ஒரு பெரும் கூட்டணியை எதிர்த்து தனி ஒருவனாகப் போரிட்டார் திப்பு சுல்தான்.
25. அசராத ஆங்கிலேயர்
திப்பு சுல்தானை எதிர்த்து வெற்றிகொண்ட ஆங்கிலேயர்கள், கி.பி1791 ஆம் ஆண்டில் ஓசூர், அஞ்செட்டி, ரத்தினகிரி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினர். மேலும், சில கோட்டைகளும் எதிர்ப்பில்லாமல் ஆங்கிலேயரிடம் அடிபணிந்தன.
26. பென்னாகரம் போர்
1791 ஆம் ஆண்டில் மேலும் ஒரு சம்பவம் நடந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படைப்பிரிவை அனுப்பினார் திப்பு சுல்தான். ஆனால், அது பென்னாகரத்தில் நடந்த போரில் தோற்றுப்போனது. பிறகு பென்னாகரம் பகுதிகள் ஆங்கிலேயர் வசமாகின.

27. அக்ரிமென்ட் செய்துகொண்ட ஆங்கிலேயர்
கி.பி1792 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திப்பு சுல்தான் ஆட்சியின் பாதிப் பகுதிகள் ஆங்கிலேயரிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. ஆங்கிலேயர்கள், தருமபுரி உள்ளிட்ட சேலம் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர்.
28. தலைமை இடமானது கிருஷ்ணகிரி
ஆங்கிலேயருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாலக்காட்டு பகுதியைத் தவிர்த்து சேலம் மாவட்டத்தின் முழுப்பகுதியும், ஓசூரின் ஒரு பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்துவிட்டன. ஆங்கிலேய அரசின் ஆட்சித்தலைவரின் தலைமையிடமாகக் கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது.
29. கடைசி மைசூர் போர்
கி.பி1799 ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரில் ஓசூர் தாலுகா, அஞ்செட்டி, துர்க்கம், ரத்தினகிரி மற்றும் கெலமங்கலம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டுவந்து தங்கள் எல்லைகளை விரிவாக்கம்செய்தனர்.

30. ஸ்ரீரங்கப்பட்டணம் போர்
கடைசி மைசூர் போரின்போது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற சண்டையில் திப்பு சுல்தான் இறந்த பிறகு, சேலம் மாவட்டத்தின் பாலக்காடு பகுதியும் ஆங்கில ஆட்சியுடன் சேர்க்கப்பட்டது.
31. பெரும்பாலை - பெரிய சான்று
தருமபுரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஊர், பெரும்பாலை. கொங்குநாட்டின் எல்லையைக் குறிக்கும் `கொங்குமண்டல சதகம்’, இந்தப் பெரும்பாலையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கொங்குமண்டலத்தின் வடக்கு எல்லையாகக் கூறப்படும் `பெரும்பாலை’ என்பது, இன்றைய தருமபுரி மாவட்டத்தின் தொப்பூரை அடுத்துள்ள பெரும்பாலை என்ற ஊர்தான். தகடூர் நாடு என்பது கொங்கு நாட்டின் கலாசாரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
32. பானை ஓடுகளும் 240 கல்வெட்டுகளும்
பெரும்பாலையில், வண்ணம் பூசப்பட்ட சிவப்புப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 1,700 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தகடூர் நாட்டை, கொங்குநாட்டுப் பகுதி என்று பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், கொங்குநாட்டுக்கும் தகடூர் நாட்டுக்கும் நிறைய கலாசார வேறுபாடுகள் உள்ளன. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 240 கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டில்கூட `கொங்கு’ என்ற பெயர் இடம்பெறவில்லை.

33. தனிப்பெரும் தகடூர்
தகடூர் நாட்டில் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகளைப் பார்க்கும்போது, தொண்டை மண்டலம் பாண்டியமண்டலம் என்பதுபோல இல்லாமல், தகடூர் நாடு (தருமபுரி) தனி நாடாக இருந்துள்ளது. கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை ஐந்து பெரிய நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. இதன் தலைநகரம், தகடூர்.
34. நாட்டுப் பிரிவுகள்
தகடூர் நாடு, பின்வரும் 19 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. புறமலை நாடு, கோளூர் நாடு, மேல்கொன்றை நாடு, மேல் வேணாடு, கங்க நாடு, கோயிலூர் நாடு, வேளாள நாடு, தாயனூர் நாடு, வேல்கவி நாடு, எயில் நாடு, மன்ன நாடு, முரசு நாடு, கடத்தூர் நாடு, ஆனைமலை நாடு, வல்வரையர் நாடு, புளிகரை நாடு, பெரிய நாடு, மசாந்தி நாடு, தென் கூற்று நாடு. இவற்றில் புறமலை நாடும், கோயிலூர் நாடும் மிகப் பழைமையான வரலாறுகொண்டவை.
35. வேறு பெயர்கள்
மன்னர்கள் மாறும்போது நாட்டின் பெயரும் அவ்வப்போது மாறியிருக்கிறது. அந்த வகையில் நிகரிலி சோழமண்டலம், முடிகொண்ட சோழ மண்டலம், நுளம்பாடி ஆகியவையும் தருமபுரியின் வேறு பெயர்கள் ஆகும்.

36. மழ நாடு
சேலம் மாவட்டப் பகுதிகளே `மழ நாடு’ என்று அழைக்கப்படுகின்றன. 14ஆம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளைக்கொண்டிருந்த மழ நாட்டின் எல்லைகள், 180 கி.மீ சுற்றளவு கொண்டது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
37. நடுகல் நாடு
தகடூர் நாட்டின் பூர்வ குடிமக்கள், மழவர்கள்தாம். அதனால்தான் இதற்கு `மழ நாடு’ என்று பெயர். தகடூரில் `நடுகல் வழிபாட்டு முறை’ என்பது மிகவும் அதிகம்.
38. பாட்டுடைத் தலைவன் - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
பண்டைய தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்த மன்னன். தன் தந்தை செல்வக்கடுங்கோன் வாழியாதனுக்குப் பிறகு தகடூர் மன்னர் ஆனார். சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முக்கியமானவை. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. இந்த நூலின் எட்டாம் பத்து, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மீது பாடப்பட்டது. பாடியவர் அரிசில் கிழார்.

39. தகடூர் யாத்திரை
தகடூர் மீது படையெடுத்து மன்னன் அதியமானை ஜெயித்ததால், இவனுக்கு `தகடூர் எறிந்த’ என்று பட்டப்பெயர் கிடைத்தது. இந்தப் போர் நிகழ்வுகளை மையமாக வைத்துதான் `தகடூர் யாத்திரை’ என்ற புத்தகமும் எழுதப்பட்டுள்ளது.
40. புலவருக்கு விசிறி வீசிய புரவலன்!
தகடூரை ஆட்சிசெய்த இரும்பொறைக்கு, இன்னொரு சிறப்பும் உண்டு. ஒருமுறை மோசிகீரனார் என்கிற புலவர், களைப்படைந்ததால் அரச முரசு கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். புலவருக்கு விசிறி வீசி பெருமை பெற்றுக்கொண்டான் மன்னன் இரும்பொறை.
41. புட்டிரெட்டிப்பட்டி கல்வெட்டு
மொரப்பூருக்கு அருகில் உள்ள ஊர் புட்டிரெட்டிப்பட்டி. இங்குள்ள அம்மன் கோயிலில் அழகிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது, ஓர் அற்புதச் செய்தியைச் சொல்கிறது. தமிழில் இருக்கும் இந்தக் கல்வெட்டு, ஹரிஹர புக்கரிடமிருந்து விஜயநகரத்தை மீட்டு, தன் மகனுக்குப் பட்டம் சூட்டிய சாளுவ நரசிம்மனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

42. திருமண வரி
தருமபுரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிப்பெருமைகளைக் கூறுகிறது. தருமபுரியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோடூர் சாமுண்டி அம்மன் கோயில் கல்வெட்டில், இந்தப் பகுதியில் திருமணத்துக்கு வரி வசூலித்த செய்தி காணப்படுகிறது.
43. பூர்வகுடிகள்
பழைமையும் பழம்பெருமையும் வாய்ந்த தருமபுரி மாவட்டத்தில் குறும்பர், இருளர், பஸ்தர், சிவாச்சாரத்தார் போன்ற பூர்வகுடிகள் அதிகம் வசிக்கிறார்கள்.
44. குறும்பர்கள்
குறும்பரில் எக்கிடி, ஈடிகர் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆடு வளர்ப்புதான் இவர்களது முக்கியத் தொழில். தெலுங்கு கலந்த தமிழ்ப் பேச்சு நம்மைக் கவரும். இவர்கள் மஞ்சமலை உள்ளிட்ட இடங்களில் வாழ்கின்றனர்.

45. இருளர்
இருளர்கள், சித்தாபுரம், கடிநாடு, ஹோபள்ளி முதலிய இடங்களில் பரவி இருக்கிறார்கள். பெரும்பாலும் நாடோடி வாழ்க்கைதான். தேன் எடுத்து அரசுக்கு விற்பனைசெய்வதே இவர்களின் முக்கியத் தொழில். மாரண்டஹள்ளியின் பல பகுதிகளிலும் இருளர் வசிக்கிறார்கள்.
46. பஸ்தர்
பஸ்தர் என்பது கன்னடச் சொல். இதற்கு, ‘செம்படவர்’ என்பது பொருள். இவர்களை, மலைநாட்டுப் பரதவர் என்றும் சொல்லலாம். நீர்நிலைகளின் அருகிலேயே இவர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. காவிரியையொட்டியுள்ள ஊட்டமைலைப் பகுதி, கோட்டையூர், பண்ணவாடி முதலிய இடங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஒகேனக்கல் பகுதியில் வாழ்கின்றனர்.
47. சிவாச்சாரத்தார்
சிவாச்சாரத்தார் இன்று பழங்குடிகளைப்போல இருந்தாலும், இவர்கள் பழங்குடியினர் அல்லர். இவர்கள் சைவ சமயத்தின் உட்பிரிவான லிங்காயத்துகள். மேலே சொன்ன மூன்று பழங்குடியினருக்கும் இவர்களே திருமணச் சடங்குகளைச் செய்வார்கள். தாய்மொழி கன்னடம். பழங்குடியினரோடு வாழ்வதால், சிவாச்சாரத்தின் வாழ்க்கைமுறையும் அவர்களைப்போலவே இருக்கிறது. இருந்தபோதும், தங்கள் தனித்துவத்தை இழக்காமல் வாழ்ந்துவருகின்றனர்.

