##~## |
''அத்வானி முதல் ஜெயலலிதா வரை மன்மோகன் சிங்கைச் 'செயல்படாத பிரதமர்’ என்று குற்றம் சாட்டுகிறார்களே?''
''யார் சொன்னது..? பெரு முதலாளிகளுக்கும், அமெரிக்காவுக்கும், தனது அமைச்சரவையில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவாகச் 'செயல்படத்தானே’ செய்கிறார் அவர்!''
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
''முதல்வர் ஆகும் கனவுடன் நடிக்கலாம். ஆனால், முதல்வர் ஆன பிறகு நடிக்கக் கூடாதாமே... என்னங்க இது?!''
''முதல்வர் ஆனதும் சினிமாவைத் துறந்தது ஏன் என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர். சொன்ன விளக்கத்தைப் படியுங்கள்: 'சட்டத்துக்குத்தான் கட்டுப்பட வேண்டும் என்று இல்லை. மரபு என்கிற முறையிலும் சில முடிவுகளுக்குக் கட்டுப் படத்தான் வேண்டும். நேரு பிரதமராக இருந்த சமயம், முதல்வர் பதவியில்

இருக்கும்போது, யாரும் எந்த நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கக் கூடாது என்ற மரபினை அனைத்து முதல்வர்களையும் கடைபிடிக்கச் சொன்னார். அதனால்தான் முதல்வரான பிறகு நான் நடிப்பதை நிறுத்த நேரிட்டது. சட்டப்படி நடிப்பதைத் தடுக்க முடியாதுதான். ஆனாலும் மரபுப்படி நடந்து வருகிறேன்!’ ''
- ஜி.சிவராமகிருஷ்ணன், தேனி.
''கோடைக்கு ஏற்றாற்போல ஒரு குளுகுளு கவிதை..?''
''மலையாளக் கவிஞர் பி.ராமனின் கவிதை வரிகள் இவை...
'உன் பாத்திரத்தை
நிறைக்க
அருவிக்கு
ஒரு புன்னகை போதும்!’ ''
- கா.மதிவதனி, சேலம்.
''லிபியா அதிபர் கடாபி வீடு மீதான தாக்குதல், ஒசாமா பின்லேடனை வீழ்த்தியது என்று அமெரிக்காவுக்கு உலக மக்களின் மீதும் அமைதியின் மீதும் அக்கறை அதிகம்தானே?''
''அதுதான் உண்மை என்றால், அமெரிக்கப்படைகள் உடனடியாகச் செல்ல வேண்டிய இடம்... இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மாளிகை!''
- அமுதா, நாமக்கல்.
''ஒரு சிரிப்பு அரசியல் ஸ்டேட்மென்ட்?''
'அட்சய திருதியை நாளில் ம.தி.மு.க -வின் 18-வது ஆண்டு விழா தொடங்கு வது நம்பிக்கை அளிக்கிறது!’ - நாஞ்சில் சம்பத்.
ஹைய்யோ... ஹைய்யோ!''
- எஸ்.கபிலன், திண்டிவனம்.
