தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண, உத்தரப் பிரதேச முன்மாதிரியை ஆளுநர் பின்பற்றலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் ஆட்சியமைக்க ஒருவர் உரிமை கோரினால் அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாம். அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு உத்தரவிடலாம். இரண்டு பேர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், உத்தரப் பிரதேச முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு இருவருக்கும் உத்தரவிடலாம். உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1998-ல் இதுபோன்ற சூழல் ஏற்பட்டது. ஜெகதாம்பிகா பால் மற்றும் கல்யாண் சிங் ஆகிய இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இருவருமே தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினர். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது' என உ.பியில் நடந்த சம்பவத்தை வைத்து சிதம்பரம் மேற்கோள் காட்டி உள்ளார்.