திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்குவதில் அரசுக்கு ரூ.77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பொருள்களைக் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்காமல், தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்க முயன்றுள்ளனர். இதற்காக ரூ.450 கோடிக்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க, அந்த நிறுவனத்திடமிருந்து ரூ.100 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இதையடுத்து, பொங்கல் பொருள்களை தரமானதாக வழங்காத நிறுவனங்கள், வரும் காலங்களில் எந்த ஒப்பந்தத்திலும் கலந்துகொள்ளக் கூடாது என தமிழ்நாடு முதல்வர் அந்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் வைத்துள்ளார். அதில் ஒன்றான, ’அனிதா டெக்ஸ் கார்டு’ என்ற தனியார் நிறுவனம் மீண்டும் தற்போது இந்த ஒப்பந்தத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஊட்டச்சத்துப் பொருள்களை ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஏன் அரசு அனுமதி அளிக்கவில்லை... இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் இரண்டு நாள்களில் திறக்கப்படவுள்ளன. அப்போது குறைந்த விலைப் பட்டியல் கொடுத்த இரண்டு நிறுவனங்களின் விவரத்தை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்றவரிடம், அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ``அதிமுக, பாஜக இடையிலான உறவில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறிய கருத்து அவரவரின் தனிப்பட்ட கருத்து. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடைய கருத்துகள்தான் அந்தக் கட்சியின் அதிகாரபூர்வமான கருத்துகள். எனவே, இரண்டாம் கட்டத் தலைவர்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை” என்றார்.