ராமேஸ்வரத்தில் பிறந்து, உலக நாடுகளை வியக்கவைத்து இந்தியாவுக்குப் பெருமைகள் சேர்த்தவர் டாக்டர் அப்துல் கலாம். 2015-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி மேகாலயாவில் அவருக்கு மிகவும் பிடித்த மாணவர் சமூகத்திடம் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்தது. அவரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட் பேய்க்கரும்பு எனும் இடத்தில் மத்திய அரசு தேசிய நினைவிடம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் (104) வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு (7.03.2021) ராமேஸ்வரத்திலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவர் காலமானதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவரகள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்துல் கலாமின் இறப்புக்குப் பின் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி தற்போது மறைந்த, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்து மீரான் அவர்களின் பூத உடல், ராமேஸ்வரத்திலுள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் காலை சுமார் 11 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

முத்து மீரானின் பேரன் சேக் சலீம் நம்மிடம் பேசியபோது, "தாத்தாவுக்குக் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை. 104 வயதை அடைந்த அவருக்குத் தன் தம்பியின் இறப்பு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்தது. `நான் உயிரோடு இருக்கிறேன் என் தம்பி அப்துல் கலாம் இறந்துவிட்டானே...’ என்று அடிக்கடிச் சொல்லி வருத்தப்படுவார். கடந்த இரண்டு மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருந்துவந்தார். தற்போது அவரின் உயிர் பிரிந்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள எனப் பலரும் நேரிலும் போனிலும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்” என்று கூறினார்.