கோவை, போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஷீத். இறைச்சிக்கடை நடத்திவருகிறார். இவரின் மகன் ரைஃபுதீன் (வயது 8) 3-ம் வகுப்புப் படித்துவந்தான். கடந்த 22-ம் தேதி, சிறுவன் ரைஃபுதீன் அவர்கள் வசிக்கும் தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தான்.

அதே பகுதியைச் சேர்ந்த சையது முகமது ஃபெரோஸ் (34) என்பவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்த நிலையில், சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, சையது தன் காரை பார்க்கிங் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த கார், சைக்கிள் ஓட்டிவந்த சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில் தடுப்பு சுவரின்மீது தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு நெஞ்சு, காது, மூக்குப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதற்கிடையே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது, கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.