சென்னை: அளவுக்கு அதிகமாக வைட்டமின் மாத்திரைகள்; ஆபத்தான நிலையில் குழந்தை! - மீட்ட அரசு மருத்துவர்கள்

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, அளவுக்கு அதிகமாக வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமரேசன், இவரின் மனைவி கனிமொழி. இந்தத் தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை பவ்யா. கனிமொழி வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டுவந்தார். வைட்டமின் மாத்திரைகள் குழந்தை பவ்யாவின் கைக்கு எட்டும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அதை எடுத்த பவ்யா, அவற்றில் சில மாத்திரைகளைச் சாப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக பவ்யாவை கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரேசனனும் கனிமொழியும் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை அளவுக்கு அதிகமாக மாத்திரகளைச் சாப்பிட்டதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், குழந்தையின் உடல்நலம் மோசமானதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கும், அங்கிருந்து புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கும் பவ்யா கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பவ்யாவுக்கு ரத்தக்கசிவு, மூச்சுதிணறல் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை டாக்டர்கள், பவ்யாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு பவ்யாவின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது பவ்யா நலமாக இருப்பதாக சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை பவ்யாவைக் காப்பாற்றிய சென்னை எழும்பூர் குழந்தைகள் நல டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ``இரும்புச்சத்து மாத்திரைகளை குழந்தை பவ்யா, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நான்கு மருத்துவமனைகளில் பவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் பவ்யாவை கொண்டு வந்தார்கள். சரியான எதிர்ப்பு மருந்தை பவ்யாவுக்குக் கொடுத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறோம்" என்றனர்.