புவியியல்:
48. வளம் கொழிக்கும் பகுதி
தருமபுரி மாவட்டம், மலை மாவட்டமாக விளங்குகிறது. சேலத்திலிருந்து தருமபுரிக்கு நுழையும்போது பீடபூமியாக உயர்வதைப் பார்க்க முடியும். பீடபூமியில் பொதுவாக கனிமவளம் நிறைந்திருக்கிறது. தருமபுரியில் அப்படித்தான் கனிமவளங்கள் நிறைந்திருக்கின்றன.
49. ஹாட் ஸ்பாட் - உயரத்தில் தருமபுரி
தருமபுரி மிகவும் வெப்பமான பகுதி. இந்த மாவட்டம் அடிக்கடி வறட்சிக்கு உள்ளாகிறது. கோடையில் 38 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெப்பம் உச்சம் தொடும். குளிர்காலங்களில 17 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துவிடும். கடல் மட்டத்திலிருந்து 350 முதல் 660 மீட்டர் வரையிலான உயரத்தில் உள்ளது. சராசரி மழை 7 செ.மீ முதல் 9 செ.மீ வரைதான்.கனிமவளம் மிகுந்திருப்பதால், பூமியின் உள்வெப்பமும் அதிகம்.
50. அதிகம் கிடைக்கும் அபாடைட்
அபாடைட் கனிமம், ஒகேனக்கல் அருகில் உள்ள ஊத்தா மலைப்பகுதியில் அதிகம் கிடைக்கிறது. ஊத்தா மலையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அபாடைட் கிடைப்பதாக ஆய்வில் உறுதிசெய்திருக்கிறார்கள்.

51. பித்தளைக்குப் பிரச்னையில்லை!
பித்தளைத் தாது, அரூர் வட்டத்தில் வைரநாயக்கன்பட்டியில் கிடைக்கிறது. இதுதவிர, ஈயம், கார்பனேட் போன்றவையும் அரூர் பகுதியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதுகிறார்கள். இதற்கான ஆய்வுகள், இந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெறுகின்றன.
52. இரும்புத்தாது இருக்கிறது
தருமபுரியின் தாய் மாவட்டமான சேலம் மாவட்டம் முழுவதுமே இரும்புத்தாது நிறைந்தது. தருமபுரியின் முக்கியமான ஊரான தீர்த்தமலையில் சுமார் 2 கோடியே 80 லட்சம் டன் இரும்பு வெட்டி எடுக்க முடியும் எனக் கணித்திருக்கிறார்கள்.
53. சுத்தமான சுண்ணாம்பு
தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கும் இன்னொரு முக்கியமான கனிமம் சுண்ணாம்பு. திப்பம்பட்டியில் சுமார் 50,000 டன் வரை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

54. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கல்
அஞ்சனஹள்ளி, பேவனூர் மற்றும் பென்னாகரம் பகுதிகளில் 20 லட்சம் கனமீட்டர் பரப்பளவுக்கு கருங்கல் நிறைந்திருக்கிறது. அரூர் வட்டத்தில் 6 லட்சம் கனமீட்டர் பரப்பிலும், பாலக்கோடு வட்டத்தில் கொஞ்சமாக 18 ஆயிரம் கனமீட்டர் பரப்பிலும் கருங்கல் காணப்படுகிறது.
55. ஏற்றுமதியாகும் கிரானைட்
தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கும் `கிரே’ கலர் கிரானைட் கற்களுக்கு சர்வதேசச் சந்தையில் நல்ல தேவை இருக்கிறது. `கிரே’ கலர் கிரானைட் கற்கள் பாலிஷ் செய்யப்பட்டு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
56. டாமின் டான்
`தமிழ்நாடு மினரல்ஸ்’ என்னும் அரசு நிறுவனம், அரூர் வட்டத்தில் கோபிநாதம்பட்டி, பென்னாகரம் வட்டத்தில் அஞ்சனஹள்ளி, பேவனூர், ஜம்னாஹள்ளி, தொன்ஹைட்டஹள்ளி மற்றும் பத்ரஹள்ளி ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இங்கு தயாராகும் கற்கள், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
நிர்வாகம்
57. தருமபுரி பிறந்தது
தற்போதைய தருமபுரி மாவட்டம், ஆங்கிலேய ஆட்சியின்போது சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும்கூட தாலுகாவாகவே நீடித்தது. 1965ஆம் வருடம் அக்டோபர் 2 ஆம் தேதி, தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் ்ஜி.திருமால், ஐஏஎஸ்.
58. எது எல்லை
தனி மாவட்டமாகப் பிரித்தவுடன் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகள் பிரிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் ஆகிய தமிழக மாவட்டங்களும், கர்நாடகாவும் தருமபுரியின் எல்லையாக இருக்கின்றன.
59. எவ்ளோ பெரிசு
இப்போது தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பி ரெட்டி பட்டி, மொரப்பூர் ஆகிய பெரிய ஊர்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. தருமபுரி, அரூர் ஆகிய இரண்டும் வருவாய் மாவட்டங்கள்.

60. நிர்வாகப் பிரிவுகள்
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள், இரண்டு வருவாய் கோட்டங்கள், ஏழு தாலூகாக்கள், ஒரு நகராட்சி, எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பத்து பேரூராட்சிகள் உள்ளன.
61. தாலூகாக்கள்
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய ஏழு தாலூகாக்கள் உள்ளன.
62. ஊராட்சி ஒன்றியங்கள்
தருமபுரி மாவட்டம் நிர்வாக வசதிக்காக எட்டு ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை தருமபுரி, அரூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம்.
63. பேரூராட்சிகள்
தருமபுரி மாவட்டத்தின் பேரூராட்சிகள் பத்து. அவை அரூர், கடத்தூர், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, பென்னாகரம், பி.மல்லாபுரம், கம்பைநல்லூர் ஆகியவை.
64. சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும்
பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இம்மாவட்டத்தின் ஒரேயொரு மக்களவைத் தொகுதி தருமபுரி.

65. மக்கள் வளம் - மனித வளம்
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் 15,06,843 பேர் வசிக்கிறார்கள். இவர்களில் 51 சதவிகிதம் பேர் ஆண்கள் 49 சதவிகிதம் பேர் பெண்கள். சிறுவர்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம். அதாவது, இம்மாவட்டத்தில் ஆறுவயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 11 சதவிகிதம்.
66. கற்றலில் முன்னேற்றம்
தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வி அறிவு 61 சதவிகிதம் ஆகும். இம்மாவட்டத்தில் ஆண்கள்தான் அதிகம் படித்திருக்கிறார்கள். ஆண்களின் படிப்பறிவு 68 சதவிகிதம். படித்த பெண்களின் சதவிகிதம் 53.
67. அரசினர் கலைக் கல்லூரி
தருமபுரியில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி, 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி இது. இதுதவிர, பாப்பாரப்பட்டியில் ஓர் அரசு கலைக் கல்லூரி செயல்படுகிறது. மேலும், பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரூரிலும் பென்னாகரத்திலும் செயல்படுகின்றன.நிறைய தனியார் கல்லூரிகளும் உள்ளன.
அசத்தும் ஊர்கள்
68. அரூர்
அரூர், தாலூகாவின் தலைநகர். சேலத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விவசாய பூமி. இங்கு, தானிய விளைச்சல் அமோகமாக உள்ளது.
69. பரபரப்பான பாலக்கோடு
பாலக்கோடு தாலூகாவில் 56 ஊராட்சிகள் உள்ளன. தருமபுரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திங்கட்கிழமையில் கூடும் சந்தையில் பலாப்பழம், கேழ்வரகு, வெல்லம், எள், தேங்காய் போன்றவை அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.
70. நல்லாம்பள்ளி
நல்லாம்பள்ளி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மனித்தஹள்ளி, பாஹள ஹள்ளி, கம்மம் பள்ளி, தோப்பூர் முதலியவை முக்கியமானவை. நல்லாம்பள்ளி, தருமபுரியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமக்காள நெசவுக்கு புகழ் பெற்ற ஊர். இங்கு தயாராகும் ஜமக்காளங்கள் பெருமளவு பெங்களூருவுக்குச் செல்கின்றன.
71. பெருமைக்குரிய பென்னாகரம்
தருமபுரியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பென்னாகரம். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை கூடும் சந்தை ஃபேமஸ். அஞ்செட்டி காடுகளில் இருந்து வெட்டியெடுத்து வரப்படும் மூங்கில்கள் இங்குதான் சேமித்து வைக்கப்படுகின்றன.

