Published:Updated:

ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயம்?! - மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி

ஏக்நாத் ஷிண்டே
News
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சூரத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:

ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயம்?! - மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி

மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சூரத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே
News
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நடந்த ராஜ்ய சபா தேர்தல், சட்டமேலவைத் தேர்தலில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஷ் அகாடியை தோற்கடித்து பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. நேற்று நடந்த சட்டமேலவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இந்தத் தேர்தல் முடிவு சிவசேனா கூட்டணிக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதோடு இந்தத் தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் கட்சி மாறி பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது. அவ்வாறு கட்சி மாறி வாக்களித்த 11 எம்.எல்.ஏ-க்களை இப்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம், சூரத்தில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

சிவசேனா
சிவசேனா

அமைச்சர் உட்பட எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை என்றவுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று நள்ளிரவு வரை கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கட்டுக்கோப்பான கட்சியாகக் கருதப்பட்ட சிவசேனாவிலிருந்து பாஜக-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் தாவ முடிவு செய்திருப்பது சிவசேனாவை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு உத்தவ் தாக்கரே மீண்டும் கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார். ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சென்றிருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் மூத்த தலைவராகத் திகழ்ந்துவருகிறார்.

மும்பையையொட்டி இருக்கும் தானேயில் சிவசேனாவின் தூணாக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேயின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையைச் சுதந்திரமாக நடத்த உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அனுமதிக்கவில்லை என்றும், கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டதாகவும் ஏக்நாத் ஷிண்டே வருத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்தனர்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார், தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் குற்றம்சாட்டினர். சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட்டால் கூட்டணிக் கட்சிகளின் பகையைச் சம்பாதிக்கவேண்டி வரும் என்று கருதி உத்தவ் தாக்கரே ஒதுங்கியிருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாஜக மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பல முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை சந்தித்த பாஜக, இப்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது. இதற்கு சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனாவில் 56 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து சென்றால்தான் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ.-க்களும் இருக்கின்றனர். மொத்தமுள்ள 288 எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் இறந்துவிட்டார். இரண்டு பேர் சிறையில் இருக்கின்றனர். சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்கள் 29 பேர் இருக்கின்றனர். அவர்களில் எட்டுப் பேர் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். பாஜக-வுக்கு ஏழு பேர் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் இறந்துவிட்ட நிலையில், கூட்டணிக்கு 150 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறது. இதில் சிவசேனாவிலிருந்து 11 பேர் பாஜக பக்கம் சென்றுவிடும் பட்சத்தில் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்களும் பாஜக பக்கம் தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் ஆட்சியை எப்படிக் காப்பாற்றுவது என்ற சங்கடத்தில் உத்தவ் தாக்கரே இருக்கிறார். இது குறித்து சிவசேனாவிலிருந்து விலகி பாஜக-வில் சேர்ந்து மத்திய அமைச்சராகியிருக்கும் நாராயண் ராணே கூறுகையில், ``என்ன காரணத்துக்காக எம்.எல்.ஏ-க்கள் காணாமல் போயிருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் கருத்து கூறக் கூடாது” என்று தெரிவித்தார்.