கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவலியின் மகள் ரேணுகா பெங்களூரிலுள்ள மாநிலச் சட்டசபைக்கு அருகில் BMW காரில் வேகமாக வந்திருக்கிறார். அப்போது சாலைவிதியை மீறி காவலர்களின் வாகனத்தை வேகமாக முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை ரேணுகா வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது, வாகனத்தை முந்திச் சென்றதற்காக தன்மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும், தான் சாலைவிதியை மீறவில்லை என்றும், தன்னைச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ``நான் யார் தெரியுமா... என் அப்பா யார் தெரியுமா?" என்ற தொனியில் மிரட்டும்விதமாகப் பேசியதாகவும், அங்கிருந்த ஊடகவியலாளரின் கேமராவைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் காவலர்கள் அவருக்கு அபராதம் விதித்து காரைச் செல்ல அனுமதித்தனர். இவை அனைத்தும் அந்த ஊடகவியலாளரின் கேமராவில் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவலி இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம், “ஒரு சிறிய சம்பவம் நடந்துவிட்டது. என் மகள் அவளின் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறையின் பாதுகாப்பு வாகனத்தை முந்திச் சென்றிருக்கிறார்கள். அப்போது காவல்துறை என் மகளின் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அதன் பிறகு, அவள் நண்பன் தருணுக்கு அபராதம் விதித்துள்ளனர். அங்கிருந்த ஊடகவியலாளரை என் மகள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வீடியோவைப் பார்த்தேன் அதில் `சார்...’ என்றுதான் பேசுகிறார். எனவே, ஊடகங்களைக் காயப்படுத்தியிருந்தால் இதைப் பொருட்படுத்த வேண்டாம். அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
