கொடைக்கானல்: பா.ஜ.க பிரசாரத்துக்கு வந்த வேலூர் இப்ராஹிம் - எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரத்துக்கு வேலூர் இப்ராஹிம் என்பவர் கொடைக்கானல் வந்திருந்தார். மைக் பிடித்து அவர் பேச ஆரம்பித்ததும், நாம் தமிழர் கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று பா.ஜ.க சார்பில் திட்டமிடப்பட்டிருந்த குடியரசு தின விழாவுக்கு, ஏகத்துவ பிரசார ஜமாத் கட்சியின் தலைவர் வேலூர் இப்ராஹிம் அழைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் வாகனத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அவரை, அப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பா.ஜ.க நிர்வாகிகள், அவரை பேசச் சொல்ல, மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார் இப்ராஹிம்.

அப்போது, அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் சிலர், இப்ராஹிம் பேச எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இப்ராஹிமை கீழே இறங்குமாறும் கூறினர். அதைப் பொருட்படுத்தாமல் இப்ராஹிம் தொடர்ந்து பேச முயன்றார்.
அதைக் கண்ட அவர்கள், பிரசார வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், அங்கே கூடியிருந்த பா.ஜ.க-வினருக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்த காவல்துறையினர், இப்ராஹிமை வாகனத்திலிருந்து இறக்கி, அருகே இருந்த கடை ஒன்றின் உள்ளே அழைத்துச் சென்று பாதுகாப்பாக அமரவைத்தனர்.

இப்ராஹிமுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் என சுமார் 40 பேரை போலீஸார் கைதுசெய்தனர். ஏகத்துவ தப்லீக் ஜமாத் கட்சியின் தலைவர் பா.ஜ.க-வின் பிரசாரத்துக்கு வந்ததும், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.