72. மொரப்பூர்
மொரப்பூருக்கு அருகே தொட்டம்பட்டியில், ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள் உள்ளன. ஈச்சம்பாடி, கடத்தூர், கம்பயநல்லூர் முதலானவை முக்கிய ஊராட்சிகள்.
73. பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 21 ஊராட்சிகள் இருக்கின்றன. இப்பகுதியில் மலைவாழ்மக்கள் அதிகம். பூதக்காடு, மஞ்சவாடி, மேலாயனூர், பி.பள்ளப்பட்டி, பட்டுக்கோணாம்பட்டி, சித்தேரி ஆகிய ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
74. அதமன் கோட்டை
தருமபுரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அதமன் கோட்டை. தகடூரை ஆண்ட அதியமான் பெயரை மக்கள் அதமனாக்கி விட்டனர். கோட்டை சிதைந்துவிட்டது. கோட்டையில் உள்ள கோயில்களில் சோமேஸ்வரர் கோயில் பெரியது. விஷ்ணு, பைரவர் அங்காளம்மன் கோயில்களும் உள்ளன.
75. தோப்பூர்
தருமபுரியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தோப்பூர். பழமையான சத்திரம் ஒன்று இங்கு உள்ளது. இங்குள்ள மனுக்கொண்ட மலையின் உச்சியில் தோப்பூர் கணவாயை நோக்கி கோட்டை ஒன்று உள்ளது. திங்கள் கிழமை தோறும் கூடுகின்ற சந்தை இங்கு புகழ்பெற்றது.

76. தீர்தங்களின் மலை - தீர்த்த மலை
தருமபுரியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று தீர்த்தமலை. அரூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல தீர்த்தங்கள் இருப்பதால், தீர்த்தங்களின் மலை என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. செங்குத்தான மலை மீது ஏறிச் சென்றால், தீர்த்தகிரீஸ்வரர் மலைக் கோயிலை அடையலாம்.
77. சில்ல நாயக்கர் கோட்டை
அரூருக்கு அருகே தீர்த்தமலையில் உள்ளது தீர்த்தகிரீஸ்வரர் கோயில். கோயிலுக்கு மேற்கில் செல்லும் ஒரு குறுகிய பாதை வழியாகப் போனால் இல்ல நாயக்கரின் மலைக்கோட்டை வந்துவிடுகிறோம். இக்கோட்டையில், வரலாறு கூறும் பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
78. தென்கரைக்கோட்டை - தேன் கரைக் கோட்டை
அரூர் வட்டத்தில் உள்ள மொரப்பூருக்கு தென்கிழக்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தென்கரைக்கோட்டை கெட்டி முதலியார்களின் ஆளுகையில் இருந்த பகுதி. கோட்டை சிதிலமடைந்துள்ளது. இக்கோட்டையில் சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளன. அந்தக்கால தானியக் கிடங்கு ஒன்று காணப்படுகிறது.
79. பொம்மிடி- காட்டுப் பொருள்களின் சந்தை
சேர்வராயன் மலையில் கிடைக்கக்கூடிய சிறந்த காட்டுப் பொருள்கள், பொம்மிடி சந்தையில் மட்டுமே கிடைக்கும். வியாழக்கிழமையில் இந்த காட்டுப்பொருள்களின் சந்தை கூடுகிறது. பொம்மிடி ரயில் நிலையத்தில் கங்க வட்ச அரசர் ஸ்ரீபுருஷ முத்தரசர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
80. புட்டிரெட்டிப்பட்டி - மரிக்கொழுந்து வாசம்
மொரப்பூருக்கு கிழக்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புட்டிரெட்டிப்பட்டி. அழகிய ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. மருக்கொழுந்து பூ புட்டிரெட்டிபட்டியில் இருந்து தமிழகத்தின் பல பட்டி தொட்டிகளுக்கெல்லாம் செல்கிறது.
81. சோழப்பாடி
தருமபுரி வட்டத்தில் காவிரியும், தோப்பூர் ஆறும் கூடும் இடத்தில் உள்ள கிராமம், சோழப்பாடி. சோழப்பாடி கிராமம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ள இடம் கோயில் சோழப்பாடி. இங்கு, ஆடிப்பெருக்கின்போது மக்கள் அதிகம் கூடுவார்கள். தோப்பூர் ஆற்றுக்கு எதிர்ப்புறம் கோட்டை உள்ளதால் அப்பகுதி கோட்டை சோழப்பாடி எனப்படுகிறது. சந்தை கூடும் இடத்தை சந்தை சோழப்பாடி என்கின்றனர்.
82. கம்பைநல்லூர்
மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வடமேற்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கம்பைநல்லூர். ஊருக்கு வடகிழக்கில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில், பெண்ணை ஆற்றுடன் கம்பைய நல்லூர் ஆறு கலக்கிறது. இங்குள்ள காசிநாதேஸ்வரர் கோயிலில் அரிய பல செய்திகளுடன் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
83. பாப்பாரப்பட்டி சுதந்திர தாகம்
தருமபுரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பாப்பாரப்பட்டி. சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இங்கு ஆசிரமம் அமைத்து தங்கியிருத்தார். கைத்தறி நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர் இது.

84. பெரும்பாலை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெயர் பெற்று விளங்கிய ஊர் பெரும்பாலை. சங்க இலக்கிய நூல்களில் கொங்கு நாட்டின் எல்லையாக குறிக்கப்பட்ட ஊர். பென்னாகரத்துக்குக் கிழக்கில் உள்ளது. இந்த ஊரின் கோட்டையைச் சுற்றி பாம்பாறு இருக்கிறது.
85. அள்ளி அல்லது ஹள்ளி
தருமபுரி மாவட்டத்தில் நிறைய ஊர்ப் பெயர்களோடு `ஹள்ளி’ அல்லது `அள்ளி’ என்று ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். உதாரணம், பாகல அள்ளி, மாரண்ட அள்ளி, கொல்ல ஹள்ளி முதலியன. இந்த அள்ளி, ஹள்ளி என்பன, கன்னட மொழிச்சொல். இதன் தமிழ் அர்த்தம் கிராமம்.
86. தொப்பூர் கணவாய்
தொப்பூர் கணவாய் என்பது கிழக்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்த ஒரு கணவாய். சேலத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தொப்பூர் என்னும் கிராமத்துக்கு அருகில் உள்ளதால், இதற்கு `தொப்பூர் கணவாய்’ என்று பெயர். இதுவே சேலத்தை தருமபுரி மாவட்டத்துடன் இணைக்கிறது. இதுதவிர பாலக்கோடு, அஞ்செட்டி ஆகிய இடங்களில் கணவாய்கள் உள்ளன.
87. காவேரிப்பட்டிணம் போகலாமா?
பட்டினம் என்பது கடற்கரை நகரம். பட்டணம் என்றால் உள்நாட்டு நகரம். இந்த காவேரிப்பட்டணம் திப்புவின் ஸ்ரீரங்கப்பட்டணம் போன்றது. வளமான இந்த ஊரையும் கோட்டையையும் பிடிப்பதற்காக மைசூர் அரசுடன் (ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானுக்கு எதிராக) ஆங்கிலேயர்கள் மூன்று முறை போரிட்டனர்.
88. பாரதிபுரம்
1946 ஆம் ஆண்டு தருமபுரி பகுதியில் பெருமழை. அன்னாசாகரம் ஏரி உடைந்து பகுதி பகுதிகள் நாசமாகிவிட்டன. தியாகி தீர்த்தகிரியாரின் பெருமுயற்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவானதுதான் பாரதிபுரம். அதே சமயத்தில் (ஆதி திராவிடர்களுக்காக) அம்பேத்கர் காலனியும் உருவானது.

89. காரிமங்கலம்
திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை வெற்றி கொண்டு ஆட்சி செய்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்த திருமுடிக்காரி பெயரால்தான் பின்னாளில் காரிமங்கலம் உருவாகி இருக்கலாம் என்கின்றனர்.
90. காரிமங்கலத்தின் சி்றப்பு
கடையெழு வள்ளல்களில் ஒருவனான வள்ளல் ‘காரி’ யின் பெயரைத் தாங்கி நிற்கும் ஊர் காரிமங்கலம். தருமபுரியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள மலையில், சிறப்பு வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது.
91. டெங்கனி கோட்டை
ஏதோ ஒரு மொழியில் டெங்கனிக் கோட்டை என்று அழைக்கப்பட்ட வந்த ஊரைத்தான் இப்போது தேன்கனிக் கோட்டை என்று அழைக்கிறார்கள். தேனும், கனியும் அதிகமாக கிடைக்கும் ஊர் என்ற விளக்கமும் சொல்கிறார்கள். தென்னைமரங்கள் நிறைந்து அழகு செய்யும் ஊர் என்பதால் ‘தென்னை அனிக்கோட்டை’என்று அழைக்கப்படதாகவும் சிலர் பெயர் விளக்கமளிக்கிறார்கள்.
92. லக்கியம்பட்டி
எழுதும்போது இலக்கியம்பட்டி என்றும், பேசும்போது லக்கியம்பட்டி என்றும் வழங்கப்படும் ஊர். அதியமான், ஔவையார் போன்றோர் தமிழ்ப்புலவர்களோடு அமர்ந்து இலக்கியம் வளர்த்த ஊர் என்கிறார்கள்.
93. விவேகானந்தா டவுன்ஹால் தெரு
தருமபுரியில் ‘விவேகானந்தா டவுன்ஹால் நூலகம்’ இருக்கிறது. தெருவுக்குப் பெயரே விவேகானந்தா டவுன்ஹால் தெருதான். இந்த நூலகம் 1901ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொழில்வளம்
94. வளர்ந்துவிட்ட தருமபுரி
தருமபுரி, சிறந்த வணிகத்தலம். விருப்பாட்சிபுரம், வெள்ளைக்கவுண்டன்பாளையம், கொமரசன்ன ஹள்ளி, அன்னசாகரம், மட்டிக்கோணம்பாளையம் ஆகிய ஊர்கள் எல்லாம் தருமபுரி நகரத்துக்குள் வந்துவிட்டன. மற்ற நகரங்களைப்போலவே தருமபுரியும் வளர்ந்துகொண்டேபோகிறது.
95. சேலத்து மாம்பழம் அல்ல - தருமபுரி மாம்பழம்!
மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம்தான். ஆனால், தருமபுரியும் கிருஷ்ணகிரியும்தான் மாம்பழம் அதிகம் விளையும் பகுதிகள். இந்தப் பகுதிகள் முன்பு சேலம் மாவட்டத்தோடு இருந்ததால், மாம்பழமும் சேலத்துக்குச் சொந்தமாகிவிட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி, தருமபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாங்கூழ் தொழிற்சாலைகள் இருக்கின்றன.
96. மஞ்சவாடி மாம்பழம்
திருநெல்வேலிக்கு அல்வா, திருப்பதிக்கு லட்டு மாதிரி சேலத்துக்கு மாம்பழம். ஆனால், உண்மையில் சேலத்துக்கு மாம்பழம் சப்ளைசெய்வது தருமபுரி மாவட்டம்தான். அதிலும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி என்ற ஊரிலிருந்துதான் சேலத்துக்கு அதிக அளவிலான மாம்பழங்கள் செல்கின்றன.
97. மரவள்ளிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கிலிருந்து, சேமியா, ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் தருமபுரி பகுதியில் அதிகம் உள்ளன. சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி பிரிக்கப்படும் முன்பே ஜவ்வரிசி தொழில்கள் இங்கு பெருகிவிட்டன.

