தமிழகத்தில், ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் 45 நாள் மீன்பிடித் தடைக்காலம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, 13 கடலோர மாவட்டங்களிலும், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டி, குறிப்பிட்ட சில தினங்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களிலும் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியதால், சுமார் 5,600 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தடைக்காலத்தின்போது மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை, தடைக்காலத்தின்போதே அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் கைது நடவடிக்கைகளாலும், தொடர் தாக்குதல்களாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில், மீன்பிடித் தடைக்காலம் மேலும் வாழ்வாதாரப் பிரச்னையை அதிகரிக்கும். எனவே, தடைக்காலத்தின் போதே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.