சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புக் கட்டடங்களின் திட்ட அனுமதியும், கட்டட அனுமதியும் சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத்துறை சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. 5,000 சதுர அடிக்குக் குறைவான கட்டடங்களுக்கான அனுமதி அந்தந்த மண்டலங்களிலும், அதற்கு மேற்பட்ட அளவுடைய கட்டடங்களுக்கான அனுமதி ரிப்பன் கட்டடத்திலுள்ள நகரமைப்புப் பிரிவு மூலமாகவும் வழங்கப்படுகிறது.

திட்ட அனுமதி பெறும் நபர்கள், அந்த அனுமதியில் குறிப்பிட்ட அளவிலும், அந்தத் திட்டத்தின்படி மட்டுமே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும், திட்ட அனுமதியைத் தாண்டித்தான் பலரும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகத் தொடர் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நேரடிக் கள ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது திட்ட அனுமதியைத் தாண்டி, விதிமீறலில் ஈடுபட்டுள்ள கட்டடங்களின் கட்டுமானப் பணியை நிறுத்தச் சொல்லி நோட்டீஸ் வழங்கியும், கட்டடங்களுக்குச் சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் உள்ள 7,000-க்கும் அதிகமான கட்டடங்களில் ஆய்வுநடத்தினர். அவற்றில், 6,500-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள 1,400-க்கும் அதிகமான கட்டடங்களின் கட்டுமானப் பணியை நிறுத்தச் சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விதிகளை மீறிய 1,200 கட்டடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்ட கட்டங்களுக்குச் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கட்டடங்கள் கட்டுபவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால், உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.