98. உமி எண்ணெய்
அரூர் வட்டத்தில், உமியிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் சிறு ஆலைகள் உள்ளன. தவிட்டு எண்ணெய் என்பது தருமபுரிக்கே சொந்தமான ஸ்பெஷல் பொருள்களில் ஒன்று.
99. ஃபுரூட் புராசஸிங் தொழில்கள்
பழரசங்கள், ஊறுகாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இங்கிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றை டின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கும், பாட்டில்களில் அடைத்து உள்நாட்டு விற்பனைக்கும் அனுப்புகின்றனர். இந்த ஃபுரூட் புராசஸிங் தொழில் இந்த மாவட்டத்தில் பிரபலம்.
100. ஸ்டார்ச் சர்வ்
ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள், இந்த மாவட்டம் முழுவதும் பிரபலம். ஸ்டார்ச் சர்வ் என்னும் தொழில் கூட்டுறவுச் சங்கம், 1982 ஆம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டியிலும், இதன் கிளை அலுவலகம் சேலத்திலும் அமைக்கப்பட்டன. இந்தச் சங்கத்தின் தொழிற்சாலைகள், தருமபுரி மாவட்டத்தில் அதிகம் இயங்கிவருகின்றன. இவை, மரவள்ளிக்கிழங்கு சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்குப் பெரும்பயன் தருகின்றன.
101. புளி ஏற்றுமதி
தருமபுரி நகர்ப்பகுதி தோல், நெசவு மற்றும் வெண்ணெய்க்கு பெயர் பெற்றது. இம்மாவட்டத்தின் புளிய மரங்கள் நிறைய இருப்பதால் புளி ஏற்றுமதி நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் பீடியும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
102. களி-புளி-கம்பளி
தருமபுரி மாவட்டத்தில் களி-புளி-கம்பளி என்று கேலியாக குறிப்பிடுவது உண்டு. தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அதிகமாக விளைகிறது. இதில் செய்யப்படும் உணவுப்பொருள் களி ரொம்ப பேமஸ். இதைப்போலவே, ‘சாண்’ நீளத்திற்கு காய்த்துக் தொங்கும் புளியும் பேமஸ். புளியமரங்கள் பூச்சோலை மாதிரி சீசனில் பூத்துக்குலுங்கும். அதுபோல, இப்பகுதியில் கிடைக்கும் கம்பளிப் போர்வைகளின் நுனியை பின்னித் தருவதும் அழகு. அதனால்தான் களி-புளி-கம்பளி என்று அழைக்கின்றனர்.
103. மாட்டுப் பரிசை - 1
தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய ஐந்து மாதங்களில் நடைபெறும் மாட்டுச்சந்தையை `மாட்டுப் பரிசை’ என்று அழைக்கிறார்கள். இந்தச் சொல்வழக்கு, பக்கத்து மாநிலங்களிலிருந்து புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இந்த மாட்டுப் பரிசைகள் பெரும்பாலும் ஊர்களில் உள்ள கோயில் திருவிழாவோடு இணைந்தே நடைபெறுகின்றன.
104 மாட்டுப் பரிசை - 2
தருமபுரி நகரத்தையொட்டிய அதியமான்கோட்டை மற்றும் இண்டூர் கிராமங்களிலும் பாலக்கோடு வட்டத்தில் வெள்ளிச்சந்தை, சோம்பள்ளி கிராமங்களிலும் நடைபெறும் மாட்டுப் பரிசைகள் பிரபலமானவை. இதில் மாடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகிறார்கள். அவ்வளவு பிரபலமானவை இந்த மாட்டுப் பரிசைகள்.
105 மெழுகு தீப்பெட்டித் தொழிற்சாலை
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தருமபுரியில்தான் அதிக அளவு மெழுகு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. தருமபுரியிலிருந்து பிரிந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மெழுகு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக, மெழுகு தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகிறது.
106. கூட்டுறவு சர்க்கரை ஆலை
தருமபுரி மாவட்டம் திம்மணஹள்ளியில் உள்ளது தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை. பாலக்கோட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தச் சர்க்கரை ஆலை. இதன் அருகிலேயே `அதியமான் பேலஸ்’ என்ற ஹோட்டல் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகில் உள்ள ஆலப்புரம் பகுதியில் உள்ளது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை. மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
107. காரிமங்கலம் ஒன்றிய பெண்கள் சேமிப்பு அமைப்பு
தருமபுரியில் செயல்படும் முக்கியமான மகளிர் குழுக்களில் காரிமங்கலம் ஒன்றிய பெண்கள் சேமிப்பு அமைப்புக் குழு மிகவும் பிரபலமானது. காரிமங்கலம் காமராஜர் நகரில் செயல்படுகிறது. மகளிர் தொழில் முனைவோருக்கான நிதி உதவிதான் இந்த அமைப்பின் முக்கியச் செயல்பாடு.

தனியார் தொழிற்சாலைகள்
108. அறுசுவை அக்ரோ புராடெக்ட்ஸ்
காரிமங்கலம் அருகே கரகூர் பகுதியில் உள்ளது அறுசுவை அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனம். தருமபுரியில் உள்ள குறிப்பிடத்தக்க தொழில் நிறுவனங்களில் ஒன்று. உணவுப்பொருள் தயாரிப்பில் ஈடுபடுகிறது.
109. பவானி ஃபுரூட் புராடெக்ட்
மாம்பழக் கூழ் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் பவானி ஃபுரூட் புராடெக்ட் பிரைவேட் லிமிடெட். கரகூர் பகுதியில் சப்பாணிப்பட்டி என்ற கிராமப் பகுதியில் உள்ளது. தருமபுரிப் பகுதியில் இயங்கும் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
110. எக்கோ குரோவெல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகில் உள்ளது எக்கோ குரோவெல் கோகோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (ECO GROWEL COCO INDIA PRIVATE LIMITED). உள்ளூர் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையே இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை.
111. காவிரி கிருஷ்ணா ஃபுரூட்
தருமபுரி பகுதியின் இன்னொரு முக்கியமான தொழில் நிறுவனம், காவிரி கிருஷ்ணா ஃபுரூட் புராடெக்ட் பிரைவேட் லிமிடெட். மாம்பழக் கூழ் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் உற்பத்திதான் இந்த நிறுவனத்தின் முதன்மைப் பணி.
112. மெஜஸ்டிக் பேப்பர் புராடெக்ட்
காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் உள்ளது மெஜஸ்டிக் பேப்பர் புராடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். காகிதம் தயாரிப்பு, காகிதப் பொருள்கள் தயாரிப்பு, பப்ளிஷிங், அச்சுப் பதிப்பு போன்ற பணிகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது.
113. ஏ.எஸ். ஸஃபா பிரைவேட் லிமிடெட்
தருமபுரியில் இயங்கும் இன்னொரு குறிப்பிடத்தக்க தொழில் நிறுவனம் ஏ.எஸ்.ஸஃபா பிரைவேட் லிமிடெட் நிறுவனம். தருமபுரியின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தின் முக்கியத் தொழில் உணவுப் பண்டங்கள் தயாரிப்பு.

சுற்றுலாத் தளங்கள்
114. புகையும் கல்
ஒகேனக்கல் என்றால் புகையும் கல் என்று அர்த்தம். ஒகேனக்கல்லில் தெரியும் காவிரி ஆறு அருவியாக விழும் இடத்தில் தண்ணீரின் திவலைகள் புகைபோல காணப்படுவதால் ஒகேனக்கல் என்று அழைத்தார்கள்.
115. நீர் வீழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்பெஷல் டூரிஸ்ட் ஸ்பாட், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதான். தருமபுரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட்டம் அலை மோதும். இந்த நீர் வீழ்ச்சியை ஒட்டி சுற்றுலா தொடர்பான வணிகமும் இப்போது இங்கு பெருகிவிட்டன.
116. காவிரித்தாயே வருக
தமிழகத்தை காவிரி எட்டிப்பார்க்கும் இடம், ஒகேனக்கல். தோப்பூர் மலைத் தொடரில் 780 அடி கடல் மட்டத்திற்கு மேல் உள்ள பகுதியில் காவிரி தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கிறது. பின்னர் இரண்டாகப் பிரியும் காவிரி, 86 அடி ஆழத்தில் விடுகிறது. விழும் இடம் தான் ஒகேனக்கல்.
117. பரிசல் பயணம்
காவிரி ஆறு ஒகேனக்கல்லில் அருவியாக விழும் இடத்திற்கு முன் ஆறாக ஓடும் இடத்தில், சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்கிறார்கள். பரிசல் என்பது வட்டமான தட்டுபோல இருக்கும் இதன் கீழ் பகுதி தோலால் மூடப்பட்டிருக்கும்.
118. மலையேறும் இடம்
ஒகேனக்கல் பரிசல் பயணத்துக்கு மட்டுமல்ல, மலையேறுவதற்கும் ஏற்ற இடம். சிறிய விலங்குகள் காட்சிக்கூடமும், முதலைப் பண்ணையும் இங்கு இருக்கின்றன. தை மற்றும் ஆடி அமாவசைகளில் இங்கு மக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

