`வானத்தைப்போல, புலன் விசாரணை!' - விஜயகாந்துக்கு ஆளுநர் தமிழிசையின் வித்தியாச வாழ்த்து

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று, தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களின் பெயர்களைக்கொண்டு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களின் பெயர்களைக்கொண்டு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள, வாழ்த்துச் செய்தியில், `` `வானத்தைப் போல’ பரந்த மனதுடன் இருப்பதால், அனைவரின் அன்பையும், `மரியாதை’யையும் பெற்று `புலன் விசாரணை’ செய்தாலும், எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் `சகாப்தமாக’, `கேப்டனாக’, `மரியாதை’யுடன் `நெறஞ்ச மனசு’டன் வலம்வந்துகொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜயகாந்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா கவர்னர் ஆன பிறகு, பாட்டு, கவிதை, ஒரு நிமிடக் கதைகள் என சமூக வலைதளங்களில் அசத்திவரும் தமிழிசை, தற்போது வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.