முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்திலுள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியரும் கலாம் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர். இதையொட்டி அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் நடந்த வலைதள கருத்தரங்கில் பங்கேற்ற திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

`மக்களின் ஜனாதிபதி’ என அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். ராமேஸ்வரத்திலுள்ள எளிய குடும்பத்தில் பிறந்து, தனது கல்வி அறிவால் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர். ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராகவும் திகழ்ந்தவர். அக்னி, பிருத்வி எனப் பல ஏவுகணைகளை உருவாக்கியதில் முதன்மையானவராக இருந்ததால், நாட்டின் அக்னி நாயகனாகப் போற்றப்பட்டவர். உயர் பதவிகளில் இருந்தபோதும் மாணவர்கள் - இளைஞர்கள் இடையே கல்வி அறிவை வளர்ப்பதிலும், தன்னம்பிக்கையை விதைப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். அதை மெய்பிக்கும் வகையில் கடந்த 2017-ல் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்தது. நாளெல்லாம் நாட்டுக்காகவும், மாணவர்களுக்காகவும் உழைத்த டாக்டர் அப்துல்கலாமின் 89-வது பிறந்த தினம் இன்று.

தமிழக அளவில் மாணவர்கள் தினமாகக் கொண்டாடப்படும் இந்நாளில் ராமேஸ்வரத்திலுள்ள டாக்டர் அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் சிறப்பு தொழுகை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், உதவி ஆட்சியர் சுகபுத்ரா, ராமேஸ்வரம் காவல் உதவி கண்காணிப்பாளர் சிவாஜ், கலாமின் அண்ணன் முகம்மது முத்து மீரா மரைக்காயரின் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் சேக், சலீம் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

முன்னதாக டாக்டர் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட வலைதள கருத்தரங்க நிகழ்ச்சியில் திபெத்திய மத தலைவர் தலாய்லாமா பங்கேற்று கலாமுடனான தனது நட்பு குறித்த நினைவுகளைப் பகிந்துகொண்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு தலாய் லாமா பதிலளித்தார். இந்தநிகழ்வில், உலக அமைதிக்கு மாணவர்களின் பங்கு, கொரோனாவை எவ்வாறு எதிர்கொள்வது, மாணவர்கள் தங்களின் மனதை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து பிரதமரின் கனிம வள நலத்திட்டம், மாவட்ட கனிம வள அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் அறக்கட்டளையின் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கிவைத்தார். நடிகர் தாமு இதில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்.

கலாம் அவர்களுடன் ஆரம்பக் கல்வி பயின்ற ராமேஸ்வரம் எண் 1 தொடக்கப்பள்ளியில் நடந்த R2R விஷன் எக்ஸ்பிரஸ் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், மாணவர் நூலகம் அமைக்கும் வகையில் 89 மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் அறக்கட்டளை தலைமை நிர்வாகச் செயலர் மணிவண்ணன், கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.