119. எண்ணெய்க் குளியல்
ஒகேனக்கல் அருவியில் எண்ணெய் தேய்த்துத் குளிப்பதே தனி சுகம்தான். சம தரையிலிருந்து 6 அடியில் விழும் சிற்றருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது. எண்ணெய்க் குளியலும், மீன் வறுவலும் இங்கு ஃபேமஸ்.
120. தாமஸ் மன்றோ ஏரியும் நினைவுத்தூணும்
தாமஸ் மன்றோ, ஆங்கிலேய ராணுவப்படை வீரர். ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே நடைபெற்ற மைசூர் போரில் வெற்றிபெற்றார். பிறகு, பாரமஹால் பகுதிக்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1792 முதல் 1799 வரை தருமபுரியிலேயே தங்கி பணியாற்றினார். பின்னர், தாமஸ் மன்றோ சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருக்கு தருமபுரி மிகவும் பிடித்த ஊராக இருந்திருக்கிறது. இதுகுறித்த செய்தி, தருமபுரியில் காணப்படும் ஆங்கிலேயர் காலத்து கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவருடைய நினைவாக, தருமபுரியில் நினைவுத்தூண் கட்டப்பட்டுள்ளது.தோப்பூரில் உள்ள ஏரிக்கு தாமஸ் மன்றோ ஏரி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
121. தொல்லியல் அருங்காட்சியகம் - 1
தருமபுரியில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகம் 1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, போர் வீரர்களுக்கான நடுகற்கள் அதிகம் பராமரிக்கப்படுவதால், `நடுகல் அருங்காட்சியகம்’ என்றே அழைக்கிறார்கள்.
122. தொல்லியல் அருங்காட்சியகம் - 2
தருமபுரி தொல்லியல் அருங்காட்சியகத்தில், 25-க்கும் மேற்பட்ட நடுகற்களும், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஈமப்பேழைகள், குத்துவாள், நாணயங்கள், பதக்கங்கள், இரும்புப்பொருள்கள், பனைஓலைச் சுவடிகள், முக்காலி ஜாடிகள், சமணச் சிற்பங்கள், பீரங்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

123. அதியமான் கோட்டையின் இரண்டு ஆச்சர்யங்கள்
தருமபுரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டை. இந்தக் கோட்டையின் பெயரிலேயே அங்கு உள்ள கல்லூரியின் பெயரும் `அதியமான்கோட்டை’ என்றே அழைக்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வின்படி, இந்தக் கோட்டை கி.பி12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
124. தருமபுரிக் கோட்டை
இந்தக் கோட்டையை 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பகுதியை ஆண்ட ஜெகதேவிராயர் கட்டியதாகக் கூறுகிறார்கள். பீஜப்பூர் சுல்தான்கள் மற்றும் மைசூர் உடையார்களின் கைகளில் மாறி மாறி இருந்தது இந்தக் கோட்டை. ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் நடந்த போர்களில் இந்தக் கோட்டை சீரழிந்தது.
125. கதை சொல்லும் ஓவியங்கள்
தருமபுரி மாவட்டத்தின் மலைப்பாறைகளிலும் ஈமச்சின்னங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை காவி நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் வரையப்பட்டவையே. இவை, கற்கால மற்றும் பெருங்கற்கால மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன.
126. தென்கரைக்கோட்டை
தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அரூர் செல்லும் சாலையில் கிராமியம்பட்டிக்கு அருகில் உள்ளது, தென்கரைக்கோட்டை. இது, ஜலகண்டேஸ்வரர் நதிக்குத் தெற்கே உள்ளது. கோட்டையைச் சுற்றி 20 அடி அகலத்துடன் ஆழமான அகழி உள்ளது.
127. வீரபத்திரக்கோட்டை
பாலக்கோடு-ராயக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், பிக்கன அள்ளி ஊரிலிருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரபத்திர மலைக்கோட்டை. முன்பு `இட்டிக்கல் துர்க்கம்’ என்று அழைக்கப்பட்டது. பாரமஹால் பகுதியின் 12 கோட்டைகளில் இதுவும் ஒன்று.

128. பழங்காலத்தின் பைபாஸ் -அதியமான் பெருவழி
பெருவழி என்றால் தற்போதைய நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிடலாம். இவ்வளவு பெரியதாக, அகலமாக இல்லையென்றாலும், பழைய காலத்தின் பைபாஸ் சாலை என இந்தப் பெருவழிகளைச் சொல்லலாம். அதியமான் கோட்டையிலிருந்து `நாவற்தாவளம்’ என்ற ஊருக்குச் சென்ற பெருவழியே `அதியமான் பெருவழி’ என்று அழைக்கப்படுகிறது.
129. அதியமான் பெருவழிக்கல்
அதியமான் பெருவழிச் சாலையில் முத்தம்பட்டி என்ற ஊரின் வலதுபுறமும், அதியமான் கோட்டை-பாலக்கோடு சாலையின் மேற்குப் புறமும் பெருவழிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருவழிக்கல் என்பது, ஒரு சாலை எந்த ஊர் செல்கிறது, எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிந்தனை ஆச்சர்யம்தான்!
130. தூவல் : அழகிய சிறிய அருவி
ஊத்தங்கரை வட்டத்தில் நடுப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகே பரந்து தெளிந்து ஓடும் தென்பெண்ணையில் உள்ள சிறிய அருவி தூவல். அந்த சிறிய அருவி இருக்கும் பகுதிக்கும் தூவல் என்றே பெயர். ஊத்தங்கரையில் இருந்து 16- கி.மீட்டர் தொலைவில் சிங்காரப்பேட்டை வழியாகப் போகலாம். தூவல் அழகிய அருவியாக காட்சி தருகிறது.
131. போகுமலைக்கோட்டைக்கு போவோமா?
அரைச்சந்திர வடிவத்தில் இருக்கிறது இந்த மலை. போகுமலை என்றால் கன்னடத்தில் மொட்டை மலை என்று பொருள். பெயருக்கு ஏற்ப, ஒரே பாறாங்கல்லால் ஆனது. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இம்மலைமீது பெரிய கோட்டை கட்டியிருக்கிறார்கள்.
132. சி.எஸ். கிராண்ட் தீம் பார்க்
தருமபுரி மாவட்ட மக்களுக்கு சி.எஸ். கிராண்ட் அம்யூஸ்மெண்ட் தீம் பார்க் மிகச் சிறந்த பொழுதுபோக்குத்தளம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குதூகுலத்துடன் என்ஜாய் பண்ணலாம். இந்த தீம்பார்க் காரிமங்கலம் - டூ - அரூர் சாலையில் புளியம்பட்டியில் உள்ளது

தருமபுரி இயற்கைவளமும் விவசாயமும்
133. காட்டுவளம்
தருமபுரி மாவட்டம் 1,700 சதுர கிலோமீட்டர் காடுகளைக் கொண்டது. இந்த மாவட்டக் காடுகள், கர்நாடகம் - தமிழகம் ஆகிய இரண்டு மாநில எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளன. காவிரி, சனத் குமார நதி, வாணியாறு, தென்பெண்ணை, அம்மையநல்லூர் ஆறு ஆகிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இந்தக் காடுகள் உள்ளன.
134. காவிரி காட்டுயிர் புகலிடம்
காவிரி காட்டுயிர் புகலிடம் (Cauvery wild life Sanctuary), கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா, சாமராச நாகர், கிராம நகரம் மாவட்டங்களில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. அக்டோபர்-மார்ச் மாதங்களில் கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து யானைகள் இடம்பெயர்ந்து இந்தக் காடுகளுக்கு வலசை வருகின்றன. இந்தப் புகலிடத்தின் வழியாகவே காவிரி ஆறு பாய்கிறது. இதன் கிழக்கே (நம் மாநிலத்தின்) தருமபுரி வனத்தோட்டம் அமைந்திருக்கிறது. ஆற்றுப்படுக்கைக்காடுகள், இலையுதிர்க்காடுகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.
135. இயற்கைக் காடுகள்
வனவளம் நிறைந்த தருமபுரி மாவட்டத்தில், இயற்கைக் காடுகளில் விலை உயர்ந்த மரங்கள் வளர்கின்றன. மூங்கில் 3,359 ஹெக்டேர் பரப்பளவிலும், சந்தனமரங்கள் 574 ஹெக்டேர் பரப்பளவிலும், யூகலிப்டஸ் 1,483 ஹெக்டேர் பரப்பளவிலும், புளியமரங்கள் 1,000 ஹெக்டேர் பரப்பளவிலும், தேக்கு மற்றும் வீடு கட்ட உதவும் மரங்கள் 517 ஹெக்டேர் பரப்பிலும் வளர்ந்து வளம் தருகின்றன.
136. மண்வாசம்
மண் வகையில் சுண்ணாம்பு, கார்பனேட் கலக்காத செம்மண் வகை, மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது. இந்த மண், வருடம் முழுவதும் பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. வறட்சியான பூமி என்றாலும் தருமபுரி வளம்தரும் பூமிதான். தலைவிரிச்சான் சோளம், சிறுதானியங்கள், கொள்ளு, நிலக்கடலை, மா, புளி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
137. மூன்று வகை விவசாயம்
தருமபுரி மாவட்டத்தில் செய்யப்படும் விவசாயத்தை மேட்டு நிலப்பரப்பில் செய்யப்படும் கொல்லை விவசாயம், ஏரி நீர்கொண்டு செய்யப்படும் கழனி விவசாயம், கிணற்றுப் பாசனம்கொண்டு செய்யப்படும் நன்செய், புன்செய் விவசாயம் என மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

