கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் குறித்தும், தில்லை காளி அம்மன் குறித்தும் தனியார் யூடியூப் சேனல் ஒன்று அவதூறாகச் செய்தி வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அந்தச் செய்திக்கு இந்து அமைப்புகளும் சிவனடியார்களும் கண்டனம் தெரிவித்ததுடன், குறிப்பிட்ட அந்தச் செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தனர்.

அதேபோல அந்தத் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதன் உரிமையாளரை கைதுசெய்ய வேண்டும் என்று கூறிய சிவனடியார்கள் கூட்டமைப்பு, நேற்று (23-ம் தேதி) அனைத்து சிவனடியார்களும் சிதம்பரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இருக்கும் சிவனடியார்கள் நேற்று காலை முதலே சிதம்பரத்தில் குவிய ஆரம்பித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசலில் திணறியது சிதம்பரம். அதன் பிறகு நடராஜர் ஆலயத்தினுள் சென்ற சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை இசைத்து நடனமாடி, கனகசபை மீறி ஏறி தேவாரம் பாடி நடராஜரை வழிபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிவனடியார்களுக்கு மூன்று வேளைகளும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் திருவாரூர் நடராஜன் சுவாமிகள், திருக்கழுங்குன்றம் சிவனடியார் தாமோதரன், கள்ளக்குறிச்சி பாசார் சிவபாலன், சென்னை சிவதாவூர் அடிகள் உள்ளிட்டவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்தில், ”நடராஜர் மற்றும் தில்லைக் காளி குறித்து அவதூறு செய்தியை வெளியிட்ட தனியார் யூடியூப் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியிருக்கின்றன.
ஆனாலும் அந்த நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதன் பிறகு அங்கிருந்து சிவனடியார்கள் கலைந்து சென்றனர்.