தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, ”கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளன. பகுதி மக்களின் கோரிக்கை என்னவென்றால் நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது. இந்த நிலையில், திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான் பாக்கி. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம்.

இந்த அரசு திருமணத்தை நல்லபடியாக நடத்தித் தர வேண்டும்” என்றார். இதையடுத்து, ``பெண் பார்த்திருக்காங்க” என்றார் சபாநாயகர் அப்பாவு. இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``கோவில்பட்டியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் ஓர் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல் தூத்துக்குடியில் ஏற்கெனவே ஓர் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. எனினும், கோவில்பட்டியில் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைத்திட வேண்டும் என உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டே தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை.

இருந்தாலும் பரவாயில்லை. பெண் பார்க்கும் சூழ்நிலை மட்டும்தான் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும்கூட இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயம் நடத்தி வைக்கப்படும்” என்றார். நிச்சயதார்த்தம், திருமணம் என அ.தி.மு.க எம்.எல்.ஏ பேசியதும், அமைச்சர் பதில் கூறியதும் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.