138. ஏரிப்பாசனம்
தருமபுரி மாவட்டத்தில் ஏரிப்பாசனம் இருந்ததற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டு வரை பல்லவர் ஆட்சியின்கீழ் தருமபுரி இருந்தபோது, ஆறுகள் இல்லாத பகுதிகளில் வறட்சி நீங்க ஏரிகள் வெட்டப்பட்டு வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அரசர்களும் ஏரிகள் பல வெட்டினர். தருமபுரி இப்படித்தான் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக மாறியது.
139. தண்ணீர் தரும் தாய்வீடு
தருமபுரி நகராட்சியையொட்டி சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராமாக்காள் ஏரி. இது, 20,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனவசதி தருகிறது. மதிகோன்பாளையம், பழைய தருமபுரி, கிருஷ்ணபுரம், செம்மாண்ட குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் தரும் தாய்வீடு, ராமாக்காள் ஏரி.
140. திலீபரசன் குட்டை
கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூரைத் தலைநகராகக்கொண்டு மகேந்திர நுளம்பன், சைவமத ஆச்சாரியாருக்கு `மருதனேரி’ என்ற ஏரியை தானமாக வழங்கிய நிலத்தில் இந்த அரசனின் வம்சத்தின் வழி வந்த திலீபரசன் என்பவன் பாப்பாரப்பட்டியில் `திலீபரசன் குட்டை’ என்ற ஒரு குட்டையை அமைத்திருந்தான்.
141. ஏரிகளின் கதை
தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கி.பி12ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் தென்னிட்டேரி, புறக்கரையேரி, மேலேரி, குளத்தூர் ஏரி, பெரியேரி, மழவராயபுத்தேரி, தேவசமுத்திரமேரி போன்ற ஏரிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
142. நடுகல் ஏரி
இறந்தவர்களின் நினைவாக நடுகல் நடுவதுதானே வழக்கம். தருமபுரியில், இருந்தவர் நினைவாக மக்களுக்கு நலம் காக்கும் வகையில் ஏரி ஒன்று வெட்டப்பட்டிருக்கிறது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் பாணர்வம்சத்து அரசன் `மாவலி வானவராயன்’ ஆட்சியின்போது, இறந்தவர் நினைவாக ஏரி வெட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அரூர் அருகே உள்ள குறும்பட்டி கல்வெட்டு கூறுகிறது.
143. எக்கச்சக்கமான ஏரிகள்
கி.பி 11ஆம் நூற்றாண்டில், தகடூரை ஆட்சிசெய்த பிற்கால சோழர்கள் காலத்திலிருந்து நுளம்பர்கள், விஜயநகர அரசர்கள் காலங்களில் ஏரிகள் வெட்டுவது அதிகரித்திருக்கிறது. இன்று நாம் பார்க்கும் பாப்பாரப்பட்டி ஏரி, பனைக்குளம் ஏரி போன்றவை சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டவைதான்.

144. குட்டைநீர்ப் பாசனம்
தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான சிறிய ஏரிகள், குட்டைகள் என்று குறிக்கப்பட்டுள்ளன. தட்டாங்குட்டை, கூத்தாண்டார்குட்டை, மூங்கில்குட்டை ஆகியவை பற்றிய குறிப்புகளை வைத்துப்பார்க்கும்போது ஏரிகள் மட்டுமல்லாமல், சிறிய குட்டைகளும் வெட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை அறிய முடிகிறது.
145. வித்தியாசமான விவசாயம்
தருமபுரி மக்கள் செய்யும் விவசாயம் வித்தியாசமானது. `புனல்காடு சாகுபடி’ என்ற ஒரு விவசாயத்தைச் செய்துவந்துள்ளனர். காட்டில் உள்ள மரம், செடி, கொடிகளை அப்புறப்படுத்தி தீயிட்டுக்கொளுத்திவிட்டு, பிறகு நிலத்தை சரிசெய்து விவசாயம் செய்வார்கள். இன்றும் சில பழங்குடி மக்களிடையே இந்த விவசாயத்தைப் பார்க்க முடியும்.
146. விவசாயத்துக்கு உதவும் பன்றிகள்
சமவெளியில் இருக்கும் விவசாயிகளைப்போல மலைப்பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் செய்வதில்லை. ஏர் பூட்டி, மாடுகளை வைத்து உழுது பயிரிடுவதில்லை. காட்டுப்பன்றிகள் கிழங்குகளுக்காகத் தோண்டிய நிலத்தில் உருவாகும் புழுதியில் விதை விதைக்கிறார்கள். இந்த முறையிலான விவசாயம், சில பழங்குடி மக்களிடம் இன்றும் காணப்படுகிறது.
147. சின்னாறு (சிறப்பாறு)
காவிரி ஆற்றின் துணை ஆறான சின்னாறு, ஓசூர் வட்டம் தளி அருகில் உள்ள தேவரபெட்டம் என்னும் மலைப்பகுதியில் தோன்றி கெலமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் வழியாகப் பாய்ந்து, ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
148. பொன்னி நதி
காவிரி, தென்பெண்ணை, பாலாறு (வேலூர் மாவட்டம்) ஆகிய மூன்று ஆறுகளுமே அந்தந்த உள்ளூர் மக்களால் `பொன்னி ஆறு’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் காவிரி, தென்பெண்ணை ஆகிய இரண்டு ஆறுகளும் தருமபுரியில் `பொன்னி ஆறு’ என்றே அழைக்கப்படுகின்றன. இந்த நதிக்கரைகளில் பொன்னியம்மன் கோயில்கள் கட்டப்பட்டு வழிபடுகின்றனர்.
149. கேசர் குழிப்பள்ளம் ஆறு
கேசர் குழிப்பள்ளம் ஆறு, கடல் மட்டத்திலிருந்து 1,220 மீட்டர் உயரத்தில் உள்ள `கள்ளிக்காட்டு வனம்’ என்ற மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. 25 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, காவிரி ஆற்றின் துணை ஆறாக, சின்னாற்றில் கலக்கிறது.
150. நதியைத் தாலாட்டும் குளங்கள்
தருமபுரியை வளமாக்கிய நதிகளில், சின்னாறு முக்கியப் பங்குவகிக்கிறது. இந்த நதியால் பல்வேறு ஏரிகள் நிரம்புகின்றன. ஆறு மட்டுமல்லாமல், தருமபுரி நகரிலும் அதையொட்டியுள்ள கிராமங்களிலும் உள்ள சர்.தாமஸ் மன்றோ உருவாக்கிய கான் சாகிப் குளம், நரசைய்யர் குளம், பலப்பின் குட்டை போன்ற பல்வேறு நீர்நிலைகள் நிரம்புகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.
151. தொப்பையாறு
சேர்வராயன் மலைப்பகுதியில் ஆரம்பித்து தென்மேற்கு முகமாகப் பாய்ந்து தொப்பையாற்று நீர்த்தேக்கத்தில் கலக்கிறது. தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று ஆகியவை கொண்டுவரும் மழையால் இந்த நதி நிரம்புகிறது.

152. நாகாவதி ஆறு
தருமபுரியின் மலைப்பகுதியில் உற்பத்தியாகி தென்மேற்குத் திசையில் ஓடி மேட்டூர் அணைக்கு மேற்கே கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவகாலங்களில், பெய்யும் மழைநீர், நாகாவதி நதிக்கு வருகிறது. காவிரி நதியின் சிறிய உபநதி.
153. வாணியாறு
இது, தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறு. சேர்வராயன் மலையில் தோன்றுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடிப் பகுதிகளில் பாய்ந்து, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
154. ஆறு மனமே ஆறு!
தருமபுரி மாவட்டத்தில் ஓர் ஆறு பல பெயர்களாலும், பல ஆறுகள் ஒரே பெயராலும் அழைக்கப்படுவது ஆச்சர்யமே! ஆறு ஆறுகள், `சின்னாறு’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இரண்டு ஆறுகள், `பாம்பாறு’ என்று அழைக்கப்படுகின்றன. மூன்று ஆறுகள், `கல்லாறு’ என்று அழைக்கப்படுகின்றன. இன்னொரு மூன்று ஆறுகள், `வரட்டாறு’ என்று அழைக்கப்படுகின்றன.
155. பஞ்சப்பள்ளி அணை
தருமபுரியின் வறட்சிநிலை கருதி, நிறைய அணைகள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சப்பள்ளி அணை அல்லது சின்னாறு அணை என்பது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை. இது, மேலகிரி(மலை)யும், ஊடே துர்க்கம் மலைகளும் நெருங்கி இருக்கும் பஞ்சப்பள்ளி பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. 1977ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 19.27 அடி உயரத்துக்கு நீர் சேமிக்கப்படுகிறது.
156. தும்பல அள்ளி அணை
தருமபுரி மாவட்டத்தில் பூலம்பட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. பாலக்கோடு வட்டம் தும்பல அள்ளிக்கு 14 கிலோமீட்டர் தென் கிழக்கே உள்ளது. 1983ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 131 மில்லியன் கனஅடி. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் 20 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த இந்த அணை, சமீபத்திய மழைக்கு நிரம்பியிருக்கிறது.
157. கேசர் குழிப்பள்ளம் அணை
தருமபுரி மாவட்டத்தில் கேசர் குழிப்பள்ளம், சின்னாறு ஆகிய ஆறுகள் சேரும் இடத்துக்கு 10 கிலோமீட்டர் மேலே, கேசர் குழிப்பள்ளம் அணை (Kesar gulihalla) அமைந்துள்ளது. இந்த இடம், பாலக்கோடு வட்டம் திருமால்வாடி சிற்றூருக்கு அருகில் உள்ளது. 1983ல் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு, 134 மில்லியன் கனஅடி.
158. நாகாவதி அணை
இது, தருமபுரி மாவட்டத்தில் அரக்கசார அள்ளிக்கு அருகே சின்னம்பள்ளி ஊருக்கு அருகே கட்டப்பட்டுள்ளது. நாகாவதி ஆற்றின் குறுக்கே 1986ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கொள்ளளவு, 134 மில்லியன் கனஅடி.
159. ஈச்சம்பாடி அணை
தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்தின் ஈச்சம்பாடிக்கு அருகே, கட்டப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு பெண்ணையாற்றின் குறுக்கே அம்பையநல்லூர் ஆறு சந்திக்கும் இடத்துக்கு அருகே அமைந்துள்ளது இந்த அணை.
160. வள்ளிமதுரை அணை
சித்தேரி மலையின் அடிவார கிராமமான வள்ளி மதுரையில் கட்டப்பட்டுள்ளது. வரட்டாறு நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள, வரட்டாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

