அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. கிளைக்கழக, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பெற்றுவருகிறார்கள்.

உட்கட்சித் தேர்தல் என்பது நடந்தாலும், தலைமை விரும்புகின்ற நபர்களே மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுவந்தனர். இதனால் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடுவதில்லை. தங்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையையே பல மாவட்டச் செயலாளர்கள் உருவாக்கிவைத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த நிலையில்தான் மதுரை மாநகரச் செயலாளர் பதவியில் 10 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் செல்லூர் ராஜூவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எஸ்.எஸ்.சரவணன், ராஜாங்கம், முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து, ஜெ.பேரவை நிர்வாகி மாரிச்சாமி ஆகியோர் போட்டியிட மனு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கந்தன், பெரும்பாக்கம் ராஜசேகரன் ஆகியோர் மதுரை மாநகரத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு எதிராக யாரும் மனு அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், நேற்று சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை சென்ற செல்லூர் ராஜூ, தனது மருமகன் மூலம் வேட்புமனுவை அளித்தார். அதன் பிறகு தனக்குப் போட்டியாக நான்கு பேர் விண்ணப்பித்திருக்கும் தகவல் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாராம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்லூர் ராஜூ கட்டுப்பாட்டிலுள்ள நான்கு தொகுதிகளில் அவர் மட்டும் வெற்றிபெற்றார். மற்ற மூன்று தொகுதிகளில் அவர் கவனம் செலுத்தவில்லை என்ற புகார் கட்சியினரால் எழுப்பப்பட்டுவரும் நிலையில் அவருக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய செல்லூர் ராஜூவின் எதிர்க் கோஷ்டியினர், "அவரையும், அவருக்கென்று ஓர் ஆதரவாளர் கூட்டத்தை மட்டும் வளர்த்து கட்சியை அழித்துவிட்டார். கட்சியில் காலம் காலமாக உழைத்தவர்களையும், மூத்தவர்களையும் புறக்கணித்துவந்தவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும், மாநகராட்சித் தேர்தலின்போதும் பல சீனியர்களைப் புறக்கணித்தார். அதனால்தான் அவரை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டோம்.

அதுமட்டுமில்லாமல் கட்சித் தேர்தலுக்கான விண்ணப்பங்களை கட்சி அலுவலகத்தில் வாங்க வேண்டும் அல்லது வேறு மண்டபத்தில் வைத்து வாங்க வேண்டும். ஆனால், செல்லூர் ராஜூவின் தனிப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்குகிறார்கள். தேர்தல் பொறுப்பாளர்களுடன் செல்லூர் ராஜூவின் மருமகனும் மனுக்களை வாங்குகிறார். இது குறித்து தலைமைக்கு புகார் செய்யவிருக்கிறோம்" என்று கொந்தளிக்கிறார்கள்.
செல்லூர் ராஜூ தரப்போ, ``உட்கட்சித் தேர்தல் தலைமைக்கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் நேர்மையாக நடைபெற்றுவருகிறது. கட்சி உறுப்பினர் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம். இதுதான் ஜனநாயகம் " என்கின்றனர்.

அதிமுக-வைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் எனும் கட்சிப் பதவி என்பது அதிகாரமிக்கது. அதனால்தான் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்து கைப்பற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் செல்லூர் ராஜூவுக்கு எதிராக மாநகரச் செயலாளர் தேர்தலில் நான்கு பேர் மனுத்தாக்கல் செய்திருப்பதால், முடிவு என்ன என்பதை அறிய அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.