ஜம்மு காஷ்மீர் அடிக்கடி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாவது வழக்கம். சிறப்பு அந்தஸ்து 370 நீக்கியதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் குறித்துப் பேசிவருகிறார்.
இன்று ஜம்மு காஷ்மீரில் புதிய திட்டத்தை (The District Good Governance Index) தொடங்கிவைத்துப் பேசிய அமித் ஷா, ``ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லை நிர்ணயம் தொடங்கிவிட்டது, விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்புநிலைக்கு வந்தவுடன், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உறுதி அளித்துள்ளேன். இங்கு இருக்கிற மூன்று குடும்பக் கட்சிகளும் அரசியல் லாபத்துக்காகப் பொய்ப் பிரசாரம் செய்கின்றன. அதனால்தான் இங்கு ஜனநாயகம் அடிமட்டத்தை எட்டியுள்ளது.

இளைஞர்கள் அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம். 370-வது பிரிவை ரத்து செய்த பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 40 சதவிகிதம் குறைந்துள்ளன. கொலைகள் 87 சதவிகிதம் குறைந்துள்ளன. 2019-க்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். அரசின் திட்டத்தில் மக்கள் நேரடிப் பலன்களைப் பெறுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பிறகு, நிலைமை ஓரளவு சீரானதை அடுத்து படிப்படியாகக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

இதற்கிடையே, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்குள்ள கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மாநிலங்களவையில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ``ஜம்மு - காஷ்மீரில் இயல்புநிலை முழுமையாகத் திரும்பிய பிறகு அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்’’ என்றார்.
அதை உறுதி செய்யும்விதமாக மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிவருகிறார்.