161. தொப்பையாறு அணை
தருமபுரி மாவட்டத்தில், சென்னை - கள்ளிக் கோட்டை தேசிய நெடுஞ்சாலை(NH)க்குக் கிழக்கே உப்பாளம்மான் கோயில் அருகில் கட்டப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு தொப்பையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு, 299 மில்லியன் கனஅடி.
162. வாணியாறு அணை
வாணியாற்றின் குறுக்கே பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, முள்ளிக்காடு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது வாணியாறு அணை. வெங்கடசமுத்திரம் என்ற ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1985ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் கொள்ளளவு, 418 மில்லியன் கனஅடி.
163. வண்டுச் சித்தர்கள் மலை
அரூருக்கு அருகில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தீர்த்தமலை. இங்கு அக்னி தீர்த்தம், குமாரதீர்த்தம், கௌரிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், சிறுவண்டுகளாக இந்த மலையில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். 1,200 அடி உயரத்தில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
164. மூக்கனூர் மலை
பாப்பிரெட்டிபட்டிக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது மூக்கனூர் மலை. இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால், மாவட்டத்தின் பெரும்பகுதியைப் பார்த்துவிடலாம். மலையின் உச்சியில் இரண்டு பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த மலையில் தேன், மரவள்ளிக் கிழங்கு ஆகியவை கிடைக்கின்றன.
165. மேலகிரி (யானைப் பாதை)
மேலகிரி மலைகள் தருமபுரி மற்றம் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளன. ஒரு பக்கம் கர்நாடகத்தையும் இன்னொரு பக்கம் காவிரி ஆற்றையும் தொட்டு நிற்கிறது. இந்த மலையில் உள்ள காடுகள், இலையுதிர் காடுகள். மேலகிரி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இரண்டு பாரம்பர்ய யானை வழித்தடங்கள் இந்த மலைத்தொடரில் உள்ளன.
166. குட்டிராயன் மலை (உயரமான மலை)
மேலகிரி மலையின் மிக உயரமான பகுதி குட்டிராயன் மலை. இதன் உயரம் 1,390 மீட்டர். அதாவது 4,560 அடி. குட்டிராயன் மலைச்சரிவுகளின் சில பகுதிகளில் சோலைக்காடுகள் காணப்படுகின்றன.
167. வத்தல் மலை (காபி விளையும் மலை)
தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வத்தல் மலை. இந்த மலையின் தட்பவெப்பம் காபி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதால், 2011ஆம் ஆண்டு, மாவட்ட நிர்வாகம் இந்த மாவட்ட மக்களைக் காபி பயிரிட அறிவுறுத்தியது. அதற்காக 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதனால் சிறிய அளவில் காபி பயிர் சாகுபடி இங்கு நடந்துவருகிறது.
168. மலைக்காடுகள்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் இலையுதிர் தாவரங்கள், பசுமைமாறா தாவரங்கள், வெப்பமண்டல தாவரங்கள் ஆகியவை அந்தந்த நில அமைப்புக்கு ஏற்ப காணப்படுகின்றன. இந்த மலைக்காடுகளில் `பெரு மாமரம் (giant mangifer Indica) பன்னம் புளி, காட்டுப்பலா, மருதமரம், ஆச்சா, இலுப்பை, தும்பலி மரம் போன்ற மரங்கள் காணப்படுகின்றன.
169. மேலகிரி காடுகள்
தருமபுரியில் உள்ள மேலகிரி காடுகள், பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் வடகிழக்கில் `பன்னேரு ஹட்டா’ தேசியப் பூங்காவும், தெற்கில் காவிரி வனவிலங்கு சரணாலயம் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதி, சத்தியமங்கலம் காட்டுப்பகுதி வழியாக நீலகிரி மலைப்பகுதியை இணைக்கிறது.
170. காட்டு உயிர்கள்
தருமபுரி மலைக்காடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் சிறுத்தை, செந்நாய், தேன் கரடி, குள்ளநரி, புள்ளிமான், கடமான், நாற்கொம்பு மான், ஆற்று நீர்நாய் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன. ஓசூர் காடுகளில் லாங்கர் குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. மலைகளில், தேன் கரடி, நாற்கொம்பு மான் போன்றவை அழிவின் விளிம்பில் உள்ளன.
171. மலைப் பறவைகள்
தருமபுரி மாவட்ட மலைப்பகுதிகளில், வெள்ளை கானாங்கோழி, சாம்பல் தலை பச்சைப் புறா, தேன் பருந்து, எகிப்திய பிணம் தின்னிக் கழுகு, சிறிய மீன் கழுகு, பூமன் ஆந்தை, குடுமிப் பருந்து, மயில், பூங்கொத்தி ஆகிய பறவைகள் காணப்படுகின்றன.
172. ஊர்வன, நீர், நில வாழ்வன
இந்திய நாகம், இந்திய மலைப்பாம்பு, கண்ணாடிவிரியன், சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவையும், இந்தியப் பச்சோந்தி, இந்திய உடும்பு, நட்சத்திர ஆமை, விஷமுள்ள தவளை, பாறைத் தேரை ஆகியவையும் தருமபுரி மலைகள் மற்றும் காடுகளில் காணப்படும் ஸ்பெஷல் உயரினங்கள்.

173. முள் மேல் தருமபுரி
`உன்னிமுள்’ (Lantana) என்கிற ஒரு வகை முள்புதர் செடிகள் தருமபுரி மலைகள், காடுகள் மற்றும் இதர பகுதிகளில் பரவிவருகின்றன. இவை, எந்த விலங்குகள் சாப்பிடவும் பயன்படுவதில்லை. இந்த உன்னிமுள் வேகமாகப் பரவிவருவதால் மற்ற தாவரங்களின் வளர்ச்சி அதிகமாகப் பாதிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துவருகிறது. தருமபுரிக்கு இது ஓர் அச்சுறுத்தால்தான்.
174. மலை சாகுபடி
வத்தல்மலை உள்ளிட்ட சில மலைப்பகுதிகளில் பாரம்பர்யமாக தினை, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களைப் பயிர்செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், மலைவாழ் மக்கள் கடுகு, அவரை போன்ற பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர்.
175. கல்வழித் தடம், கல் கோட்டைகள்
அஞ்செட்டி ஊராட்சியில் இருக்கும் எருமுதனப்பள்ளி என்பது தருமபுரி மாவட்டத்தின் பழைமைவாய்ந்த ஊர். இங்குள்ள வனப்பகுதியில் சுமார் 2000 வருடம் பழைமையான குளம் ஒன்று உள்ளது. மேலும், அக்கால மக்களால் வழிபடப்பட்ட வனதேவதை கோயில்களும் உள்ளன. இவை மட்டுமல்லாமல், ஊரைச் சுற்றிலும் அந்தக் கால மக்களால் ஏற்படுத்தப்பட்ட கல்வழித் தடங்களும், அவர்களால் கட்டப்பட்ட கற்கோட்டைகளும் உள்ளன.
நினைவில் கொள்ள வேண்டியவர்கள்
176. சுப்ரமணிய சிவா
மிகச்சிறந்த சுதந்திரப்போராட்ட வீரரும், தேசபக்தருமான சுப்ரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்துக்காகத் தேர்ந்தெடுத்த ஊர் பாப்பாரப்பட்டி. இது, பென்னாகரம் தாலுகாவில் உள்ளது. கடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் சுநத்திரப் போராட்டத்தில் வீறுகொண்டு நடைபோட்டவர். பாப்பாரப்பட்டி, இவரின் போராட்டங்களால் புகழ்பெற்றது.
177. ராஜகோபாலாச்சாரியார்
`அரசியல் சாணக்கியர்’ என்று அறியப்பட்ட ராஜகோபாலாச்சாரியார், தருமபுரி மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்தவர். பிரிக்கப்படாத சேலம் மாவட்டத்தின் நகரவைத் தலைவராகப் பணியாற்றியதால், சேலம்வாசிகளால் `சேலத்துக்காரர்’ என்று கொண்டாடப்படுகிறார். ராஜாஜியால் தருமபுரிக்குப் பெருமை சேர்ந்ததை மறுக்க முடியாது.

