முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மறைமுகமாக நிலவிவந்த பனிப்போர், செயற்குழுக் கூட்டத்தில் வெளிப்பட்டது. கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் ஓ.பி.எஸ்., தனது காரிலிருந்து தேசியக்கொடியை அகற்றிவிட்டதாகவும், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் செய்திகள் றெக்கை கட்டிப்பறக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் நாகையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் ஓ.எஸ்.மணியன் அளித்த பதில்களும்...
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறதா?
தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2016-ல் ஆண்டு கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்து அ.தி.மு.க சரித்திரம் படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல 234 தொகுதியிலும் அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறது. எனவே, கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.
முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு இருவர் வீட்டிலும் அமைச்சர்களோடு ஆலோசனை நடக்கிறதே..?
முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது வீடுகளுக்கு மற்ற அமைச்சர்கள் செல்வது வழக்கம்தான்.

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை என்று கேள்வி எழுந்திருக்கிறது. நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள்?
இப்போது இரட்டைத் தலைமை செயல்படுகிறது.
முதல்வர் வேட்பாளராக யாரை ஏற்றுக்கொள்வீர்கள்?
அது நான்கு சுவர்களுக்குள் கழகத்தில் எடுக்கப்படும் முடிவு.
`எல்லோரையும் பதவியில் அமர்த்தியது சசிகலா’ என்று செயற்குழுவில் பேச்சு நடந்திருக்கிறது. சசிகலா வந்தால் மாற்றம் வருமா?
கடந்தகாலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தைப் பற்றி யோசியுங்கள்.
முதல்வர் வேட்பாளர் யார் என்ற போர் நடப்பது தேர்தல் வெற்றியை பாதிக்காதா?
அ.தி.மு.க-வில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை.