நடிகை ஸ்ரீதேவி தன் உறவினரான மோஹித் மர்வாவின் திருமணவிழாவில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தார். அப்போது அவர் ஜுமைரா க்ரூப் ஹோட்டலில் ஒன்றான எமிரேட்ஸ் டவரில் தங்கியிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
அவருக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்துவது மட்டுமல்லாமல் அவருடைய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறது. இன்னும் அவருக்கு பிரேத பரிசோதனை நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. துபாய் காவல் துறையோடு இணைந்து இந்திய தூதரங்கமும் ஃபாரன்சிக் ஃபாமாலிட்டிகளை முடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீதேவியின் உடல் இருக்கும் அல்குஸைஸ் போலீஸ் மார்ச்சுவரியில் அவரின் ரசிகர்கள் கூட்டமாக காத்திருக்கிறார்கள். ஆனாலும் துபாயின் கட்டுப்பாடுகள் காரணமாக, பெரும்கூட்டம் அனுமதிக்கப்படவில்லை. அதில், மிகப்பெரிய ஆச்சரியமென்னவென்றால் மாரடைப்பில் இறந்ததாகச் சொல்லப்படும் ஸ்ரீதேவிக்கு இதுவரை இதய நோய்களுக்கான எவ்வித அறிகுறியும் இருந்ததில்லையென்று அவரது மைத்துனரும் நடிகருமான சஞ்சய்கபூர் சொல்லியிருக்கிறார். ஸ்ரீதேவியின் உடல் முகேஷ் அம்பானியின் ப்ரைவேட் ஜெட் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