178. ஏ.பஞ்சாட்சரம்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி பஞ்சாட்சரம். சிறு வயதில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவாவுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்தவர். 1937-ம் ஆண்டு சுப்ரமணிய சிவா, `வாசகச் சாலை’ என்ற நூலகத்தை ஏற்படுத்தினார். 1940 முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தன் 98-வது வயதில், 2015-ம் ஆண்டு மறைந்தார்.
179. ஜி.ஏ.வடிவேலு
தருமபுரியை அடுத்த அன்னசாகரம் கொல்லஹள்ளி கிராமத்தில் பிறந்தவர், தியாகி ஜி.ஏ.வடிவேலு. சின்ன வயதிலிருந்தே சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்த அவர், அதை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். காந்தியடிகள் தொடங்கிய தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்.
போக்குவரத்து
180. ரயில் நிலையங்கள்
தருமபுரியில் ஐந்து ரயில் நிலையங்கள் உள்ளன. அவை (1) தருமபுரி, (2) மொரப்பூர், (3) பாலக்கோடு, (4) மாரண்ட அள்ளி, (5) பொம்மிடி.
181. தருமபுரியில் புதிய பேருந்து நிலையம்
`தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என்று தருமபுரியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். தற்போது நாள் ஒன்றுக்கு 532 பேருந்துகள் வந்துசெல்கின்றன. `பெருகிவரும் நகர நெரிசலுக்கு ஏற்ப, சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
கோயிலும் திருவிழாக்களும்
182. இருளப்பட்டி கன்னியம்மன் கோயில் திருவிழா
அரூர் வட்டத்தில் உள்ள தீர்த்தமலை தேர்த்திருவிழாவும், சோளமரத்துப்பட்டி சிவராத்திரிப் பெருவிழாவும் பிரபலமானவை. இவை, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறும். இதேபோன்று ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இருளப்பட்டி கன்னியம்மன் கோயில் திருவிழா குறிப்பிடத்தக்கது.
183. ஆடிப்பெருக்கு அட்ராக் ஷன்
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ம் தேதி, காவிரியை வரவேற்கும் ஆடிப்பெருக்குத் திருவிழா, ஒகேனக்கலில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீர்த்தமலைக் கோயிலிலும் இந்தத் திருவிழாவின்போது மக்கள் அதிகம் கூடுவர்.
184. தீர்த்தமலைக் கோயில் திருவிழா
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தீர்த்தமலைக்கோயில் திருவிழா புகழ்பெற்றது. திருவண்ணாமலை மாதிரி தீர்த்தமலையிலும் மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஒவ்வொரு தமிழ் வருடப் பிறப்பின்போது சிவபெருமானுக்கு 365 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்கிறார்கள்.
185. தீப்பாஞ்சி அம்மன் திருவிழா
கணவன் இறப்பைத் தாங்காமல் தீயில் விழுந்து உயிர்விடும் பெண்களுக்காக நடப்படும் நடுகற்களைத் `தீப்பாய்ந்தாள்’ என்றும், `தீப்பாஞ்சி அம்மன்’ என்றும் அழைக்கிறார்கள். அப்படி ஒரு தீப்பாஞ்சி அம்மன் நடுகல், நல்லம்பள்ளி அருகே கந்துகால்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது. 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தீப்பாஞ்சி அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகின்றனர்.
186. கால பைரவர் கோயில்
அதியமான் கோட்டையில் உள்ள இந்தக் கோயில் மிகவும் புகழ்பெற்றது. 1235-ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், முன்பு இந்தக் கோயில் `பரமேசுவரமுடையார் கோயில்’ என்று அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. கால பைரவர் நான்கு கைகளுடன், கையில் சூலம் வைத்துக்கொண்டு தன் ஊர்தியான நாயுடன் உள்ளார்.
187. சோமேஸ்வரர் கோயில்
நுளம்பர்கள் கட்டிய பல கோயில்களில் சோமேஸ்வரர் கோயில் குறிப்பிடத்தக்கது. மகேந்திர நுளம்பன் காலத்தில் கோயிலின் இறைவன் மயீந்தீஸ்வரமுடையார் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். அதியமான் கோட்டைக்குள் உள்ள இக்கோயிலில் அம்மனுக்கு சன்னதி இல்லை.
188. சூப்பர் சூரியக்கல்
அதியமான் கோட்டை சோமேஸ்வரர் கோயிலில் உள்ள சூரியக்கல், ஓர் ஆச்சர்யம். சோமேஸ்வரர் கோயிலின் வாசலில், கல்லில் அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட வளைவுதான் சூரியக்கல். 3 அடி உயரம் உள்ளது. குறிப்பிட்ட நாளில் மாலை நேரத்தில் இந்த வளைவில் புகுந்து செல்லும் சூரியக்கதிர்கள், கோயில் சிவலிங்கத்தின்மீது படுவது சிறப்பு.
189. சென்னராயப்பெருமாள் கோயில்
அதியமான் கோட்டையில் உள்ள சென்னராயப்பெருமாள் கோயிலில் எந்தக் கல்வெட்டும் இல்லை. இந்தக் கோயிலில் உள்ள ஓவியங்கள், கோயிலின் பழைமையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ``இந்த ஓவியங்கள், சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை’’ என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
190. கோட்டை காமாட்சியம்மன் கோயில்
இது, தருமபுரிக் கோட்டையில் உள்ளது. கி.பி 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் நுளம்பர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலில் ராமாயணக் காட்சிகளை விவரிக்கும் சிற்பங்கள் உள்ளன. சோழர்காலக் கல்வெட்டுகள், இந்தக் கோயிலை `முழமாயிரமுடையார் கோயில்’ என்று குறிப்பிடுகின்றன.

191. கோட்டை மல்லிகார்ஜுனர் கோயில்
மல்லிகார்ஜுனர் என்ற பெயர், கர்நாடகாவில் ரொம்பவே பிரபலம். தருமபுரிக் கோட்டைக்குள் அமைந்துள்ளது. இந்தக் கோயிலும் நுளம்பவம்சத்து அரசர்களால் கட்டப்பட்டதுதான். பழங்காலக் கல்வெட்டுகள், இந்தக் கோயிலை `சாணாயிரமுடையார் கோயில்’ என்று குறிப்பிடுகின்றன.
192. கோட்டை பரவாசுதேவப்பெருமாள் கோயில்கள்
தருமபுரிக் கோட்டையில் உள்ள இந்தக் கோயில், பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. 18 சித்தர்களில் தன்வந்திரி, திரிமூலி ஆகியோர் கோயிலுக்கு திருப்பணி செய்ததாகவும் கூறப்படுகிறது. நுளம்பர் காலத்திலோ, அதற்கு பிற்பட்ட காலத்திலோ கட்டப்பட்டிருக்க வேண்டும்.
193. பஞ்சம் தீர்த்த பகவான்
தருமபுரி நகரின் மேற்குப் பகுதியான குமாரசாமிப் பேட்டையில் உள்ளது முருகன் கோயில். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, பஞ்சப் பாதிப்பு இல்லாத இடங்களை நோக்கி மக்கள் நகர்ந்தனர். இதேபோல வேலூர் பகுதியைச் சேர்ந்த நெசவுத்தொழில் அதிபரான வையாபுரி முதலியார் தலைமையில் இங்கு குடியேறியவர்கள், பஞ்சம் வராமல் பார்த்துக்கொள்ள இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறார்கள்.
194. மௌன்ட் கார்மெல் சர்ச்
பள்ளிப்பட்டியில் இருக்கும் மௌன்ட் கார்மெல் தேவாலயம் இப்பகுதியில் பிரபலமானது. இது தருமபுரியிலிருந்து பொம்மிடி வழியாக இந்த தேவாலயத்துக்கு வந்து சேரலாம். ஈஸ்டர் திருநாளையொட்டி இங்கு நடைபெறும் ‘குரோட்டோ’ விழா எனப்படும் குகை திருவிழா சிறப்பானது.
195. திப்பு சுல்தானைத் திருத்தியவருக்கு தர்க்கா
இப்போது ராஜாப்பேட்டை என்று சொல்லப்படும் ஊர் அருகில் ஒரு முஸ்லிம் ஞானி இருந்திருக்கிறார். ஒரு முறை திப்புசுல்தான் இவரை கூப்பிட ஆள் அனுப்பிய போது, இந்த ஞானி போகவில்லையாம். பிறகு திப்பு சுல்தானே நேரில் வந்து ஆசி பெற்றிருக்கிறார். இந்த ஞானி அடக்கம் செய்துள்ள இடம் தான் சங்கா அலிசா அவுலியா தர்கா.

196. பெண்களே இழுக்கும் தேர்
குமாரசாமிப்பேட்டை முருகன் கோயிலின் திருவிழாவில் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரத்தின்போது தேர்த்திருவிழா நடைபெறும். தேரோட்டத்தின்போது, சிறிது தூரத்துக்கு பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுப்பர்.
197. இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில்
தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையையொட்டி இருமாத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது, இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில். 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர்.
198. திருட்டைக் கண்டுபிடிக்கும் தெய்வம்
இருமாத்தூர் கோயிலுக்கு அருகில் தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பழைமையான பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. திருடுபோன பொருள்கள் கிடைக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், இந்தப் புளியமரத்தின் கிளையில் உயிருடன் உள்ள கோழியைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதனால் திருடுபோன பொருள் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
199. கணவாய் மாரியம்மன் கோயில்
தருமபுரியிலிருந்து கடத்தூர் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் மாரியம்மன் நகர் என்ற இடத்தில் உள்ளது, கணவாய் மாரியம்மன் கோயில். மூக்கனூர் மலைக்கும் குப்பை மலைக்கும் இடையே உள்ள கணவாயில், ஒரு வணிகரை மாரியம்மன் காப்பாற்றியதாகவும், அந்த வணிகரே இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
200. அழகிய ஓடைக்கரையில் ஆஞ்சநேயர்
தருமபுரி-சேலம் ரயில்பாதையில் முத்தம்பட்டி ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில். தொப்பூர் வனப்பகுதியில் குன்றுகளும் மரங்களும் சூழ்ந்த அழகிய சூழலில் சலசலக்கும் ஓடைக்கரையில் அமைந்துள்ளது. ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக எழுந்தருள்கிறார் ஆஞ்சநேயர்.
தொகுப்பு : ஆதலையூர் த. சூர்யகுமார்
உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்