தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரி சரக்குப்பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் காந்தி மண்டபம் அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்துவருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி சரக்குப்பெட்டக மாற்று முனைய மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.
கீழ மணக்குடி, கோவளம் உள்ளிட்ட சுமார் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடற்கரை வழியாக கறுப்புக்கொடியுடன் ஊர்வலமாக நடந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் குவிந்தனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.